என்ன சொல்கிறது, என் ஜாதகம்?



குலதெய்வ வழிபாட்டை குறையின்றி நிறைவேற்றுங்கள்!

?எனது மகன் ஜாதகம் இணைத்துள்ளேன். அவருக்கு மிகுந்த இறை நம்பிக்கை உண்டு. ஆனாலும் தடுமாற்றங்களும், உடல் உபாதைகளும், அச்ச உணர்வும் நிறைய இருக்கின்றன. வியாபாரத்திலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. பல ஹோமங்கள் செய்தாகிவிட்டது. பித்ரு தோஷ நிவர்த்தியும் செய்து விட்டோம். எப்பொழுது இந்த நிலை மாறும்? ஏதேனும் கண்டம் உண்டா? - ஒரு வாசகர், சென்னை-34.

தங்கள் மகனின் ஜாதகப்படி லக்னாதிபதி செவ்வாய் 8ல் சுக்கிரனுடன் பகை வீட்டில். 7ல் சூரியன் பகை. பாக்யஸ்தானாதிபதி சந்திரன் 11ல் ராகுவுடன். இந்த அமைப்புப்படி சராசரியாக வாழ்க்கை செல்லும். ஒவ்வொரு முயற்சியிலும் தடங்கல்களை தாண்டியே வெற்றி பெறக்கூடிய சூழல் உண்டு. ஏற்கெனவே ஒரு கண்டம் இருந்தது. தற்போது அதைக் கடந்து வந்துவிட்டார், கவலை வேண்டாம். குலதெய்வ வழிபாடு தடைபட்டுள்ளது. சுவாதி நட்சத்திரத்தன்று ஸ்ரீலஷ்மி நரசிம்மருக்கு விரதம் இருந்து பானகம் நெய்வேத்யம் செய்து வரவும். 2018 பிப்ரவரிக்கு பிறகு மாற்றத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். ஸ்ரீலஷ்மி நரசிம்ம மந்திர ராஜபத ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்துவரச் சொல்லுங்கள்.

?என் மகனுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தம்பதிக்குள் கோபம், சகிப்புத்தன்மை இல்லாமை போன்ற காரணங்களால் சில சமயங்களில் கஷ்டமாக உள்ளது. அவர்கள் ஒற்றுமையுடன் குடும்பம் நடத்தவும், அவர்கள் வாழ்க்கை மேலும் சிறப்பாக இருப்பதற்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- கிருஷ்ணமூர்த்தி, சென்னை-53.

தங்கள் மகன் மற்றும் மருமகள் ஜாதகப்படி அவர்களுக்குள் சிறு சிறு சச்சரவுகள் ஏற்படுவது சகஜமே. மற்றபடி பெரிய அளவில் தம்பதிகளுக்குள் மன வேற்றுமைக்கான வாய்ப்பே இல்லை. தினமும் காலையில் 6 மணிக்குள் குலதெய்வத்திற்கு வீட்டிலேயே ஒரு அகல் தீபம் நல்ல நெய் சேர்த்து ஏற்றி வரச் சொல்லுங்கள். நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம் கேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறம் அருளிக் கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே இந்தப் பதிகத்தை தினமும் ஐந்து முறை இருவரையும் சொல்லச் சொல்லி சிவபெருமானையும், அம்பாளையும் வழிபடுமாறு அறிவுறுத்துங்கள்.

?எனது மகனுக்குப் பல வருடங்களாக வரன் பார்த்து வருகிறோம். இன்னும் அமையவில்லை. திருமணம் எப்பொழுது நடக்கும்? அவனுக்குக் காலில் வலி உள்ளது. எந்த வைத்தியத்திலும் குணமாகவில்லை. தற்சமயம் 41 வயது ஆகிறது. 30 வயதிற்கு மேல் ஜாதகப் பொருத்தம்  பார்க்க வேண்டாம் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். தங்கள் அபிப்பிராயம் என்ன?
- சுதர்சன், சென்னை-80.

தங்கள் மகன் ஜாதகப்படி லக்னாதிபதி குரு சந்திரனுடன் சேர்ந்து 6ல் மறைந்திருக்கிறார். 7க்குடைய புதன் 9ல் வக்ரமடைந்திருக்கிறார். சூரியனுடன் குடும்ப ஸ்தானாதிபதி சனி 8ல். களத்திரகாரகன் சுக்கிரன் செவ்வாயுடன் 10ல். இவ்வகை ஜாதக அமைப்பு திருமணத்தடை அல்லது இளவயதில் திருமணம் நடந்து பிரிந்து விடுதல் போன்ற நிலைமையைக் கொடுக்கும். பொதுவாகவே இவருக்கு திருமணத்தின் மீது வெறுப்போ அல்லது அச்சமோ இருக்கும். குலதெய்வ வழிபாடு உங்கள் குடும்பத்தில் தடைப்பட்டு இருக்கிறது. அதை உடனே நிறைவேற்றிவிடுங்கள். ஸக்தே பஜே த்வாம் ஜகதோ  ஜனித்ரீம் ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரண   தார்த்தி ஹந்த்ரீம் நமோ நமஸ்தே குஹ ஹஸ்த  பூஷே பூயோ நமஸ்தே ஹ்ருதி       ஸன்னி தத்ஸ்வ!!

இந்த மந்திரத்தை தினமும் பக்தியுடன் சொல்லி வரச்சொல்லுங்கள். அருகில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் வியாழன்தோறும் 2 தீபம் ஏற்றி வரச்சொல்லுங்கள். தடைகள் விலகி விரைவில் நல்லது நடக்கும். 30 வயதிற்கு மேல் ஆனால் மனப்பொருத்தம் போதும் என்று சில பெரியவர்கள் கூறியுள்ளனர். இருந்தாலும் ஒரு சில அடிப்படை பொருத்தங்கள் பார்க்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

?தற்சமயம் வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறேன். ஓய்வு பெற்றபின் தனியார் கல்லூரியில் 5 வருடம் வேலை பார்த்துள்ளேன். தற்சமயம் தற்காலிக ஆசிரியர் வேலைக்கு முயன்று வருகிறேன். கிடைக்குமா? வெளிநாடுகள் சுற்றுலா சென்றுவர வாய்ப்பு உள்ளதா? மகனின் ஆதரவு எப்படி இருக்கும்?  எனக்கு சொந்தமான நிலம் மற்றும் வீட்டுமனையை விற்க முயற்சி செய்து வருகிறேன். நல்ல விலை கிடைக்குமா? - பிரகாஷ், காஞ்சிபுரம்.

தங்களின் 70 வயதிலும் வேலைக்கு போக விரும்பும் தங்களின் எண்ணம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு உதாரணமாக இருக்கும் என்றால் மிகையில்லை. தங்களுக்கு லக்னாதிபதி சூரியன் 7ல் புதனுடன். புத்ர ஸ்தானத்தில் செவ்வாய் நட்புடன், புத்திரகாரகன் குரு நட்புடன். குருவுடன் செவ்வாயும் பரிவர்த்தனை. தங்கள் மகனின் ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். மகனை விட்டு சற்று தள்ளி இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வருகின்ற டிசம்பருக்கு மேல் நிலம் விற்பனை கண்டிப்பாக எதிர்பார்க்கும் லாபத்துடன் முடியும். வெளிநாடு சுற்றுப்பயணம் தாராளமாக செல்லலாம். தற்சமயம் வேலைக்கு முயற்சிக்க வேண்டாம். அருகில் உள்ள கோயிலுக்கு தினமும் சென்று வாருங்கள். ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம் உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்.
- என்ற ஸ்ரீமிருத்யுஞ்சய மந்திரத்தை தினமும் கூறி வாருங்கள்.

?எனது மகளின் ஜாதகம் இணைத்துள்ளேன். அமெரிக்காவில் உள்ள அவளது முதல் விவாகம் ரத்தாகிவிட்டது. இரண்டாவது திருமணம் எப்பொழுது நடக்கும்? பரிகாரம் என்ன?
- ஆர்.கணேசன், திருவனந்தபுரம். தங்கள் மகளின் ஜாதகப்படி லக்னாதிபதி சனி 9ல், லக்னத்தில் கேது, 7ல் ராகு பகை. களத்திரகாரகன் சுக்கிரன் 8ல் பகை. இவ்வகை ஜாதக அமைப்பு சரியான ஜாதகப் பொருத்தம் பார்க்காவிட்டால் பிரிவில் கொண்டு விட்டு விடும். தற்சமயம் நேரம் சாதகமாக உள்ளது. வருகின்ற ஏப்ரல் 2018ற்குள் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. குலதெய்வ வழிபாடு முடித்து ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி வரவேண்டும். இதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கைக்கு நீங்கள் தீபம் ஏற்றி உளமுருக வேண்டிக்கொள்ளுங்கள். சென்னியது உன் பொன் திருவடித் தாமரை.

 சிந்தையுள்ளே மன்னியது, உன் திரு மந்திரம் - சிந்துர வண்ணப் பெண்ணே.
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை  முறையே பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
-  என்ற அபிராமி அந்தாதியின் பத்ததியை தினமும் படித்து வருமாறு மகளுக்குச் சொல்லுங்கள்.

?எனது மகன் திருமணம் எப்பொழுது நடக்கும்? இப்பொழுது ஒரு கடையில் வேலைபார்க்கிறார். எப்பொழுது நல்ல, நிரந்த வேலை அமையும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- சண்முகம், உத்தமபாளையம்.

தங்கள் மகன் ஜாதகப்படி லக்னாதிபதி செவ்வாய் 5ல். புதன், சுக்கிரன் கேதுவுடன். சுக்கிரன் பகை, கேது நீச்சம். 7க்குடையவனும் களத்திரகாரகனும் ஆகிய சுக்கிரன் பகையானதாலும் குரு 3ல் பகையானதாலும் திருமணத்திலும் வருமானத்திலும், தடங்கல்களும் காலதாமதமும் ஏற்படுகின்றன. இவரது ஜாதகப்படி எதிலும் முடிவு எடுப்பதில் இவருக்குத் தயக்கம் இருக்கும். தாமதமாக எடுக்கும் முடிவும் இவருக்கு பலனளிக்காமல் இருந்திருக்கலாம். 5-11 என்ற அமைப்பில் உள்ள ராகு-கேது களத்திர தோஷத்தை கொடுக்கிறார்கள். இளம் வயதில் செய்யப்படும் விவாகம் பிரிவை ஏற்படுத்தலாம். ஆகவே காலதாமதம் ஆவதே நல்லது. 2018 ஜனவரிக்கு பிறகு நல்ல வேலையும் கிடைக்கும். 2019 அக்டோபருக்கு பிறகு முயற்சி செய்யவும் நல்ல வரன் அமையும். தாளும் மனமும் தலையும் குலையத்தரியலர்கள் மாளும் படிக்கு வரம் தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர் கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும் வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே! - என்ற வாராஹி மாலை பதிகத்தை தினமும் படித்து வரச்சொல்லுங்கள். குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்துவாருங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள முருகன் கோயிலில் தீபம் ஏற்றி வரச்சொல்லுங்கள். முடிந்தபொழுது ஒருமுறை திருச்செந்தூர் சென்று தீர்த்தமாடி முருகப் பெருமானை தரிசனம் செய்து வாருங்கள். நல்ல வேலையும், நல்ல மனைவியும் நிச்சயம் அமையும். ?

நான் 2014ல் டிப்ளமோ படிப்பு முடித்தும் தகுந்த வேலை கிடைக்காததால் ஒரு முன்னணி நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்துள்ளேன். அரசாங்க வேலைக்கு தேர்வெழுதி இருக்கிறேன். வேறு நிறுவனத்திற்கும் மனு போட்டுள்ளேன். எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? அல்லது இங்கேயே பணி நிரந்தரம் செய்வார்களா? வேறு வேலைக்கு முயற்சிக்கலாமா?
- ராதாகிருஷ்ணன், புதுவை.

தங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி சனி லக்னத்திலேயே இருக்கிறார். 9க்கு உடைய புதனும் சூரியனுடன் சேர்ந்து 9ல் சொந்த வீட்டிலேயே இருக்கிறார். 10ல் குரு, செவ்வாய், சந்திரன். தங்கள் ஜாதகப்படி வேலையில் அடிக்கடி மாறுதல் இருக்கலாம். தங்கள் மனம் அலைபாயும். ஒரு திருப்தியில்லாத நிலைமை இருக்கும். ஆனாலும் கவலை வேண்டாம். இவை அனைத்தும் இந்த டிசம்பருக்கு பின் சரியாகிவிடும். பிப்ரவரி 2018ல் வேலை மாற்றம் அல்லது வேலை நிரந்தரம் கண்டிப்பாக இருக்கும். அரசு வேலையை பொறுத்தவரை 2018 அக்டோபருக்கு பிறகு முயற்சிக்கலாம். தாங்கள் துன்பப்பட்ட காலம் கடந்துவிட்டது. திங்கள்கிழமை தோறும் குலதெய்வத்திற்கு விரதம் இருந்து வரவும். சனிக்கிழமைதோறும் பைரவருக்கு இரண்டு தீபம் ஏற்றி வழிபடவும். ஸ்ரீதேவி ஹி அம்ருதோத் பூதா கமாலா சந்த்ரசேபாநா விஷ்ணு பத்னீ வைஷ்ணவீச வராஹோஹச்ச ஸார்ங்கிணீஹரிப்ரியா தேவதேவி மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ - என்ற ஸ்ரீமகாலஷ்மியின் அற்புதமான இந்த மந்திரத்தை சிரத்தையுடன் தினமும் 21 முறை பாராயணம் செய்துவாருங்கள். வேலையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் நிச்சயம் உண்டு.

?எனது மகன், மருமகள் இருவர் ஜாதகங்களை இணைத்துள்ளேன். குழந்தை பாக்யம் மற்றும் உடல்நிலை பற்றி தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
- ஒரு வாசகி, சென்னை-34.

தங்கள் மகன் மற்றும் மருமகள் ஜாதகப்படி அவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டு. இந்த நேரத்திற்குள் பிறந்திருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் சிகிச்சை மூலம் பெற்றுக்கொள்ளவோ அல்லது வேறு ஒருவரின் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் வாய்ப்போ அமையும். வியாழக்கிழமைகளில் அருகில் உள்ள ஜீவசமாதி ஒன்றில் நெய் தீபம் ஏற்றி வரச் சொல்லுங்கள். உடல் உபாதைகள் நீங்கி மன நிம்மதி கிட்டும்.

இப்பகுதிக்குக் கேள்வி கேட்டு பதில் பெற விரும்பும் வாசகர்கள் எந்த ஜாதகருக்கு பிரச்னையோ அவருடைய ஜாதகம் மட்டும் அனுப்பிவையுங்கள். தங்கள் பிரச்னை என்ன என்பதை சுருக்கமாக, தெளிவாக எழுதுங்கள். தமது குலதெய்வம் தெரிந்தவர்கள், அதை மறக்காமல் குறிப்பிடுங்கள். என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

- ஸ்ரீவாராஹி உபாசகர் ஜோதிடர் தி.ஸ்ரீனிவாசராமன்