நீ பாதி நான் பாதி!



மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!

முடியாத தவம் என்னைக் குத்திக் கிளறும் வன்மம் மிகுந்த உன் அழகை எப்படியடி பொறுத்துக் கொள்வேன் இரு கண்களையும் இறுக மூடி...
- நா.வே.அருள்

செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும் இருக்கிறார்கள். பிசினஸ் வேலையாக அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்பவர். வயது நாற்பதைத் தாண்டிவிட்டாலும் இளமை முறுக்கும் செக்ஸ் ஆர்வமும் குறையாதவர். மனைவிக்கு இவர் அடிக்கடி எதற்கு வெளியூர் போகிறார் என்று சந்தேகம். ஒருநாள் அவருடைய சூட்கேஸை சோதனை போட்டார்.

செந்தில்நாதன் யாரோ ஒரு பெண்ணுக்காக வாங்கிய உடைகள், நகைகளுக்கான பில் கிடைத்தது. திடுக்கிட்டுப் போனார். விசாரித்தபோது செந்தில்நாதன் வேறொரு பெண்ணுடன் தனக்கு உறவிருப்பதை ஒப்புக் கொண்டார்.

செந்தில்நாதன் பாலியல் வேட்கையுடன் அணுகும் போதெல்லாம் மறுத்துவிடுவார் மனைவி. ‘வளர்ந்த பசங்களை வீட்ல வச்சுகிட்டு இது தேவையா?’ என்பது மனைவியின் நியாயம்.  ‘வீட்டு சாப்பாடு சரியில்லைன்னா, ஆம்பளை ஹோட்டலுக்குத்தானே போவான்? அது மாதிரிதான் இதுவும். நீ உடன்படலை.

நான் இன்னொரு பெண்ணை தேடிக்கிட்டேன். இதுல என்ன தப்பு?’ இது செந்தில்நாதன் தரப்பு நியாயம். இதற்கு செக்ஸ் முக்கிய காரணமாக இருந்தாலும், வேறு  காரணங்களும் உள்ளன. வரைமுறையற்ற உறவுகள் எப்படி ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

எதிர்பாராத ஒரு சூழ்நிலை இது போன்ற உறவை ஏற்படுத்திவிடும். அது திட்டமிடப்படாத நிகழ்வாக இருக்கும்... ஏதோ ஓர் இரவில் ஏற்படும்... அலுவலகத்தில் உருவாகும்... பயணத்தின் போது கிடைக்கும்... சுயக்கட்டுப்பாடு இல்லாமல் உணர்ச்சி வசப்படும்போது நிகழும்... இருவரும் போதையில் இருக்கும் போது உருவாகும்... முன்பே பழக்கமானவர்கள் மீண்டும் சந்திக்கும் போது நிகழும்.

சிலர் பெருமைக்காக திருட்டு உறவு வைத்துக் கொள்வார்கள். துணை மீதுள்ள கோபத்தால், பழிவாங்க வேறொருவருடன் உறவை வைத்துக் கொள்வதும் நடக்கும். விவாகரத்து ஆன தம்பதியர் சிலர் சோதனைக்காக மற்றொருவருடன் உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள். இவையெல்லாம் குறுகிய கால உறவுகள்.அடுத்து நீண்ட கால உறவுகள். திருமண உறவை நீட்டிக்க ஏற்படுத்திக் கொள்வது ஒருவகை.

மனைவி உடல்நலம் சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டிருப்பார். கணவர் தனது செக்ஸ் தேவைக்காக மற்றொரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பார். தெரிந்தாலும் மனைவி இதைக் கண்டுகொள்ள மாட்டார். சில ஆண்களுக்கு பல பெண்களை அனுபவிக்கும் ஆசை இருக்கும். இதற்காகவே பலரிடம் உறவு வைத்திருப்பார்கள். இதில் மனப்பகிர்வு இருக்காது... உடல்சுகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

தேவைக்கேற்ப உறவை உருவாக்கிக் கொள்வது இன்னொரு வகை. உடலுறவில் புதுப்புது நிலைகளில் சுகம் பெற விரும்புவார்கள் சிலர். அதற்குப் பொருத்தமான ஆண் / பெண்ணைக் கவர்ந்து உறவை உருவாக்கிக் கொள்வார்கள். வாய்வழிப் புணர்ச்சி, ஆசனவாய் உறவு போன்ற வேறுபட்ட செக்ஸ் நிலைகளை விரும்புகிறவர்கள், திருமண உறவைத் தாண்டி, வெளியே உறவை தேடிக் கொள்கிறார்கள்.

திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் என்பது போல திருட்டு உறவில் இன்பம் காண்கிறவர்கள்!பெண்கள் ஒருவரை மனதுக்குப் பிடித்தால்தான் உடலுறவுக்கே நகர்வார்கள். ஆண்கள் விதவிதமாக அனுபவிக்க வேண்டும் என்ற த்ரில்லுக்காகவே பெரும்பாலும் திருட்டு உறவுகளில் ஈடுபடுகிறார்கள்.

இது மாதிரியான உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பிரச்னை வரலாம். அப்படி வரும் போது நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ ஆலோசனை கேட்கக்கூடாது. அவர்கள் அதை வெளியே சொல்லி, பிரச்னையை பெரிதாக்க வாய்ப்புகள் அதிகம். உளவியல் நிபுணரிடம் தகுந்த ஆலோசனை பெற்று பிரச்னையை சரி செய்ய வேண்டும்.

தாம்பத்திய உறவில் சரியான புரிதல் இருந்தால், இது போன்ற தேவையற்ற உறவுகளோ, பிரச்னைகளோ ஏற்பட வாய்ப்பில்லை. செக்ஸ் உறவில் கணவன், மனைவி இருவருமே ஒருவரின் தேவையை மற்றவர் தயங்காமல் கேட்டுப் பெற்றுக் கொள்வதே சிறந்தது. தாம்பத்திய உறவில் சரியான புரிதல் இருந்தால், தேவையற்ற உறவுகளோ, பிரச்னைகளோ ஏற்பட வாய்ப்பில்லை.

(தயக்கம் களைவோம்!)

டாக்டர் டி.நாராயண ரெட்டி