அழகி-2 எப்போ வரும்? தங்கர் பச்சான் பேசுகிறார்



தன் மகனை ஹீரோவாக்கி கமர்ஷியல் படம் இயக்கி இருக்கிறார்  தங்கர்பச்சான். இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்த தங்கர்பச்சானையும், அவர் மகன் விஜித்தையும் சந்தித்தோம். முதலில் தங்கர்பச்சான் பேச ஆரம்பித்தார்:‘‘இப்படி ஒரு படத்தில் பையனை ஹீரோவாக அறிமுகப்படுத்தணும்னு எந்த ஒரு திட்டமும் கிடையாது. இது தானாக அமைந்தது.

இதுவரை எடுத்த படங்களில் தங்கர்பச்சான் படத்திலே என்னென்ன இருக்குமோ அது எதுவுமே இதுல இருக்காது. இது என்னோட படம் மாதிரி இருக்காது. 13 நாள் வெறும் சண்டைக்காட்சியை மட்டும் எடுத்துருக்கேன். போலீஸே என் படங்களில் வந்ததில்லை. ஆனால் இந்தப் படத்துல போலீஸ், கொலை, போதைப்பொருள் கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து என்று எல்லாம் இருக்கு. ஆனால் அதில் ஒரு தனித்துவம் இருக்கும். தங்கர்பச்சான் முத்திரை இருக்கும்.”

“உங்க பாணியிலிருந்து மாறி எடுக்க என்ன காரணம்?”

“சமீபமா ரிலீஸாகுற எல்லாப்படங்களையும் பாக்க முடியாட்டாலும் முக்கியமான படங்களைப் பார்த்துட்டுதான் இருக்கேன். மக்கள் எப்படி படங்களை அணுகுறாங்க, ஊடகங்கள் எப்படி பாக்குறாங்கனு பார்த்துட்டுதான் இருக்கேன். இதுக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா வாழ்வியல் தொடர்பான, அதுக்கான சம்பவங்கள், அதில் நடந்த ஒரு பாதி சம்பவங்களாவது கதைகளாக மாற்றப்பட்டது. இப்ப  அதெல்லாம் இல்லவே இல்ல, முற்றிலும் வேற மாதிரி இருக்கு.  இப்ப இந்தப் படத்தை நான் அப்படித்தான் எடுத்திருக்கேன். நம்ப மட்டும் ஏன் நடந்ததையே எடுக்கணும்னு ஆரம்பிச்சதுதான் இந்தப் படம்.”

“உங்க படங்களின் தலைப்பு தனித்துவமாக இருக்கும். நீங்களும் மாறிட்டீங்களே?”

“கண்ணதாசன் தயாரிச்ச ‘ரம்பையின் காதல்’ படத்துல ‘டக்கு முக்கு டிக்கு தாளம்' னு ஒரு பாட்டு இருக்கு. அப்பறம் எங்க ஊருல ‘டக்கு முக்கு டிக்குகாரன்’னு ஒரு ஆளே இருக்காரு. ‘டக்கு முக்கு டிக்கு’ன்னா ஆள் மாறிக்கிட்டே இருப்பான். ஆங்கிலத்துல சொல்லணும்னா ‘characterless’னு சொல்லுவாங்க.

இடத்துக்குத் தகுந்த மாதிரி ஆள் மாறிக்கிட்டே இருப்பான். ‘டக்கு முக்கு டிக்கு’னு ராகம் மாறுது இல்லையா. ஒரு முறை டக்குனு போடுற ராகம் அடுத்தமுறை முக்கு, அடுத்து டிக்குனு மாறுது இல்லையா, அதுதான் ‘டக்கு முக்கு டிக்கு' தாளம். ஒவ்வொரு இடத்துக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொரு பொய் சொல்றது அப்படிங்கிறதுதான் அதுக்கு அர்த்தம்.”

“நடிகர்கள்?”

“விஜித் பச்சான் இந்தப் படத்துல கதாநாயகனாக நடிச்சிருக்கார். நாயகி மிலனா நாகராஜ். இவர்களோடு அஷ்வினி சந்திரசேகர், முனீஸ்காந்த் ஆகியோரும் இருக்கிறார்கள். இந்தப் படத்துல மூன்று வில்லன்கள் நடிச்சிருக்காங்க. ஒருத்தர் ஸ்டன்ட் சில்வா, மற்றொருவர் மன்சூர் அலிகான். அடுத்து முக்கியமா சொல்லணும்னா யோகி ராமநாதன். ஸ்டன்ட் சில்வா, ஸ்டண்ட் மாஸ்டரா மட்டுமல்லாமல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்துலேயும் நடிச்சிருக்கார்.”

“தொழில்நுட்பக் கலைஞர்கள்?”

“இன்றைய தலைமுறையோடு ஒன்றியிருக்கிற இசையமைப்பாளர் தரண்குமார் இசையமைச்சிருக்கார். படத்தொகுப்பு சாபு ஜோசப். என்னுடைய உதவியாளராகப் பணியாற்றிய பிரபு தயாளன், பிரபு ராஜ் மற்றும் சிவ பாஸ்கர் ஒளிப்பதிவு செஞ்சிருக்காங்க. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நானே இந்தப் படத்தை இயக்கியிருக்கேன். பி.எஸ்.என். என்டர்டெயின்மென்ட் ஜார்ஜ் டயஸ்,  சரவணராஜா என்ற நண்பருடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.”

“படத்தோட கதை?”

“முழுக்க முழுக்க சென்னைல நடக்கக்கூடிய கதை.  ஒருசில காட்சிகளைத் தவிர நான் அதிகமா சென்னைல படம் எடுத்தது இல்ல. முதல் முறையா முழு நகரத்து சினிமா எடுத்திருக்கேன். ‘களவாடிய பொழுதுகள்’ சிட்டி படமா இருந்தாலும் சில காட்சிகள் கோயமுத்தூர் போன்ற இடங்கள்ல எடுத்திருக்கேன்.

இது ரெண்டு பேருடைய கதை. விஜித், குப்பத்து ஏழைப் பையன்.  அடுத்த வேளை சாப்பாட்டுக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு பையன். அவனுக்கும், கோடிக்கணக்கான  சொத்து இருக்கிற பணக்காரன் ஒருவனுக்குமான கனெக்‌ஷன்தான் கதை. இதுல பணக்காரனாக முனீஸ்காந்த் நடிச்சிருக்கார். நிறைய பணத்த வச்சிக்கிட்டு வாழப் பிடிக்காத முனீஸ்காந்த், பணத்தைத்  தேடிக்கிட்டிருக்கற விஜித். இவங்க இரண்டு பேருக்கும் இந்தப் பணம் எதை கற்றுத்தருது என்பதுதான் கதை.

வழக்கமாக என் படத்தில் வரும் ஒரு வசனம் கூட இந்தப் படத்தில் இருக்காது. இந்தக் காலத்திற்குத் தேவையான யதார்த்த வசனங்களை எழுதியிருக்கேன். மக்கள் பேசும் வார்த்தைகளைத்தான் வசனங்களாக எழுதியிருக்கேன். அதேதான் பாடலாவும் வந்திருக்கு. இப்ப இந்தப் பாட்ட நீங்க விமர்சனம் பண்ணா... மக்களைத்தான் விமர்சனம் பண்ணணும். நான் இதுக்காக எதுவும் மெனக்கெட்டு எழுதலை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப பொழுது போக்குச் சித்திரம். 100 % family entertainment.”

“சீரியஸான கதையாதானே இருக்கு. ஏன் காமெடி பண்ணுறீங்க?”

“காமெடி பண்றதுதான் ரொம்ப கஷ்டம். ஒரு ஹீரோவைக் கூட்டி வந்து டான்ஸ் ஆட வெச்சிடலாம், சண்ட போட வச்சிடலாம். சீரியஸ காட்டி ஏத்துக்க வச்சிடலாம். ஆனா காமெடி பண்ண வைக்க முடியாது. காமெடி பண்ண சென்ஸ் வேணும். காமெடி சென்ஸ் இருக்கிற ஹீரோ தமிழ்ல ரொமப கம்மி. எனக்கு ரொம்ப பிடிச்சது காமெடிப் படங்கள்தான்.  பெரிய இயக்குநர்களே காமெடிப் படங்கள் எடுத்திருக்காங்க.

தர் எவ்வளவு பெரிய இயக்குநர்.  அவர் ‘காதலிக்க நேரமில்லை’ எடுத்தாரு. பாலச்சந்தர் ‘தில்லு முல்லு’ எடுத்தார். பாலுமகேந்திரா காமெடி படம் எடுத்திருக்காரு. மகேந்திரன் எடுத்திருக்கார். எல்லாப் படைப்பாளிகளும் ஒரு கட்டத்தில மாத்திப் பண்ணணும். நம்ம தொழில் நேர்த்தியை நம்ம கையில் வச்சுக்கிட்டு நாம் பண்ணலாம். இதுல பையனுக்காக அவர மனசுல வச்சு திரைக்கதை பண்ணியிருக்கேன்.”

“பையனை ஹீரோவா அறிமுகப்படுத்துற திட்டம்  சின்ன வயசுல இருந்தே இருந்ததா?”

இதற்கு அவரே பதில் சொல்வாரு என கேள்வியை தன் மகன் விஜித் பக்கம் திருப்பி விட விஜித் ஆரம்பித்தார்:“இல்லை. எனக்கு ஹீரோவாகுற திட்டமெல்லாம் கிடையாது. சினிமாவுலே ஆர்வம் இருந்தது. அப்பா கேமராங்குறதால கேமராமேனா ஆகுறதா இருந்தேன். விஸ்காம் முடிச்சப்புறம் நிறைய மனசு மாறிக்கிட்டே  இருந்தது. டைரக்டர் ஆகலாம், நடிக்கலாம் அப்படின்னு.

 அப்புறம் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கிட்ட நடிப்பு கத்துக்கிட்டேன். மூணு மாசத்துல நடிப்பு கத்துக்க முடியாதுனு அப்பதான் தெரிஞ்சது. அதற்கு சீரியஸா உழைக்க ஆரம்பிச்சேன். 3 வருஷம் கத்துக்கிட்டேன். அப்புறம் அப்பா நிறைய உதவி பண்ணார். நிறைய கதைகள் கேட்டேன். எதுவும் ஒர்க் அவுட் ஆகல. அப்புறம் அப்பா நம்ம பண்ணலாம்னு சொன்னது தான் இந்தப்படம்.”

“அப்பாவோட இயக்கத்தில் நடிப்பது ரொம்ப கஷ்டம். உங்களுக்கு எப்படி இருந்தது?”
 
“அப்பாகூட எனக்கு நெருக்கமான உறவு இருந்ததே கிடையாது. அவர் எப்பவும் ஷூட்டிங்கிலேயேதான் இருப்பார். அவர் கூட இந்தப்படத்திலதான் அதிக நேரம் செலவு பண்ணியிருக்கேன். இந்தப் படத்தோட கதையைக் கேக்கத்தான் அவர் கூட முதல் முறையா  ரொம்ப நேரம் சேர்ந்து உட்கார்ந்தேன். இப்பதான் அப்பாகூட நெருக்கமாயிருக்கேன்.”

“அப்பா தமிழ் காதலர். ஏன் விஜித்னு பேர் வச்சாங்க?”

“என் அம்மா வச்ச பேருதான் விஜித். தாத்தா பேரு பச்சான். அதனால விஜித் பச்சான். நான் பேர் மாத்த முயற்சி பண்ணேன். வெற்றினு மாத்தி பார்த்தேன். கடைசில இந்தப்பேரே இருக்கட்டும்னு விட்டுட்டேன்.”தங்கர்பச்சான் குறுக்கிட்டுச் சொல்கிறார்.“எனக்கு இந்த மாதிரி பேர் இருக்கறதே தெரியாது. ஆனா பதிவு பண்ணி வச்சிருக்காங்க. நான் நிறைய தடவ மாற்ற முயற்சி பண்ணேன். முடியலை. அதோட விட்டுட்டேன்.”
மீண்டும் விஜித் தொடர்கிறார்.

“படத்தோட ஹீரோயின் பெங்களூர் பொண்ணு. அவங்க நிறைய படங்கள் பண்ணிருக்காங்க. அவங்க நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. படத்துல வேலை செஞ்சுகிட்டு இருக்குற பொண்ணா வர்றாங்க.  இந்தப்படத்தில எல்லாரும் தெரிந்த முகங்கள். அவர்களோடு நடிச்சதால நிறைய கத்துக்க முடிஞ்சது.”

“முனீஸ்காந்த் டைமிங் சூப்பரா இருக்கும். அவரோட நடிச்சது எப்படி இருந்தது?”
“அவர் இந்தப்படத்தில மெயின் ரோல் பண்றார். அவர பார்த்துதான் நிறைய கத்துக்கிட்டேன். நிறைய சொல்லிக்கொடுத்தாரு. நான் தியேட்டர்ல இருந்து வந்ததால கேமரா பார்க்கமாட்டேன். நான் பாட்டுக்கு பண்ணிட்டு இருப்பேன். அவர்தான் இப்படிலாம் பண்ணக்கூடாது, எப்படி நிக்கணும், கேமரா முன்னாடி எப்படி நடிக்கணும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்.”

விஜித்துக்கு ஏதோ போன் வந்ததும், மீண்டும் தங்கர்பச்சானிடமே பேச ஆரம்பித்தோம்.“ஹீரோயின் பற்றி கேட்டுக்கிட்டு இருந்தீங்க இல்லே... மிலனா நாகராஜ் அருமையான பொண்ணு. இப்படிப் பண்ணுங்கனு நான் சொல்லாத ஒரு நடிகை. ஒரு ஷாட்டுக்குக் கூட நான் சொல்லல. அருமையா நடிச்சுக் கொடுத்துட்டு போயிட்டாங்க. வெளி மாநிலம்னு சொல்றோம். ஆனா சாயாஜி ஷிண்டே பாரதியாராக நடிக்க வந்தப்ப எங்கூட ரூம்ல தரையில படுத்திருந்தார்.  ஷூட்டிங் எவ்வளவு தூரம்னாலும் செருப்பு போடாம நடந்தே போவார். கேரக்டரா வாழ்ந்தார். இங்க இருக்கிற கதாநாயகர்களுக்கு கேரவன் வேணும். அப்புறம் எப்படி பாரதியாரா  நடிக்க முடியும்?”

“உங்க பையனுக்காக நிறைய சமரசம் பண்ணிக்கறீங்களோ?”

“அப்படி இல்லை. தாக்கத்தை உருவாக்குற படங்களைப் பார்க்க யாரும் விரும்பலை. அதை விட்டு ஒதுங்கி இருக்கேன். இன்னிக்கி கணவன் மனைவியே பேசிக்கிறதில்ல. அண்ணன், தம்பி உறவே இல்ல. சினிமா மட்டும் என்ன செய்துடும். இயந்திரத்தோடதான் பேசிக்கிட்டு இருக்காங்க. தியேட்டர் போனா திரையில தெரியிற வெளிச்சத்த விட மொபைல் வெளிச்சம் அதிகமா இருக்கு.

சீரியஸ் படங்கள பார்க்க ஆள் இல்லை. நாம் சொல்றத மதிக்காத போக்கு இருக்கு. அதான் இப்படியும் படம் பண்ணுவோமேனுதான். உலகின் மிகச்சிறந்த ஃபிரான்ஸ் இயக்குநர் ஃபிரான்ஸிஸ் த்ரூஃபா, அவரே காமெடி படங்கள் நிறைய பண்ணியிருக்கார். நாம ஏன் பண்ணக்கூடாது. மீண்டும் அழுத்தமான படங்கள் பண்ணுவோம். அத முழுசா விடமாட்டோம்.”

“நீங்க  ‘அழகி-2’ எடுக்கப் போறதா ஒரு செய்தி வந்ததே ?”

“உண்மைதான். ‘கல்வெட்டு’ சிறுகதையை படமா எடுக்கும்போது ‘அழகி-2’ தான் முதல்ல எடுக்க வேண்டியது. ‘அழகி’ கதை 1983ல எழுதினது. இளையராஜா இதை ஒரு தொடரா எடுக்கச் சொன்னார். முன்கதையாதான் ‘அழகி’ எடுத்தோம். ‘அழகி-2’ ரெடியா இருக்கு. அந்தப்
படத்தில பார்த்திபன் பையனா வர்றவருக்கு 27 வயசுல கதை ஆரம்பிக்கும்.

இப்பவும் ‘அழகி-2’ எடுக்க தயாரிப்பாளர் தயாரா இருக்கார். நந்திதாகிட்ட இப்பவும் பேசிட்டு இருக்கேன். எல்லோரும் அவங்க வேலையை ஒதுக்கி வச்சுட்டு வரணும். ஆனா இப்ப இருக்குற தலைமுறை ‘அழகி-2’ ஐ புரிஞ்சுப்பாங்களாங்கிறதுதான் பிரச்சனை. உறவுகளே இப்ப இல்லையே?”

- சுரேஷ்ராஜா