யோகிபாபுவின் ஹீரோயின்!



யோகிபாபு நடிக்கும் படம் ‘காக்டெய்ல்’. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார் கன்னட நடிகை ராஷ்மி கோபிநாத்.
எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்த இவர் 2016ல் பெங்களூருவின் சிறந்த மாடலாக வெற்றி பெற்றவர். கன்னடம், தமிழ், தெலுங்கு என மும்மொழிகளிலும் மாறிமாறி நடித்துவரும் ராஷ்மி கடந்த ஒரு வருடத்திற்குள்ளேயே ஆறு படங்களில் நடித்துவிட்டார் என்பது ஆச்சர்ய தகவல். தமிழ் சினிமா அனுபவத்தைக் குறித்து அவரிடம் கேட்டோம்...

‘‘யோகிபாபுவை டிவியில பார்த்திருக்கேன். தியேட்டர்ல பார்த்திருக்கேன். ஆனா முதல்நாள் படப்பிடிப்பிலேயே அவருடன் சேர்ந்து நடிப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் என்னுடைய டென்ஷனை எல்லாம் முதல்நாளே ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார் யோகிபாபு.. இந்தப் படத்தில் எனக்கு கிராமத்துப்பெண் வேடம். என்னை யாராவது ஏதாவது வம்புக்கு இழுத்து பேசினால் அதகளம் பண்ணிடுவேன். அந்த அளவுக்கு துடுக்கான கேரக்டரில் நடித்துள்ளேன்.

ஒருமுறை மிக நீளமான வசனம் பேசி யோகிபாபுவை திட்டவேண்டிய காட்சியில் தடுமாறாமல் சீரியஸாக வசனம் பேசிக்கொண்டு இருந்தேன். திடீரென காமெடியாக ஒரு கவுண்ட்டர் கொடுத்தார் பாருங்கள்... அவ்வளவுதான்... அப்படியே கொரோனா ஊரடங்கு மாதிரி அப்படியே ஜாமாகி நின்றுவிட்டேன்.

அதன்பிறகு சிரிப்பை அடக்கவே நீண்ட நேரம் ஆனது. டேக் நேரத்தில் பேசுவதை விட படப்பிடிப்பு இடைவேளை நேரத்தில் இன்னும் காமெடியாக பேசுவார் யோகிபாபு. அதை நினைத்துக்கொண்டே ஷாட்டுக்கு சென்றால் சொதப்பி விடுவோம் என்பதால் எப்போதோ நடந்த ஏதாவது ஒரு கோபமான நிகழ்ச்சியை மனதில் நினைத்துக்கொண்டு யோகிபாபுவுடன் நடிக்கும் காட்சிகளில் சமாளித்தேன்” என்ற ராஷ்மி, கன்னடத்தில் தற்போது ‘பாத்ரா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். தவிர, தெலுங்கில் ‘டப்பே டப்பு’ என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார்.

தமிழில் ‘காக்டெய்ல்’ படத்துக்கு பிறகு சி.வி.குமார் தயாரித்து வரும் ‘வைரஸ்’ என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘காக்டெய்ல்’ பட கதாபாத்திரத்திற்கு அப்படியே நேர்மாறாக இந்தப்படத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம். கதாநாயகி என்பதை விட தனது திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே ரொம்ப ஆர்வமாக இருக்கிறாராம் ராஷ்மி.

- எஸ்