சந்திக்காத நபரை காதலிக்கும் நடிகை





முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு முன்கூட்டியே தலைப்பு வைப்பது, பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொடுக்கிறது. இதனால் பயப்படும் ஹீரோக்கள், தங்கள் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு தலைப்பு குறித்து அறிவிக்கலாம் என்று தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும் சொல்லி விட்டார்கள். ‘தல’ நடிகரின் இரண்டு படங்களுக்கு கடைசி நேரத்தில் தலைப்பு சூட்டப்பட்ட மர்மமும் இதுதான். அதுபோல், ‘ஷால்’ நடிகரின் படத்துக்கு அரசியல் தலைவர் ஒருவரின் பெயரைச் சூட்டியிருந்தார்கள். சமீபத்தில் அப்பெயர் மாற்றப்பட்டு, இனி ‘ம....ஜா’ என்றே அழைக்கப்படும் என்று அந்த நடிகர் அறிவித்துள்ளார். இதையடுத்து ‘யங் தளபதி’ நடிகரின் புதுப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள தலைப்பையும் வேண்டாம் என்று நடிகர் மற்றும் இயக்குநர் தரப்பு சொல்லிவிட்டதாம். ஷூட்டிங் முடிந்த பிறகு டைட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்களாம்.

அய்யோ பாவம், ‘பாவனை’ நடிகை புலம்போ புலம்பு என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அதாவது, அம்மணி யின் மலையாளம் மற்றும் கன்னடப் படவுலகின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில நட்பு நடிகைகள், அவர் விரைவில் திருமணம் செய்துகொண்டு, நடிப்புக்கு முழுக்கு போடப் போகிறார் என்று வதந்தி பரப்புகிறார்களாம். இதை திட்டமிட்டே சில நடிகைகள் செய்கிறார்கள் என்றும், அவர்களில் சிலர் மீடியாவுக்கு போன் செய்து தகவல் தருகிறார்கள் என்றும் சந்தேகப்படுகிறாராம். பட வாய்ப்பு பிடிப்பதற்காகவே சக போட்டி நடிகைகள் இப்படி செய்கிறார்கள் என்றாலும், தன்னை மட்டுமே குறிவைத்து அடிக்கடி இதுபோன்ற வதந்தி பரப்புவதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் புலம்பும் ‘பாவனை’ நடிகை, தமிழில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்குக் காரணம், தன்னை அறிமுகம் செய்த இயக்குநர்தான் என்ற விஷயத்திலும் உறுதியாக இருக்கிறாராம்.



காதல் தோல்வி புகழ் ‘தாரா’, தமிழில் நடிக்க வந்து பத்து வருடங்களாகி விட்டது. இதற்கிடையே ‘வம்பு’ நடிகரின் காதல் வலையில் விழுந்து எழுந்தார். தாடி இயக்குநருடன் ஏற்பட்ட காதலும் முறிந்தது. இப்போது ‘யார்யா’ நடிகருடன் கிசுகிசுக்கப்படுகிறார். என்றாலும், கைவசம் வைத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை குறையவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று, போட்டி நடிகைகள் ரூம் போட்டு யோசிக்கிறார்களாம். அப்படியும் விடை கிடைக்காத நிலையில், ‘தாரா’ புதுப்பட வாய்ப்பை எப்படிப் பிடிக்கிறார் என்ற ரகசியத்தையும், அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற விஷயத்தையும் அவரது உதவியாளர்கள் மூலம் கறக்க முயற்சிக்கிறார்களாம். ஆனால், ‘தாரா’விடம் பணியாற்றும் யாரும் மற்ற நபர்களிடம் பேசக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். மீடியா மற்றும் போட்டி நடிகைகளிடம் யாராவது பேசியது தெரிந்த மறுநிமிடம், அந்த உதவியாளரின் வேலை காலியாகி விடுமாம். அதனால், ‘தாரா’ வட்டாரத்தில் இருந்து ரகசியம் கசிவது குதிரைக்கொம்பாக இருக்கிறதாம்.

ஷூட்டிங் ஸ்பாட்டுகளில், ‘ஸீ’ அறிமுக நடிகரின் அலப்பறை தாங்க முடியவில்லை என்று, புரொடக்ஷன் புண்ணியகோடிகள் புலம்புகிறார்கள். சாதாரண விஷயமாக இருந்தாலும் ஓவராகப் பேசுகிறாராம். அடிக்கடி ஆங்கிலத்தில் பேசுவதால், என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லையாம். மேலும், சில நண்பர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்து, அரட்டைக் கச்சேரி நடத்துகிறாராம். இவ்விஷயத்தை அவரது தந்தையின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்களாம். அவரும் ஒரு முன்னாள் ஹீரோ என்பதால், ‘ஷூட்டிங் ஸ்பாட்ல இந்த மாதிரி எல்லாம் நடந்துக்காதே. பேரு கெட்டுடும்’ என்றாராம்.



‘அட்ட கத்தி’ நடிகைக்கு திடீர் திடீரென்று ஞாபகசக்தி கண்ணாமூச்சி ஆடுகிறதாம். தன்னிடம் பேசுபவரிடம் சகஜமாக சிரித்துப் பேசும் அவர், சில நாட்களில் அந்த நபரை மறந்து விடுவாராம். அடுத்தமுறையோ அல்லது சில நாட்கள் கழித்தோ குறிப்பிட்ட நபரை எங்காவது பார்த்தால், எதுவும் தெரியாதவர் போல் அமைதியாக இருப்பாராம். ‘என்ன இது, அன்னைக்கு சிரிச்சி சிரிச்சி பேசினீங்க. இப்ப கண்டுக்காம இருக்கீங்க’ என்றால், ‘அன்னைக்கு பேசினது நீங்களா?’ என்று ஒற்றை வார்த்தை மட்டும் கேட்டு அமைதியாகி விடுவாராம். அல்லது போனில் தொடர்புகொண்டால், அதை அட்டெண்ட் செய்வதே இல்லையாம். ‘அட என்னப்பா இந்த பொண்ணு... புரியாத புதிரா இருக்கு’ என்று சிலர் புலம்புகிறார்கள்.

‘வழக்கு எண்’ நடிகைக்கு ஓரிரு படங்கள் இருக்கிறது. ‘ஸோ லவ் செய்வீர்’ படத்தில் அம்மணியின் கிளாமர் நடிப்பு எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. போட்டி நிறைந்த திரையுலகில் ஜெயிக்க வேண்டும் என்றால், கிளாமர் காட்டி நடிப்பதே சிறந்தது என்று நடிகைக்கு யாரோ மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். இதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட அவர், தன் மேனியழகை மெருகேற்றும் விஷயத்திலும் கவனம் செலுத்துகிறாராம். முதலாவதாக, அதிநவீன அழகு சிகிச்சை பெற ஏற்பாடு செய்துள்ளாராம். அதோடு, தன் பல் வரிசையை சீர்படுத்தவும் முடிவு செய்திருக்கிறார்.



‘நஸ்ரிய’ நடிகையின் கவனம் முழுவதும் நடிப்பிலும், படிப்பிலும் மட்டுமே இருக்கிறதாம். இதற்கிடையே ‘வெற்றி’ நடிகருடன் காதல் கிசுகிசுக்கள் வந்து, அவர் மனதை மாற்றிவிட்டதாம். ஷூட்டிங்கில் இரண்டு பேரும் மாறி மாறி ‘கடலை’ போடுகிறார்களாம். தங்களை யார் கவனிக்கிறார்கள் என்பது குறித்து இருவருமே கவலைப்படுவது இல்லை என்கிறார்கள். நிலைமை இப்படி என்றாலும், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாக, ‘எங்களுக்குள் காதலும் கிடையாது, கத்தரிக்காயும் கிடையாது’ என்று நடிகர் தரப்பில் இருந்தும், நடிகை தரப்பில் இருந்தும் மாறி மாறி கதையளக்கிறார்களாம்.

‘இனிய’ நடிகைக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கவே வாய்ப்பு வருகிறதாம். தனி ஹீரோயின் அந்தஸ்து கிடைப்பது என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறதாம். சம்பளம் மற்றும் ‘தாராளம்’ காட்டும் விஷயத்தில் அம்மணி இறங்கி வந்தாலும், முன்னணி இளம் ஹீரோக்கள் யாரும் தன்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்ற சோகத்தில் தவிக்கிறாராம். இதனால், தாய்மொழி மலையாளத்தில் கிடைத்த வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கரை சேருவது என்ற இறுதியான முடிவுக்கு வந்துள்ளாராம்.


ஒருவருக்கு அவரது பெயரைவிட, அதற்கு முன்னால் சேரும் பட்டம்தான் கம்பீரத்தைக் கொடுக்கும் என்பதை நடிகர், நடிகைகள் விஷயத்தில் கண்கூடாகப் பார்க்கலாம். ‘டணால்’, ‘காகா’, ‘மேஜர்’, ‘தேங்காய்’, ‘ஒருவிரல்’, ‘என்னத்தே’ ஆகியவற்றை தொடர்ந்து ‘வெண்ணிற ஆடை’, ‘நிழல்கள்’, ‘தலைவாசல்’ போன்ற படங்களை அடிப்படையாகக் கொண்ட அடைமொழிகளும் சம்பந்தப்பட்ட நடிகர்களை ரசிகர்களுக்கு பளிச்சென்று அடையாளம் காட்டுகிறது. ‘வெ.க.கு’ படத்தில் நடித்த காமெடி நடிகர், பரோட்டா சாப்பிட்டு நடித்த காட்சி பிரபலம் அடைந்தது. அதற்குப் பிறகு அவரது பெயருடன் ‘பரோட்டா’ ஒட்டிக்கொண்டது. இது அவருக்கு பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது என்றாலும், தனது பெயருக்கு முன்னால் எந்த பட்டப் பெயரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் நடிகர். இதனால், அவர் நடிக்கும் படங்களின் டைட்டிலில், ‘பரோட்டா’ மட்டும் மிஸ்சாகிக்கொண்டே இருக்கிறது.

‘என் கல்யாணம் எப்ப நடந்தாலும், அது காதல் கல்யாணமாத்தான் இருக்கும்’ என்று, கடந்த சில வருடங்களாக காமெடி செய்து கொண்டிருக்கும் ‘ஷா’ நடிகை, தெலுங்கு ஹீரோவுடனான நட்பை முறித்துக்கொண்டதாக கட்டுக்கதை உலவுகிறது. இதை யார் பரப்பியது என்று தெரியவில்லை. நடிகையும், அந்த நடிகரும் சின்ன வயதிலிருந்தே நெருங்கிய நட்புடன் பழகி வந்தவர்கள். பிறகு அவர்களைப் பற்றி நிறைய கிசு கிசுக்கள் வந்தன. இப்போது அடங்கி விட்டது. என்றாலும், அம்மணி அடிக்கடி மீடியாவில் சொல்லும் மேற்கண்ட வசனம் பிரபலமாகி விட்டது. சரி, காதல் கல்யாணம் என்று அடித்துச் சொல்கிறாரே, காதலன் யார் என்று கேட்டால், உதடுகளைப் பிதுக்குகிறார். ‘இன்னும் அந்த நபரை சந்திக்கலை. ஆனா, கண்டிப்பா நான் காதல் கல்யாணம்தான் பண்ணுவேன்’ என்று, மீண்டும் மீண்டும் ‘ஷாக்’ கொடுக்கிறார்.
(படத்தில் இருக்கும் நடிகைகள் ரம்யா, சிம்ரன்கவுர், சுசா, கோமல் ஆகியோருக்கும்  இந்தச் செய்திகளுக்கும் தொடர்பில்லை)
- மாயன்