‘‘என் அறிவு சிறியது; உன் ஆட்சி பீடம் பெரியது’’



அர்த்தமுள்ள இந்து மதம் - 37

- கவிஞர் கண்ணதாசன்

பகவான் கீதையில் ஒரு இடத்தில் சொல்கிறான், ‘கூடுகின்ற பெருங்கூட்டத்தில் வெறுப்புக் கொள்’ என்று. தனிமையில் இனிமையைத்தான் அவன் அப்படிக் கூறுகின்றான். ‘தனிமை கண்டதுண்டு; அதிலே சாரம் இருக்குதம்மா’ என்றான் பாரதி. பரபரப்பான நகர நாகரிகத்தில் தனிமை எங்கே நமக்குக் கிடைக்கிறது? கிராமத்து நண்பர்கள் மேல் எனக்கொரு பொறாமை உண்டு. ஒவ்வொரு கிராமத்தைப் பார்க்கும்போதும், ‘நமது வாழ்க்கை இங்கேயே அமைந்திருக்கக் கூடாதா?’ என்றே நான் ஏங்குகிறேன்.

ஆயிரம் விலங்குகளால் காலையும், கையையும் பூட்டிக்கொண்டுவிட்ட நிலையில், இந்தஏக்கம் எப்போது தீரப்போகிறது? குளுகுளுவென்று காற்றடிக்கும் ஆற்றங் கரையையும், கரையில் இருக்கும் மரங்களையும், பச்சைப் புல்வெளியையும், பறந்து செல்லும் பட்சி ஜாலங்களையும், துள்ளியோடும் கன்றுக் குட்டிகளையும், தொடர்ந்து செல்லும் பசுக்களையும், ஆயர் மகளிரின் வளைகுலுங்கும் கைகளையும், களை எடுப்போரின் கலகலப்பையும், வைக்கோற் கட்டைத் தலையில் சுமந்து வரப்பிலே போகும் விவசாயிகளையும், அழகான கிராமத்துக் கோயில்களையும் பார்க்கப் பார்க்க மனது என்ன பரவசப்படுகிறது! எனது துன்பங்கள் அதிலே மறைகின்றன.

‘மலை வாசம் போனால் என் மனதில் இருக்கும் சுமைகளெல்லாம் இறங்கிவிடுகின்றன’ என்றார் ஜவஹர்லால் ஒருமுறை. கிராமம், நகரத்திலே இருப்பவனுக்குச் சுமை தீர்க்கும் பூமியாகிறது. ஆனால் கிராமத்திலே இருப்பவனின் நிலை என்ன? அங்கேயே உழன்று கொண்டிருப்பவனுக்கு இந்த அற்புதக் காட்சிகளும் துன்பங்கள்தானே? துன்பத்தை மனதிலேயே வைத்திருப்பவன், எங்கே போனாலும் துன்பம்தான். இறக்கி வைக்கத் தெரிந்தவன், எங்கே இருந்தாலும் இறக்கி வைத்துவிட முடியும்.

ஆனால், இறக்கி வைக்கும் இடமும் சுகமாக அமைந்துவிட்டால், அது தானாகவே உன்மனதிலிருந்து இறங்கிவிடும். தனிமையில் உட்கார்ந்துகொண்டு, ‘அது என்ன ஆகுமோ, இது என்ன ஆகுமோ?’ என்று அழுகின்றவன், எங்கே உட்கார்ந்து அழுதால் என்ன? ஆனால், இயற்கையாகவே துன்பங்களை அகற்றத் தெரிந்தவன் குளிர்ந்த சூழ்நிலையில் அவற்றை அடக்கிவிட முடியும்.

தனிமை - அதிலும் பலவந்தமான தனிமை - மனைவி மக்களைப் பிரித்துக் கொண்டு போய்ச் சிறையிட்ட தனிமை - அந்தத் தனிமையிலேதான் காந்திஜியின் சிந்தனைகள் வளர்ந்தன; நேருஜி உலக வரலாறு எழுதினார்; வினோபாஜி கீதையை முழுக்க ஆராய்ந்து தெரிவித்தார். நானும்கூட இருபத்தாறு வயதில் ஒரு காவியம் எழுதிவிட்டேன். ஞானிகள் தனிமையில் தோன்றிய தத்துவங்களே, இந்து மதத்தின் சாரம்.

பரமார்த்திக ஞானத்தைத் தெளிவாக விளக்குவதற்கு பரமஹம்ஸரின் தனிமை பயன்பட்டது. ஆல்வாய் நதிக்கரையில் ஆதிசங்கரர் மேற்கொண்ட தனிமையே, அத்வைத சித்தாந்தத்திற்கு ஆணிவேர். தனிமையாக உட்கார்ந்து சுகமாகச் சிந்தித்தால் அகக்கவலை, புறக்கவலை இருக்காது. எங்கே தனியாக உட்கார்ந்து சிந்தித்துப் பார். கற்பனை புறாவைப் பறக்க விடு. அழகான பெண் ஒருத்தியைக் காதலிப்பது போலவும், அடுக்கடுக்காகப் புகழ் மாலைகள் குவிவது போலவும், ஊரெல்லாம் உன்னைத் தேடுவது போலவும் கற்பனையை வளர்த்துக் கொள்.
அப்படியே வீடு திரும்பு; சாப்பிட்டு விட்டுத் தூங்கு. இனிமையான கனவுகள் வரும். சுமைகளையும், தொல்லைகளையும் பற்றி பயந்துகொண்டே படுத்தால் தூக்கம் பிடிக்காது. திடீர் திடீரென்று விழிப்பு வரும். கெட்ட கனவுகள் வரும்; அப்போது யாராவது மெதுவாகக் கூப்பிட்டால்கூடச் செவிட்டில் அடிப்பது போலிருக்கும். பயத்தினால் புலன்கள் மென்மையாகிவிடுகின்றன. தைரியத்தினால்தான் அவைகனமடைகின்றன.

தைரியத்தை வளர்ப்பதற்குத் தனிமையைப்போல சிறந்த சாதனம் வேறெதுவும் இல்லை. அதிலும் பசுமை நிறைந்த காடுகளில் நடந்து சென்றால் ஒரு உற்சாகமும், தைரியமும் வரும். அதனால்தான் ஞானிகள் தங்கள் வாழ்க்கைக்குக் காடுகளை தேர்ந்தெடுத்தார்கள். கட்டுப்பாடற்ற சிட்டுக் குருவிகள், மரமேறித் தாவும் குரங்குகள், துள்ளித் திரியும் மான் குட்டிகள் - இவற்றைக் காணும்போது உள்ளம் எவ்வளவு உற்சாகமடைகிறது! பரபரப்பான வாழ்க்கையில் இந்த நிம்மதி எது? காடுகளில் திரியும் கொடிய திருடர்களிடம்கூட கருணையும், அன்பும் இருக்கும். காரணம், அது காடு வளர்த்த மனோதத்துவம்.

தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறவன்கூடக் காட்டுக்குப் போனால் அந்த எண்ணத்தை விட்டுவிடுகிறான். ஜீவாத்மா, மகாத்மா ஆவது தனிமையிலே. அண்மையில் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழுகின்ற மிருகங்கள் பற்றி, நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன்.  அதற்கு ‘யானை ராஜா’ என்று பெயரிட்டு, நானே பின்னணி உரை எழுதி, முன்பகுதியையும் பின்பகுதியையும் நானே பேசி இருக்கிறேன். அது வெறும் படம்தான். ஆனால், அதைப் பார்த்துக் கொண்டிருந்த தொண்ணூறு நிமிஷங்களும் ஆப்பிரிக்கக் காட்டிலே உலாவுவது போலிருந்தது.

கேள்வி கேட்பாரில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள்; அந்த ஆறுகளிலே லட்சக்கணக்கில் நாரைகள் சிறகடித்துக் ெகாண்டே, தண்ணீர் மீது ஓடுவதும், பிறகு அணிவகுத்துக்கொண்டு பறப்பதும், வானிலே வட்ட வடிவமாக, சதுர வடிவமாக அணிவகுப்பதும், ஏதோ ஆயிரம் பூமாலைகளை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டு வகைவகையாக ஆட்டுவதும்போல இருந்தது. இடுப்பளவு தண்ணீரிலே அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று. ஓடிக்கொண்டிருக்கும் இடுப்பளவு தண்ணீரில் உட்கார்ந்திருந்தால் உஷ்ணக்கோளாறு வராது; மனம் கொதிக்காது. சாத்விகக் குணம் வரும். ‘போனால் போகட்டும்’ என்ற உணர்வு வரும். எந்தத் துன்பத்தையும் அலட்சியப்படுத்தும் அமைதி வரும். துன்பங்களை ஜீரணிப்பதற்குத் தனிமையின் இனிமையான சூழ்நிலை பெரும் உதவி செய்கிறது. ஒன்று செய்யுங்கள்.

கிராமத்தில் இருப்பவர்கள், பக்கத்தில் இருக்கும் காட்டில் நல்ல நிழல் தரக்கூடிய மரத்தின்கீழ் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதுவும் ஓடுகிற தண்ணீரிலோ, குளத்துத் தண்ணீரிலோ விழுந்து குளித்த பிற்பாடு துண்டை விரித்து உட்காருங்கள். நகரத்தில் இருப்பவர்கள், காற்றோட்டமான தனி அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே உட்காருங்கள். இதற்குக் காலை அல்லது மாலை நேரமே உகந்தது. எதிரே ஏதாவது ஒரு தெய்வத்தின் சிலை இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் கவலை இல்லை.

எங்கே, பிராத்தியுங்கள்:
‘‘பிறப்புக்கு முன்னாலும் இறப்புக்குப் பின்னாலும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பெருமானே! உன்னை நான் வணங்குகிறேன்.’’
‘‘மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு, காற்றால் அலைக்கழிக்கப்படுவது போல், மண்ணிலே விழுந்து நானும் அலைக்கழிக்கப்படுகின்றேன்’’
‘‘எனக்கு வரும் துன்பங்கள் எவையும் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அப்படி நானே உண்டாக்கி இருந்தால், அது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால், என்மீது கருணை வைத்து அவற்றை எடுத்துக் கொண்டு விடு.’’

‘‘நான் அரக்கனாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டேன். அப்படி இருந்திருந்தால் என் அறியாமையை மன்னித்துவிடு’’
‘‘நல்லது என்று நினைத்து நான் செய்வதெல்லாம் தீமையாக முடிவதென்றால், அதற்கு உன்னைத் தவிர வேறு காரணமாக இருக்க முடியாது’’
‘‘என் அறிவு சிறியது; உன் ஆட்சி பீடம் பெரியது’’

‘‘அகந்தை, ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால், இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும். இனி ஒருவருக்கும் கனவிலும் நான் தீங்கிழைக்க மாட்டேன். இறைவா, எனக்கும் மற்றவர்கள் தீங்கிழைக்காவண்ணம் அருள் செய்’’

- இப்படிப் பிராரத்தித்துவிட்டு, கீழ்காணும் பாடல்களைப் பாடுங்கள்: தாய்தந்தை இச்சையினால் தாரணியிலே நான்பிறந்தேன் நாய்பட்ட பாடெல்லாம் நான்படவோ பரம்பொருளே! தண்ணீரைக் கூடத் தவறி மிதித்தறியேன்  கண்ணீரைச் சிந்திக் கலங்குவதேன்
பரம்பொருளே!

அல்லற்பட் டாற்றாது அழுதேன் எனக்குவந்த தொல்லையெல்லாம்
தீர்த்துத் துயர்துடைப்பாய் பரம்பொருளே!
மாட்டின்மேல் உண்ணியைப்போல் மானிடர்கள்
செய்கின்றகேட்டை எல்லாம்நீக்கிக் கிளைத்தருள்வாய் பரம்பொருளே!
தோழன்என எண்ணித் தொடர்ந்தேன்;
நீயும் ஒரு வேழம்போ லானால் விதிஎதுவோ பரம்பொருளே!
கொண்ட மனையாளும் கொட்டுகின்ற தேளானால்
பண்டுநான் செய்ததொரு பாவமென்ன பரம்பொருளே!
ஈன்றெடுத்த பிள்ளைகளும் எனக்கே பகையானால்
சான்றோர்க்கு நான்செய்த தவறெதுவோ பரம்பொருளே!
தடம்பார்த்து நான்செய்த சரியான தொழில்கூட
கடன்காரனாக்கியதே! கைகொடுப்பாய் பரம்பொருளே!
ஒருவேளைச் சோற்றை உட்கார்ந்தே உண்ணுகையில்
மறுவேளைச் சோறெனக்கு மயங்குவதேன் பரம்பொருளே!
செய்யாத குற்றமெல்லாம் செய்தேன் எனச் சொல்லி
பொய்யான வழக்கென்மேல் போடுவதேன் பரம்பொருளே!
எந்தவழக்கானாலும் என்னோடு நீயிருந்து
சொந்தமெனக் காத்துத் துணையிருப்பாய் பரம்பொருளே
பஞ்சாட்சரம் சொல்லிப் பழகா திருந்ததற்கு
நஞ்சாய்க் கொடுத்தாய்நீ நானறிந்தேன் பரம்பொருளே!
உன்னைத் தவிர ஒரு உயிர்த்துணையைக் காணாமல்
எண்ணி வதைகின்றேன்! எனைக்காப்பாய் பரம்பொருளே!
கண்ணாடித் துண்டுகள்என் காலிலே தைக்கவில்லை
கண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே!
எங்கும் நிறைந்தாயே எவரையும்நீ காப்பாயே
தங்குவதற் கென்வீடு தரமிலையோ
பரம்பொருளே!
கங்கையிலே மூழ்கிவரக் காசுபணம்
இல்லையென்று
என்கையால் விளக்கொன்றை ஏற்றுகிறேன் பரம்பொருளே!
ஏற்றுகின்ற விளக்குக்கு எண்ணெயில்லை என்றக்கால்
ஊற்றுகின்ற நெய்யாக ஓடிவா பரம்பொருளே!
ஊனக்கண் எத்தனைதான் உலகத்தைப் பார்த்தாலும்
ஞானக் குருடனுக்கு நலமேது பரம்பொருளே!
பாலூட்ட வந்தாயே பரிந்தே எனையணைத்து
தாலாட்ட வருவாயா தாயே! பரம்பொருளே!
ஆற்றில் ஒருகாலும் அறியாமை என்பதொரு
சேற்றிலொரு காலுமாகத் திரிகின்றேன்
பரம்பொருளே!
எந்தக்கால் வைத்தாலும் ஏதோ தடுக்கிறது
சொந்தக்கால் இல்லைஎனத் துணிந்தேன் பரம்பொருளே!
உன்காலை வாங்கி உலாவ மறந்தபின்னர்
என்காலைக் கொண்டுநான் எதுசெய்வேன் பரம்பொருளே!
தான்போட்ட கண்ணியிலே தானே விழுந்ததுபோல்
நான்போட்டு விழுந்தேனே நலந்தருவாய் பரம்பொருளே!
சூதாடித் தோற்றவர்க்குத் துணைஇருக்க வந்தாயே
வாதாடிக் கெட்டவர்க்கு வழியொன்று காட்டாயோ!
அரக்கர் குலமெல்லாம் அன்றோ டழியவில்லை
இரக்கமில்லார் வடிவாக இன்னும் இருக்குதையோ!
பாய்விரித்துச் சோறு பல்பேர்க்கும் தந்தவனே
வாய்நிறையும் சோற்றுக்கும் வழிகாட்ட மாட்டாயா!
எத்தனையோ கேள்விகளை எழுப்பிவிட்டாய் பூமியிலே
இத்தனைக்கும் நான்
ஒருவன் எப்படித்தான் பதில்சொல்வேன்!
துன்பத்தைத் தானே தொடர்ந்தெனக்கு வைத்தாய்!
இன்பத்தை எப்போது எனக்குவைப்பாய் பரம்பொருளே!
ஐயாநின் பாதம் அடியேன் மறவாமல்
மெய்யாய்த் தொழுகிறேன்! வினைதீர்ப்பாய் பரம்பொருளே!
காவல்ஒரு வில்லாகக் கருணைஒரு வேலாக
கோவில்உருக் கொண்டாயே குறைதீர்க்க மாட்டாயோ!
தூங்குகிற வேளைநீ தோன்றுவாய் கனவில்என
ஏங்குகிறேன் ஐயா! நீ எப்போது வருவாயோ!
மஞ்சளினைச் சுண்ணாம்பு மணந்தால்  சிவப்பதுபோல்
நெஞ்சமெல்லாம் துன்பத்தால் நிறைந்து சிவப்பதென்ன!
பழுதறியாப் பிள்ளைஇது பாவமே செய்தாலும்
அழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய்
பரம்பொருளே!
நெஞ்சறிய ஓர்போதும் நிறைபாவம் செய்ததில்லை
அஞ்சாமற் சொல்கின்றேன் அகம்தானே என்சாட்சி!
மாற்றார் உரிமையைநான் மனமறியக்
கவர்ந்திருந்தால்
ஆற்றா தழுவதுஎன் அகக்கடமை
என்றிருப்பேன்!
இந்துமதச் சாத்திரங்கள் எதையும்
பழித்திருந்தால்
பந்துபடும் பாடு படுவதற்குச் சம்மதிப்பேன்!
நற்கோவில் சிலையதனை நான் உடைத்துப் போட்டிருந்தால்
தற்காலத் தொல்லைகளைத் தாங்கத்
துணிந்திருப்பேன்!
அடுத்தார் மனைவியைநான் ஆசைவைத்துப் பார்த்திருந்தால்
படுத்தால் எழாதபடி பாய்விரித்துக்
கிடந்திருப்பேன்!
நல்லதொரு தண்ணீரில் நஞ்சை
விதைத்திருந்தால்
கல்லாய்க் கிடப்பதுஉன் கருணைஎன நினைத்திருப்பேன்!
தாயை மகனைத் தனித்தனியே
பிரித்திருந்தால்
நாயையே என்னைவிட நற்பிறவி
என்றிருப்பேன்!
கல்யாண மாகாத கன்னியரைப் பற்றியொரு
சொல்லாத வார்த்தையினைச் சொன்னால் அழிந்திருப்பேன்!
பருவம் வராதவளைப் பள்ளியறைக் கழைத்திருந்தால்
தெருத்தெருவாய் ஒரு கவளம் தேடித்
திரிந்திருப்ேபன்!
நானறிந்து செய்ததில்லை; நலமிழந்து போனதில்லை;
வாய்திறந்து ேகட்கிறேன் வாழவைப்பாய் பரம்பொருளே!
சக்தியுள மட்டில் தவறாமல் நாள்தோறும்
பக்திசெயப் புறப்பட்டேன் பக்கம்வா
பரம்பொருளே!
மாடுமனை மாளிகைகள் மலர்த்தோட்டம் கேட்கவில்லை
பாடுபடும் என்நெஞ்சில் பாலூற்று
பரம்பொருளே!
தாயும்நீ தந்தைநீ சார்ந்திருக்கும் சுற்றமும்நீ
வாயும்நீ வயிறும்நீ வரமளிக்கும் தேவனும் நீ!
நோயும்நீ மருந்தும்நீ நோவுடனே சுகமும்நீ!
ஆயும் குணளிக்கும் ஆறாவ தறிவும்நீ!
 
இறப்பும் பிறப்பும்நீ இருட்டும் வெளிச்சமும்நீ
மறப்பும் நினைப்பும்நீ மனக்கோவில்
தேவதைநீ!
எல்லாமும் நீயே எனைப்பெற்ற பெருந்தாயே
இல்லாதான் ேகட்கிறேன் இந்தவரம்
அருள்வாேய!
இன்பவரம் தாராமல் இதுதான்உன்
விதியென்றால்
துன்பமே இன்பமெனத் தொடர்வேன்
பரம்பொருளே!

- பாமர மனிதனுக்கு நான் சொல்லும் தியான யோகமே மேலே கண்டது.

ஆனால், பக்குவம் பெற்ற மனிதர்களுக்குச் சற்று கடுமையான தியான முறையைப் பகவான் கீதையிலே விளக்குகிறான். எப்படி உட்காருவது, உடம்பை எப்படி வைத்துக் கொள்வது. அந்த தியானத்தில் என்ன பயன், எந்த வகையில் மனதுக்கு நிம்மதி என்பதையெல்லாம் தெளிவுபடுத்துகிறான். ‘சஞ்சலம் மிக்க மனத்தை என்ன செய்ய முடியும்?’ என்ற அர்ஜுனனின் கேள்விக்கு பகவான் அதிலே பதில் சொல்கிறான். மனம் அங்கும் இங்கும் அலையும்போது, மூளையும் உடலும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன.

பேயாய் உலாவும் சிறுமனத்தை, மனக்குரங்கை அடக்கியாள்வதன் மூலமே மனிதனின் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும். ஆழ்ந்த தியானத்தில், அலைபாயும் நினைவுகள் அடைபட்டுப் போகின்றன. பகவான் சொல்லும் முறைப்படி நீங்கள் தியானம் செய்ய ஆரம்பித்தால், அந்த நேரத்தில் பக்கத்திலே வெடிகுண்டு வெடித்தாலும் உங்கள் காதுக்குக் கேட்காது. ரம்பையே எதிரிலே வந்து நின்றாலும் உங்களுக்குத் தெரியாது. விஷத்தையே உங்கள் வாயில் வைத்தாலும் அதன் கொடுமையை உணர மாட்டீர்கள்.

கொடிய காற்று உங்கள் நாசியில் புகுந்தாலும் உங்கள் நாசிக்கு அந்த உணர்வு இருக்காது. நெருப்பையே உங்கள் உடம்பில் அள்ளிக் கொட்டினாலும் அது உங்களைச் சுடாது. மொத்தத்தில் ஐந்து புலன்களும் செயலற்று நிற்கும்; மனம் ஒரே சம நோக்கில் இருக்கும். அந்தத் தியான யோகம் உங்களின் நீங்காத கவனத்துக்கு உரியது. ‘மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு’ என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக் கொள்ளத் தொடங்கிவிட்டன.

பிறப்பின் முடிவு இறப்பு - இறப்பின் முடிவு பிறப்பு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது. ஏழு பிறப்பு என்பது தவறான வாதம். ‘ஏழு பிறப்பு’ என்ற வள்ளுவன் வார்த்தைக்கு, ‘எழுகின்ற ஒவ்வொரு பிறப்பும்’ என்பது பொருள். ‘இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்பது பிரபந்தம்.

‘ஏழேழ் பிறவி’ என்றால் ‘நாற்பத்தொன்பது பிறவி’ என்று அர்த்தமல்ல, ‘எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும்’ என்பது பொருள். சில உயிர்கள், போனவேகத்தில் திரும்புகின்றன. சில உயிர்கள், ஓய்வெடுத்துத் திரும்புகின்றன.

புதிய வடிவங்கள் பிறந்த பின்னாலும், பழைய வடிவங்கள் கனவில் வந்து பேசுகின்றன. இம்மையில் பக்தியைச் செம்மையாகச் செலுத்தி ஈஸ்வரனிடமே லயித்துவிட்ட உயிர், பிரிந்தால் மீண்டும் அது திரும்புவதில்லை. மறுபிறப்பு என்ற துயரம் அதற்கு இல்லை. மற்றொன்று, ‘‘சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் மீண்டும் திரும்புகிறதென்றும், வேறு சிலநேரங்களில் மரணம் அடைகிற உயிர் திரும்புவதில்லை என்றும், தன்னைச் சரணடையும் உயிர் எப்போது மரித்தாலும் அதற்கு மறு பிறப்பு என்ற துன்பமே இல்லை’’ என்றும் பகவான் கூறுகின்றான்.

எப்போது மரிக்கின்ற உயிர், மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படுகின்றது? புகை சூழ்ந்த நேரம், இரவு நேரம், கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயணம் ஆகியவற்றில் இறப்பவர்கள், சந்திரனின் வழியில் செல்கிறார்கள். சந்திர கதியை அடைந்த எந்த உயிரும் மீண்டும் திரும்புகிறது. காரணம், சந்திரன் என்பது அகங்காரம்; சூரியன் என்பது,  உண்மை அறிவு. சந்திரனுக்கு இயற்கை ஒளி கிடையாது. சூரியனுடைய ஒளியை வாங்கித் திருப்பி அனுப்புகிறான். சந்திரனுடைய அகங்காரத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன் பரமாத்மா. அவனைச் சரணடைந்து விட்டால் இந்த மறுபிறப்பை வெல்லலாம்.

எப்போது மரணம் அடைகிறவர்களுக்கு இயற்கையிலேயே மறுபிறப்பு இல்லை? நெருப்பு, வெளிச்சம், பகல், சுக்லபக்ஷம், உத்தராயணம் இவற்றில் மரிக்கிறவர்கள் மீளாத வழியில் சென்று ஈஸ்வரனோடு ஐக்கியமடைந்துவிடுகிறார்கள். இவர்களுக்கு மறுபிறவி இல்லை. உத்ராயணம் என்பது சூரியனின் வடதிசைப் பயணம்.

அதனால்தான், இறந்து போனவர்களை வடக்கே தலைவைத்துப் படுக்க வைக்கிறார்கள், முக்தியடைவதற்காக. உயிரோடு இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்வதும் அதற்காகவே. இந்தப் பிறப்பில் துன்பங்களை அனுபவித்தவர்கள் இன்னும் ஒரு பிறப்பையா விரும்புவார்கள்? மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் வேதாவும் கைசலித்து விட்டானே - தாதா இருப்பையூர் வாழ்சிவனே இன்னும் ஓர் அன்னை கருப்பையூர் வாராமற் கா!

- என்றார் பட்டினத்தார்.

‘‘பிறவா வரம் வேண்டும் எம்மானே’’ என்று புலம்பினார் ஒருவர். ‘‘மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப் படுத்தவேண்டாம்’’ என்று வேண்டுகோள் விடுத்தார் ஒருவர். ‘‘அன்னை எத்தனை அன்னையோ, அப்பன் எத்தனை அப்பனோ, இன்னும் எத்தனை ஜென்மமோ?’’ - என்று கலங்கினார் ஒருவர்.

மறுபிறப்பைப் பற்றிய திடமான நம்பிக்கையும், ‘ஐயையோ! படமுடியாதினித் துயரம், பட்டதெல்லாம் போதும்’ என்ற அவலமும் ேசர்த்து இதிலே எதிரொலிக்கின்றன. மறுபிறப்பு இல்லாமல் இருப்பதற்கோ, அப்படிப் பிறந்தாலும் பூர்வ ஜென்மத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கோ ஒரேவழி ஈஸ்வர பக்தி. அதையும் தெளிவாகச் சொல்வதென்றால், கிருஷ்ண பக்தி, ஏனென்றால், பகவான்மட்டும்தான் மறுபிறவி இல்லாமல் இருக்க வழி சொல்கின்றான். எங்கள் குடும்பத்தில் நான் சந்தித்த முதல் மரணம் முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. எனது நாலாவது சகோதரியான காந்திமதி ஆச்சியின் மரணமே அது. அந்தச் சகோதரி சத்தம் போட்டுப் பேசாது.

அவ்வளவு அடக்கம், பொறுமை, பண்பாடு. அவரது மரண ஊர்வலத்தின்போது லேசாக மழை பெய்தது. அந்த ஊரே அதைப்பற்றி பெருமையாகப் பேசிற்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், 1962ல் நானும் சம்பத் அவர்களும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டபோது, மதுரை மாவட்டத்தில் ஒரு காப்பித்தோட்ட அதிபரின் வீட்டுக்குச் சாப்பிடப் போனோம். நான் தலைகுனிந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன்.

ஒரு அம்மையார் சற்று அதிகமாகக் குழம்பு ஊற்றிவிட்டார். ‘‘போதும் அம்மா!’’ என்று சொன்னபடியே நிமிர்ந்து பார்த்தேன். என் உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. அப்படியே என் சகோதரியின் தோற்றம், அதே முகம், அதே மூக்குத்தி, அதே சிரிப்பு! இது என்ன அதிசயம்! இதைவிட அதிசயம், அவர் பெயரும் காந்திமதிதான்! பாண்டிய நாட்டில் ‘காந்திமதி’ என்ற பெயர் அதிகம் என்றாலும், இந்த ஒற்றுமையில் எனக்கு மறுபிறப்புத் தத்துவம்தான் தோன்றிற்று. பகவான் ஒன்று சொல்கிறான், ‘மனம், உயிர், ஆத்மா மூன்றும் வேறு வேறு’ என்று. உடம்பை விட்டு உயிர் பிரியும்போது, ஆத்மாவும் பிரிகிறது.

அதனால்தான் இறந்து போனவர் களுக்கு அனுதாபம் தெரிவிக்கும்போது, ‘‘அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’’ என்கிறோம். மனிதனின் பாவ புண்ணியங்களை கவனிக்கிற இந்த ஆத்மா, உயிரைக் கையோடு அழைத்துக் கொண்டு மறுகூட்டிலே புகுந்துவிடுகிறது. அந்த ஆத்மா சாந்தியடைந்துவிட்டால், அந்த உயிரையும் தன்னோடு வைத்துக் கொண்டு விடுகிறது.

இந்தப் பிறவியில் துன்பங்களை அனுபவித்தவர்கள், தன் வாழ்நாளிலே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியவில்லை என்றால், கடைசியாக அவர்கள் பெறக் கூடிய விடுதலை, ‘ஆத்ம சாந்தி’. ஈஸ்வரபக்தி இல்லாதவனுடைய ஆத்மாவும், தற்கொலை செய்து கொள்கிறவனுடைய ஆத்மாவும் எப்போதும் சாந்தியடைவதில்லை.

மறுஉலகில் அவை, பேயாய் கணங்களாய்த் திரிகின்றன. மீண்டும் இந்தப் பூமியிலே பிறந்துவிட்ட இடத்திலிருந்து துன்பத்தைத் தொடருகின்றன. ஆகவே லௌகீகத்தில் போராடிப் பார்த்து இறுதியாகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறவனுக்குக் கைகொடுக்கும் ஒரே மார்க்கம், பக்தி மார்க்கம். இங்கே மீண்டும் என் கதைக்கு வருகிறேன்.

இருபது வருஷங்களுக்கு முன்னால், என் எழுத்துகளை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆண்டுக்கு ஆண்டு அதிலே மாறுதலைக் கவனித்திருக்கிறீர்கள். இதற்குக் காரணம் என் திறமை அன்று; பக்தி மார்க்கத்திலே ஏற்பட்ட பற்றுதலே. முன்பெல்லாம் துன்பங்களில் நடுக்கம் வரும்; தூக்கம் வராது. இப்போது வருவதுபோல் தூக்கம் எப்போதுமே வந்ததில்லை. பெரிய பெரிய நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் சிரிப்புத்தான் வருகிறது. ‘அது இல்லை, இது இல்லை’ என்ற சிந்தனைகள் எல்லாம் போய்விட்டன. ‘இருப்பது கடவுள் கொடுத்தது’ என்று இயற்கையாகவே தோன்றுகிறது. 

உடல்நோயைப் பொறுத்தவரை தினமும் மாலையில் ஒரு டாக்டரைச் சந்திக்கிறேன். அவர்தான் டாக்டர் கிருஷ்ணன்!  அவரை ஊனக் கண்ணால் பார்க்க முடியாது. ஞானக் கண்ணால்தான் பார்க்கலாம். சட்டங்களிலும் இ.பி.கோ., இ.பு.கோ., ஆகியவற்றைக் கண்டு நான் பரிதாபப்படுகின்றேன்; அவற்றை அலட்சியப்படுத்துகிறேன்.

நான் பயப்படுவது ‘ப.பு.கோ’ ஒன்றுக்குத்தான். அதாவது ‘பகவான் புரொஸீஜர் கோர்ட்’ ஒன்றுக்குத்தான். காரணம் என்னுடைய புருஷன் இப்போது கம்பீரமாக நிற்கிறான். வடமொழியில் ‘புருஷன்’ என்றால் ‘ஆத்மா’ என்று அர்த்தம். கணவன்தான் மனைவியினுடைய ‘ஆத்மா’ என்பதால்தான் அவனைப் ‘புருஷன்’ என்று அழைத்தார்கள். அடிக்கடி சொல்லும் ஒன்றையே நான் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

‘‘ஒன்று நடந்துதான் தீரும் என்றால் அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்?’’ அத்தனையையும் பகவானிடம் ஒப்படையுங்கள். இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்; இருட்டையே வெளிச்சமாக்கிக்கொள்ளுங்கள்; எது நேர்ந்தாலும் கவலைப்படாதீர்கள். விதி என்ற உண்மையைப் போட்டு, அதைத் துடைத்து விடுங்கள்.

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், ‘நீங்கள் சொல்லுவதே சரியாக இருக்கக்கூடும்’ என்று சொல்லிவிடுங்கள். உங்களை ‘முட்டாள்’ என்று திட்டினால், ‘எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கூறுங்கள். உங்கள் மனைவி சண்டை போட்டால், ‘சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்’ என்று கருதுங்கள்.  யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டுவிட்டதென்று கருதுங்கள். வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள்.

புதுப்புது அனுவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள். ‘நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க வைத்து சாந்தியைத் தரும். நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம் கூட கோர்ட்டை மிதிக்கும்படி விதி வைக்கிறதே! உனக்கும் எனக்கும் வருவது துன்பமா என்ன?

(தொடரும்)

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.