அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ‘நோட்டீஸ்’!



சர்ச்சை

நம் வழக்கத்தில் ஒரு பழமொழி உண்டு ‘பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆன கதை‘ என்பார்கள். நினைப்பது ஒன்றாகவும் நடந்தது ஒன்றாகவும் ஆனால் இப்படி சொல்வார்கள். தமிழக ஆசிரியர்களில் 8,000 பேருக்கு இப்படி ஒரு நிலைமை உண்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகப் பணியாளர் சீர்திருத்தம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும்போது, உயர்கல்வி படிக்கவும், சொத்துக்கள் வாங்கவும், வெளிநாடு செல்லவும், தங்கள் துறையின் முன் அனுமதி பெற வேண்டும் என்பதும், அனுமதி பெறாவிட்டால், விதிமீறலாக கருதப்பட்டு, துறை ரீதியாக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் நடைமுறை சட்டமாக உள்ளது. அதேநேரத்தில், அனுமதி பெற்று, உயர்கல்வி படித்து முடித்தால், அவர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்படும்.

நிலைமை இப்படி இருக்க இந்த ஆண்டு, உயர்கல்வி ஊக்க ஊதியம் கேட்டு, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு, ஆசிரியர்கள் பலர் கடிதம் அனுப்பியுள்ளனர். அவற்றை பரிசீலித்தபோது, பெரும்பாலானவர்கள், தங்கள் துறை தலைவர்களிடம் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, முன் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கல்வித்துறை அதிகாரிகளுக்குப் பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். இதை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களிலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் வாயிலாக, அனுமதி பெறாமல் படித்தவர்களுக்கு, விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் மாநிலம் முழுவதும், 8,000 பேரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. உயர்கல்வி படித்தது எப்படி? படிக்க சென்றபோது, பணியின் நேரம் கைவிடப்பட்டதா? உயர்கல்வி படித்த காலம் எப்போது? துறைத் தலைமைக்கு தெரியாமல், உயர்கல்வி படித்த காரணம் என்ன? என்பன போன்ற பல்வேறு வகையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸுக்கு சரியாக விளக்கம் தராதவர்கள் மீது, ‘17 - பி’ என்ற விதிமீறல் குற்றச்சாட்டில், ‘மெமோ’ கொடுக்கவும், பதவி உயர்வை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகிவிட்டது இந்த எட்டாயிரம் ஆசிரியர்களின் நிலை.

-முத்து