ஆறு வருட நடனப் பயணத்திற்கு கிடைத்த பெருமை!
திறமை வாய்ந்த கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு புகழ்பெற்றது சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி. தங்களின் திறமைகளை இங்கு மேடையேற்ற வேண்டும் என்பதே ஒவ்வொரு கலைஞரின் கனவு. அப்படியான தன் கனவை நிறைவேற்றியுள்ளார், பரதக் கலைஞரான மிருத்திகா.பரதநாட்டியத்தில் தன் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தி ‘நாட்டிய மயூரி’ பட்டம் பெற்றுள்ளார், 12 வயதே நிரம்பிய மிருத்திகா. தனது மகளின் கலை ஆர்வம் குறித்து மிருத்திகாவின் தாயார் காயத்ரி நெகிழ்கிறார்.
“மிருத்திகாவிற்கு பரத நாட்டியத்தின் மேல் ஆர்வம் இருப்பதை அறிந்து அவரை ஸ்ரீகுரு கிருபா நாட்டியக்கலா மந்திர் என்ற நடனப் பள்ளியில் சேர்த்துவிட்டேன். 2019ல் நடனப் பயிற்சியை தொடங்கி அடுத்த ஆறு வருடங்களில் அரங்கேற்றம் செய்யுமளவு தயாராகிவிட்டார். இந்த ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியில் அவரின் அரங்கேற்ற நிகழ்ச்சி நிகழ்ந்தது.
அவரின் நடனத்தைப் பார்த்து நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கலைவித்துவான்கள், பரதக் கலைஞர்கள், மிருத்திகாவின் குரு அனைவரும் மனம் மகிழ்ந்து பாராட்டினார்கள். தொடர்ந்து 37 நிமிடங்கள் அவரின் வர்ணம் அவையோர் அனைவரையும் கவர்ந்தது. இவர் நடனம் பயில ஆரம்பித்த பிறகு பல நடனப் போட்டியில் பங்கு பெற்றுள்ளார். அதில் தேசிய அளவிலான பரிசுகளை பெற்றுள்ளார். மேலும் காமராஜர் அரங்கத்தில் ‘திருப்பங்கள் தரும் திருப்பதி வைபவம்’ எனும் நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்’’ என்றவரை தொடர்ந்தார் மிருத்திகா.‘‘என்னுடைய நடனத்தினை கண்டு பலரும் பாராட்டுகளை குவித்தனர். அந்த பாராட்டுகள் அனைத்தும் என் குருவான டாக்டர் லக்ஷ்மி ஜெயபிரியா அவர்களையே சேரும்.
அவர் கொடுத்த கடுமையான பயிற்சி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பு அனைத்தும் என்னுடைய நடனத்தில் பிரதிபலித்தது. இது என்னுடைய ஆறு வருட நடனப் பயணத்திற்கு கிடைத்த பெருமை என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு நடனத்தில் மேல் இருக்கும் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்திற்கு இதுவே உண்மையான சான்று’’ என்றார் மிருத்திகா.
ஆர்.ஆர்
|