அதிர்ச்சி வைத்தியம்!
கொஞ்சம் மனசு
‘‘வன்முறை, விபத்து, இயற்கைச்சீற்றம் போன்ற அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுக்கும் பாதிப்புக்குள்ளாகி, பின் அதிலிருந்து மீண்டு வருகிறீர்கள். உடல் ரீதியாக நீங்கள் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கலாம்.
 ஆனால், அதன் பிறகும் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதே நிகழ்வுக்குள் மீண்டும் மீண்டும் ஆட்பட்டுவிட்டது போலான அச்சம் உங்களுக்கு ஏற்படலாம். இதனையே உளவியல் மருத்துவத்தில் அதிர்ச்சியைத் தொடரும் மன அழுத்தப் பிறழ்வு (Post traumatic stress disorder) என்று குறிப்பிடுகின்றனர்’’ என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.
இந்நோயின் தன்மை, விளைவுகள், அதற்கான தீர்வுகள் பற்றி அவரிடம் தொடர்ந்து பேசினோம்...‘‘உளவியல் சிகிச்சைக்காக ஒரு பெண் வந்திருந்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் நள்ளிரவு 2 மணியளவில் தூங்கிக் கொண்டிருக்கும்போதே அவரது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. பயந்துபோய் எழுந்தவர் உடனடியாக குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
வீட்டிலிருந்த பொருட்கள் வெள்ளத்திலேயே அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகும், அவ்வப்போது நள்ளிரவில் திடுக்கென எழுந்து பயத்துடன் வேர்க்க விறுவிறுக்க தண்ணீர் புகுந்து விட்டதா என கைகளைத் தரையில் தொட்டுப் பார்க்கும் அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது.
அந்த உணர்வதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் மீண்டும் நடப்பது போலவே அவருக்குத் தோன்றுகிறது. கவுன்சிலிங் மற்றும் மருந்துகள் மூலம் அவரது பிரச்னைக்குத் தீர்வைக் கொடுத்தேன். பாதிப்பிலிருந்து வெளி வந்தாலும் அந்தப் பாதிப்பால் ஏற்பட்ட உணர்வதிர்ச்சியில்இருந்து மீளாத நிலைதான் இது.
உயிர் பயத்தை அல்லது கடும் மன அழுத்தத்தை உருவாக்கும் நிகழ்வே உணர்வதிர்ச்சி. தனிப்பட்ட உணர்வதிர்ச்சி, போர் மற்றும் பயங்கரவாதங்களால் ஏற்படும் உணர்வதிர்ச்சி, பேரிடரால் ஏற்படும் உணர்வதிர்ச்சி என இது மூன்று வகைப்படும். தனிப்பட்ட உணர்வதிர்ச்சி என்பது குறிப்பிட்ட ஒருவருக்கு கடும் பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் நிகழ்வு.
உதாரணத்துக்கு பலாத்காரத்துக்கு ஆளாதல், நேசித்தவரை இழக்க நேரிடுதல், வன்முறை, விபத்து ஆகியவற்றுக்கு ஆளானவர்களுக்கு ஏற்படுவதை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். ஈழம், சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்ச்சம்பவங்களை இரண்டாவது வகையான உணர்வதிர்ச்சிக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
போர்களால் பொதுமக்கள் மட்டுமின்றி போர் வீரர்களும் உணர்வதிர்ச்சிக்கு ஆளாகின்றனர். நில அதிர்வு, சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர்கள் பெரும்பாலான மக்களுக்கு உணர்வதிர்ச்சியை ஏற்படுத்தலாம். சுனாமியால் பாதிக்கப்பட்ட 70.7 சதவிகிதம் பேருக்கு இப்பிரச்னை உடனடியாகவும், 10.9 சதவிகிதம் பேருக்கு பின் நாட்களிலும் ஏற்பட்டது.
உலகப்போரின் போதுதான் இப்பிரச்னை முக்கியத்துவம் அடைந்தது. Soldier’s heart என்றும் Shell shock syndrome என்றும் அப்போது இப்பிரச்னையைக் குறிப்பிட்டிருக்கின்றனர். போரின்போது ஏற்படும் உடல் சார்ந்த காயங்கள் மற்றும் சக வீரர்களின் இழப்புகள் உணர்வதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
நேரடியாக பாதிக்கப்படுபவருக்கு மட்டுமே உணர்வதிர்ச்சி ஏற்படும் என்றில்லை. பார்வையாளர்களாக இருப்பவர்களுக்கும் உணர்வதிர்ச்சி ஏற்படலாம்’’ என்றவர் அதற்கான அறிகுறிகளைத் தொடர்ந்து விளக்குகிறார். ‘‘பாதிக்கப்பட்டவர் அந்த நிகழ்வு நடந்த காட்சியை மனக்கண்ணில் கொண்டு வருவதன் மூலமும், கெட்ட கனவுகள் மூலமும், பழைய நினைவுகள் மூலமும் உணர்வதிர்ச்சியைத் தொடர்ந்து அனுபவித்தல்,
தனக்கு உணர்வதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தை நினைவுபடுத்தும் சூழலைத் தவிர்த்தல், அச்சத்தின் காரணமாக விழித்திருப்பது போன்ற உணர்வே இருப்பதால் நிம்மதியான உறக்கம் இல்லாமல் போவது, எரிச்சல், மனதைக் குவிக்க இயலாமை, தூக்கி வாரிப்போடுதல் போன்ற உணர்வுகள் தோன்றுவது, மனச்சோர்வு, அன்றாட வாழ்வில் ஆர்வமின்மை, களைப்பு, வலி, யாருடனும் இயல்பாகப் பழக இயலாமை, பணி புரிய இயலாமை, தற்கொலை எண்ணம் ஆகியவை இதற்கான முக்கிய அறிகுறிகள்.
இப்பிரச்னைக்கு குழந்தைகள் ஆளாகி இருந்தால் கல்வித்திறன் குறையும். நன்றாக படிக்கும் குழந்தை திடீரென படிக்காமலேயே போகலாம்’’ என்றவரிடம் இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை என்ன என்று கேட்டோம்.‘‘பாதிக்கப்பட்டவர் அந்த உணர்வதிர்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மனம்விட்டுப் பேசும்போது உணர்வதிர்ச்சி மனதுக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
உணர்வதிர்ச்சிக்கு ஒருவர் ஆளாவதும் அதற்குப் பிறகு முதல் இரண்டு மாதங்களுக்கு அந்த நினைவாக இருப்பதும் சாதாரணமான ஒன்றுதான். அதைத் தாண்டியும் வாழ்க்கையில் அது ஓர் இடையூறாக மாறும்போது மருத்துவத் தீர்வை நாட வேண்டும். இதேபோன்று வெவ்வேறு காரணங்களினால் உணர்வதிர்ச்சி ஏற்பட்டு இப்பிரச்னைக்கு ஆளாகியுள்ளவர்களை இணைத்து ஒரு கூட்டம் நடத்தலாம். அதன் மூலம் அவர்கள் தங்களது பிரச்னைகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதும் ஒரு விடுபடுதலாக இருக்கும்.
தனியாக இல்லாமல் நண்பர்களுடன் இருக்கும்படியான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பேரிடர் சமயங்களில் அரசு தரப்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்குவதும் அவசியமானதாகும். உளவியல்பூர்வமாக இப்பிரச்னையை அணுகி அதற்கு கவுன்சிலிங் கொடுத்தும்,மருந்து,மாத்திரைகள் மூலமும் இதனைக் குணப்படுத்தலாம்’’ என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.
உணர்வதிர்ச்சிக்கு ஒருவர் ஆளாவதும் அதற்குப் பிறகு முதல் இரண்டு மாதங்களுக்கு அந்த நினைவாக இருப்பதும் சாதாரணமான ஒன்றுதான். அதைத் தாண்டியும் வாழ்க்கையில் அது ஓர் இடையூறாக மாறும்போது மருத்துவத் தீர்வை நாட வேண்டும்.
- கி.ச.திலீபன்
|