ஸ்ரீமுக்தீஸ்வரர் கோயில்
ராஜகோபுர தரிசனம்!
மதுரை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில். 2000 ஆண்டு பழமையான இத்தலம் சிவனின் இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் உள்ள பஞ்ச தலங்களில் வாயு தலமாகவும், சூரியனுடைய ஒளிக்கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் ஒன்றாக இவ்வாலயம் விளங்குகிறது. ஒரு சமயம் துர்வாச முனிவர் சிவ பூஜையை முடித்துவிட்டு பிரசாதமாக மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அதனை தன் வாகனமான ஐராவதத்தின் மீது வைத்தார். மாலையின் மகிமையை அறியாத ஐராவதம், தும்பிக்கையால் கீழே வீசி காலால் மிதித்தது.
 இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், தேவேந்திர பதவியை துறக்கும்படி இந்திரனுக்கும், தெய்வீகத் தன்மையை இழந்து காட்டு யானையாகத் திரியும்படி ஐராவத யானைக்கும் சாபம் கொடுத்தார். சாபம் பெற்ற ஐராவதம் பல நூற்றாண்டுகள் காட்டு யானையாக அலைந்து திரிந்தது. வில்வ வனமாக இருந்த, தற்போது கோயில் உள்ள இங்கு சிவ பூஜை செய்து வழிபட்டது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அதற்கு முக்தி அளித்தார். இப்பகுதி மக்கள் சிவபதம் அடைந்தவர்களுக்காக சிவன் சந்நதியில் முக்தி விளக்கு ஏற்றி வழிபடுவதால், இறைவன் ‘முக்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் மரகதவல்லி. கோயில் பிராகார கோஷ்டத்தில் சிவனுக்கு முன்புறம் உள்ள தூணில் கையில் வீணையை ஏந்திக் கொண்டு, வீணா தட்சிணாமூர்த்தி வீற்றிருப்பது தனிச் சிறப்பு. கோயில் மகா மண்டபத்தில் உள்ள 26க்கும் மேற்பட்ட தூண்களில் பல்வேறு தெய்வ சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சிவாலயங்களில் ஆண்டுக்கு சில விநாடிகள் மட்டுமே சூரிய ஒளிக்கதிர்கள் சுவாமியை வழிபடுவதை காணலாம். ஆனால், இந்த சிவாலயத்தில் மார்ச் 10 முதல் 21ந் தேதி வரை, செப்டம்பர் 19 முதல் 30ந் தேதி வரை முக்தீஸ்வரர் சிலை மீது சூரிய ஒளி 20 நிமிடங்கள் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தத் தருணத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். சூரிய பகவான் இங்கு சிவனை வழிபடுவதால் கோயிலில் நவகிரகங்கள் இல்லை. கொடி மரமும் இல்லை.
இந்தக் கோயிலில் கிழுவை, நெல்லி, மாவிலங்கை மற்றும் வில்வம் ஆகிய நான்கு மரங்கள் ஸ்தல விருட்சமாக உள்ளன. வில்வ மரத்தடியில் சித்தி விநாயகர் சந்நதி உள்ளது. இங்குள்ள நந்தி பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் நந்தி பகவானுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. முக்தீஸ்வரர் கோயில் பாண்டியர் காலத்தில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதால், கட்டிடக்கலைச் சிறப்பைக் கொண்டதாக கருதப்படுகிறது.
பாண்டியர் பாணியில் செதுக்கப்பட்ட கற்கோயில் என்பதால் சிறிய கருவறை, எளிய விமானம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் நாயக்கர் காலத்தில் (16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில்) சில புதுப்பிப்புகள், மண்டபங்கள் கட்டப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், மதுரை முக்தீஸ்வரர் கோயில் நடுப்பாண்டியர் காலக் கோயில் எனக் கருதப்படுகிறது. மிகவும் முக்கியமான விஷயம் இந்தக் ேகாயிலில் கோபுர அமைப்பு கிடையாது என்பதுதான்.
திலகவதி
|