வரலாற்றில் சில அதிசயங்கள்



வரலாற்றில் நடந்த நிகழ்வுகள் மர்ம நாவலைவிட சுவாரஸ்யமானவை. ‘அட, எப்படி இப்படி?’ என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கும்  சில சம்பவங்கள்...

காப்பாற்றிய லேட்!

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணம் பீட்ரைஸ் என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி 15 பாடகர்கள் கூட்டாகச் சேர்ந்து காலை 7.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர தாமதமானது. பாடகி ஒருவர், ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்துபோய் கிளம்பத் தாமதமானது. இன்னொருவருக்கு காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை. இப்படி ஒவ்வொருவருக்கும் குறித்த நேரத்தில் வர முடியாதபடி தடை ஏற்பட்டது. காலை 7.25க்கு வெடிகுண்டு வெடித்து சர்ச் தரைமட்டமானது. ஒருவேளை அவர்கள் சரியான நேரத்துக்கு வந்திருந்தால் அத்தனை பேரும் இறந்திருப்பார்கள்.

எல்லாம் ஒன்றே!

1900ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய மன்னர் உம்பர்டோ, மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணவருந்தச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தார். அவரிடம் பேசியபோது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்டோ. இருவரது மனைவியின் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடி சூட்டிய அதே நாளில்தான் இவரும் ஓட்டலைத் துவக்கினார்.  இருவர் பிறந்ததும் ஒரே நாள், 14.3.1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர், ஒரு மாதம் கழித்து 29.7.1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கிச் சூட்டில் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.



லேட்டாகப் பாய்ந்த புல்லட்!

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவர் 1883ம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக்கொண்டார். அவள் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ள, அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உரசிக் கொண்டு போய் அங்கிருந்த மரத்தில் பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தார். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தார். அப்படிச் செய்யும்போது அந்த மரம் சுக்குநூறாக வெடித்தது. அப்போது அதில் ஏற்கனவே புதைந்திருந்த குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே அவர் மரணம் அடைந்தார். பல வருடங்கள் காத்திருந்து அந்தக் குண்டு பழி தீர்த்துக்கொண்டது!

இரட்டையர்களின் ஒற்றுமை!

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் பிறந்தார்கள் அந்த இரட்டையர்கள். இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலை தூரக் குடும்பங்களுக்கு தத்து தரப்பட்டனர். இரு குடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்ணையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்ணை. இருவரும் தங்கள் நாய்க்கு ‘டாய்’ என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணைந்த அந்த இரட்டையர், தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கையில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

- சூர்யா சரவணன்