சாப்பிட்ட உடனே இனிப்பு சாப்பிடத் தோன்றுவது ஏன் ?
டாக்டர் எனக்கொரு டவுட்டு
கேள்வி: உணவுக்குப் பிறகு இனிப்புகள், பழங்கள், தேநீர், குளிர்பானங்கள் அருந்துவது என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கிறது. இது ஏன் ?- எஸ்.விஸ்வநாதன், வேலூர் உணவியல் நிபுணர் கோமதி கௌதமன் :
 ‘‘பெரும்பாலும் 40 முதல் 50 வயது வரைஉள்ளவர்கள்தான் சாப்பிட்டவுடன் ஏதாவதொரு இனிப்பு சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்களுக்கு இந்தப் பழக்கம் ஏற்பட காரணமாகிறது. மேலும் ஆண்கள் அதிகமாக வெளியிடங்கள், உணவகங்களில் சாப்பிடுவதால் இந்தப் பழக்கம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
இதற்குக் காரணம், நமது நாக்கைச் சுற்றிலும் உள்ள சுவை அரும்புகள் (Taste buds)தான். இந்த சுவை அரும்புகளின் சுரப்பி கள் மூலமாகவே இனிப்பு, கசப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு போன்ற அறுசுவைகளையும் நம்மால் வேறுபடுத்தி உணர முடிகிறது.
வயது அதிகமாக அதிகமாக உடலில் சுரக்கும் எல்லா ஹார்மோன்களின் அளவும் குறைவதால் சுவை அரும்புகளின் செயல்பாடுகளும் குறைகிறது. இதனால்தான் வயதான வர்கள் சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனால்தான் அவர்களால் சுவைகளையும் சரியாக பிரித்து உணர முடிவதில்லை.
‘சாப்பிட்ட உடனேயே ஸ்வீட் சாப்பிடலாமா’ என்று கேட்டால், ‘கூடாது’ என்பதுதான் பதில். நாம் உட்கொள்ளும் உணவு செரிப்பதற்கு சில என்சைம்கள் சுரக்க வேண்டும். உணவுக்குப் பிறகு இடைவெளி கிடைக்கும்போதுதான் செரிமானத்திற்கான என்சைம்கள் சுரப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சாப்பிட்ட உடனே ஸ்வீட் சாப்பிடும்போது உணவின் முழுச்சத்துக்களையும் உடல் உள்ளுறுப்புகள் கிரகிப்பதில் தடை ஏற்படும். இனிப்புகளில் அதிக கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. அதனால் உணவு சாப்பிட்டவுடன் இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.
தவிர்க்க முடியாத பட்சத்தில் எள், கடலை மிட்டாய் போன்றவற்றை அரை மணி நேரத்துக்குப் பிறகு சாப்பிடலாம். எள், வெல்லம் போன்றவை உடலின் கொழுப்பைக் கரைக்கவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவும்.’’
- கௌதம் படம் : ஆர்.கோபால்.
|