தண்ணீர் ஒவ்வாமையால் தவிக்கும் பெண்!



உணவில் பீட்ரூட் அலர்ஜியா? ஓகே, சாப்பிட வேண்டாம்! முள்ளங்கி அலர்ஜியா? சரி, விட்டுவிடலாம். ஆனால் தண்ணீர் அலர்ஜி என்றால் என்ன செய்வது? ஒருவரை எப்படிக் காப்பாற்றுவீர்கள்! கற்பனையல்ல. ரேச்சல் வார்விக் என்ற பெண் தண்ணீர் அலர்ஜியினால் தண்ணீரை அமிலமாய் ஒதுக்கி வாழ்ந்து வருகிறார்.

ஒரு குவளையில் உள்ள நீரை அருந்துவதைக்கூட விஷம் போல பிரயத்தனம் செய்து அருந்த வேண்டியிருக்கிறது. தண்ணீர் உள்ளே போனதும் கடுமையான அவதியில் முகம் வாடி சோர்கிறார் ரேச்சல். குடிப்பது மட்டுமல்ல, குளிப்பதிலும் இதே சிக்கல்தான். அவ்வளவு ஏன்? அவருடைய உடலில் சுரக்கும் வியர்வையே அவருக்கு எதிரியாகிவிட்டது.

 ‘‘வியர்வை பெருகிய சூழலில் நான் மாரத்தான் ஓட்டம் ஓடிய களைப்பை உணர்வேன். கடுமையான எரிச்சல், உடல் வீக்கம் என பல மணி நேரங்களுக்கு கடும் வேதனையைத் தாங்கவே முடியாது.  இந்த வேதனையைத் தாங்காமல் அழுதாலும் கண்ணீர் என் தோலில் பட்டால் முகமும் வீங்கி கடும் வேதனையைத்தான் தரும் என்பதால் அழுவதுமில்லை’’ என விரக்தியாகப் பேசும் ரேச்சலுக்கு தெம்பு தரும் எந்த ஆறுதலும் நம்மிடமில்லை.

இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய்க்கு  ‘அக்வாஜெனிக் அர்டிகாரியா’ என்று பெயர். மிகவும் அரிதாக ஏற்படும் இந்நோயினால் தண்ணீர் உடலில் பட்டவுடன் கழுத்து, முழங்கை, தொடை உள்ளிட்ட பகுதிகளில் கொப்புளம் போல மாறி தடிக்கும். சிலருக்கு இந்த இடங்கள் கடும் அரிப்பை ஏற்படுத்தலாம். அரிப்பு ஏற்படுத்தும் பொருள் ஏதும் தோலில் படாத நிலையில் 60 நிமிடங்களில் எரிச்சல் நின்று விடும்.  

நாசா உட்பட பல விண்வெளி நிறுவனங்களும் செயற்கைக்கோளை அனுப்பி ஒவ்வொரு கோளாக தண்ணீரைத் தேடிக்கொண்டிருக்கிற சூழலில் தண்ணீர் அலர்ஜி என்று அலறுகிற பெண்ணின் நோய் ஆச்சர்யம்தான். மனித உடலில் 70 சதவிகிதம் நீர்தான் உள்ளது.  ரேச்சலுக்கு உடலில் உள்ளே உள்ள நீரினால் எந்த சிக்கலும் இல்லை. வெளியிலிருந்து அவர் அருந்தும் நீர்தான்  சிக்கலை ஏற்படுத்துகிறது.

‘‘நீரில் உள்ள உப்பும் தூய்மையின்மையும்தான் அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கக் கூடும். வேதியியல் பொருட்கள் இல்லாத நீரை காய்ச்சி வடிகட்டிப் பருகினால் போதுமானது’’ என்று மருத்துவர்கள் கூறினாலும், தீர்மானகரமான காரணம் என்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. 

‘‘பொதுவாக நீர் ஒருவரின் தோலில் படுவது இறந்துபோன செல்களின் மேல்தான். இதிலுள்ள எண்ணெய்ப் பொருட்கள் நீருடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருட்களினை எதிர்ப்பதன் விளைவாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ரேச்சலை முகம் வீங்கச் செய்து  செய்திருக்கிறது’’ என்கிறார், ஜெர்மனியில் உள்ள ஐரோப்பிய அலர்ஜி ஃபவுண்டேஷனின்  தோல் சிகிச்சை நிபுணர்  மார்கஸ் மாரார்.

 ‘‘40 ஆண்டு களாக காலையில் எழுந்ததும் வீக்கமும் வலியுமாக இருக்கிறது என்று கூறிவரும் பல்வேறு அலர்ஜி நோயாளிகளைக் கவனித்திருக்கிறேன். ஆனால் அலர்ஜி வகைகளிலேயே இது மிகவும் அரியதும் மோசமானதுமான ஒன்று’’ என்கிறார் மார்கஸ்.

ரேச்சலின் உடலில் இந்த அலர்ஜி 12 வயதிலேயே தொடங்கிவிட்டது. நீச்சலடித்த பின்பு உடல் அலர்ஜியால் வீங்கிய நிலையில் சிகிச்சைக்கு வந்த ரேச்சலுக்கு குறிப்பிட்ட தோல் நோய் இருப்பதை மருத்துவர் கூறியிருக்கிறார். ஆனால் வாழ்வது அப்படியொன்றும் இதனால் கடினமாகிவிடவில்லை. அதிகளவு உடல் வியர்க்காதபடி வேலை செய்யும் ரேச்சல், தளர்வான உடை அணிகிறார். நீருக்கு பதில் தாகம் எடுத்தால் பாலை மட்டுமே அதிகளவு அருந்துகிறார் என்பதோடு கவனமாக இருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.  

உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பொருளைத் தடுக்க உடல் ஏற்படுத்தும் பொருளான ஹிஸ்டாமைனை தடுத்தால் அலர்ஜி தீரும் என்று நம்பிய மார்கஸ் குழுவின் நம்பிக்கை விரைவிலேயே ஐஜிஇ(Ige) என்ற அலர்ஜியைத் தூண்டும் பொருளால் பொய்த்துப் போனது.

அதனைக் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டதாக ஆஸ்துமாவிற்கு பயன்படுத்தும் ஒமாலிசுமாப் (Omalizumab) எனும் மருந்தை 40 வயதான அரிப்புநோய் கொண்ட பெண்ணின் உடலில் பயன்படுத்தி இறுதியில் வெற்றி கண்டனர். ஆகஸ்ட் 2009 அன்று தொடங்கிய ஆராய்ச்சியின் மேல்  அம்மருந்தின் தயாரிப்பாளர் உட்பட பலருக்கும் அணுவளவும் நம்பிக்கை இல்லை. ஏன்? நோயின் வரலாறு அப்படி!

அக்வாஜெனிக் அர்டிகாரியா எனும் இந்நோயானது, 23 கோடி மக்களில் ஒருவரை மட்டுமே பாதிக்கக் கூடியது. இந்த ஒப்பீட்டளவில் உலகம் முழுவதும் 32 பேர் மட்டுமே இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இந்த சிக்கலால் அக்வாஜெனிக் அலர்ஜி நோயைத் தீர்க்க நோயாளிகளைத் தேடுவது என்பது கல்லில் நார் உரிக்கும் கதைதான்.

தற்போது மார்கஸ் கூறிய ஒமாலிசுமாப் மருந்தை பல யூரோக்களை தண்ணீராய் செலவழித்து ரேச்சல் வாங்கிப் பயன்படுத்துகிறார் என்றாலும், இது தொடக்கநிலை ஆராய்ச்சியிலுள்ள மருந்துதான் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘‘மருந்து நிறுவனமே விரிவான ஆராய்ச்சி செய்தால் அரிய தண்ணீர் அலர்ஜி நோயை எளிதில் குணப்படுத்த முடியும்’’ என்று நம்பிக்கையோடு பேசுகிறார் மார்கஸ் மாரார். நல்லது நடந்தால் சரிதான்.

- கா.சி. வின்சென்ட்