இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு!



‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத்தொடர்ந்து இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் படம் ‘ஆக்‌ஷன்’. இந்தப் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். ‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ படங்களைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி -விஷால் கூட்டணி இணையும் மூன்றாவது படம் இந்த ‘ஆக்‌ஷன்’. படத்தைப் பற்றி இயக்குநர் சுந்தர்.சி யிடம் கேட்டோம்.

“நான் எம்.ஜி.ஆரின்  தீவிர ரசிகன். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.  தற்போது விஷால் மூலம் அந்தக் கனவு நிறைவேறியுள்ளது.  இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே இந்தப் படத்தில்தான் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன.

தொடர்ச்சியாக பேய்ப் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும்படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்‌ஷன் படம் செய்யத்தான் ஆசை.

இந்தப்படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிரம்பிய படம் என்பதால் படத்திற்கு ‘ஆக்‌ஷன்’ என்றே  பெயர் வைத்துவிட்டோம்.  இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் விஷால் சரியாக இருப்பார் என்று தோன்றியது. சுபாஷ் என்கின்ற மிலிட்டரி ஆபீஸர் வேடத்தில் விஷால் நடிச்சிருக்கார்.

அவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். அகான்ஸா பூரி பக்கா ரெளடித் தனம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனாக டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். ஆதியைப் பற்றி தனியாக  சொல்லவேண்டியதில்லை. ஏற்கனவே அவருடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆதியுடன் வேலை செய்யும்போது உடன்பிறவாத தம்பியுடன் பழகுவது போல் உள்ளது. மிகப் பெரிய திறமைசாலி. அவருக்கு ப்ரைட் ப்யூச்சர் இருக்கு.

டட்லி ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். பத்ரி வசனம் எழுதியிருக்கிறார். அன்பறிவ் சகோதரர்கள் சண்டைக் காட்சி களில் தெறிக்கவிட்டிருக்கிறார்கள். என்னுடைய படங்களில் இருக்கும் எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும். ஒரே ஆச்சர்யம்... ஆக்‌ஷன் தூக்கலாக இருக்கும்’’ என்றார் சுந்தர்.சி.

- சுரேஷ்ராஜா