பொதுத்தேர்வை எதிர்கொள்ள சில ஆலோசனைகள்!



பொதுத்தேர்வு டிப்ஸ்

பொதுத்தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களே கொஞ்சம் இதையும் படித்துவிடுங்கள். நீங்கள் எவ்வளவு நன்றாகப் படித்துள்ளீர்கள் என்பதை உங்கள் விடைத்தாள்களே எடுத்துக்காட்டிவிடும்.

எனவே, நன்றாகப் படிப்பதைவிடவும் தேர்வில் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அது மிகச்சிறந்த கலை. அக்கலையை ஒருசில மாணவர்களே கற்றுவைத்துள்ளனர். நீங்களும் அக்கலையைக் கற்றுக்கொண்டால் தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ளலாம்.

முதலில் நன்கு தெரிந்த வினாக்களுக்கு விடைஎழுதுவதே சிறந்த முறை. தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் வினாக்களைப் பகுத்துக்கொண்டு விடை எழுதினால் பதற்றத்தைக் குறைக்கலாம். பத்து மதிப்பெண் வினாக்களை முதலில் எழுதி மதிப்பெண்களை ஈட்டி வைத்துக்கொண்டால் நம்மை அறியாமலேயே ஒரு தெம்பு வந்துவிடும்.

அதன் பிறகு ஐந்து மதிப்பெண் வினாக்கள் அடுத்து இரண்டு மதிப்பெண் வினாக்கள் கடைசியாக ஒரு மதிப்பெண் என்று மாற்றி எழுதுவதும் ஒரு யுக்திதான். சிலர் வினாத்தாளில் உள்ளபடி முதலில் ஒரு மதிப்பெண்ணிலிருந்து தொடங்குவார்கள். அது கடைசிநேரப் பதற்றத்திற்கு வித்திட்டுவிடும்.

மாணவர்கள் பதற்றமில்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக வினாத்தாள் படிப்பதற்கு எனக் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாணவர்கள் அந்த நேரத்தையும் தேர்வு எழுதுவதற்கே பயன்படுத்திக்கொண்டால் கூடுதல் மதிப்பெண் பெறலாம் என நினைக்கின்றனர். அது தவறான நினைப்பு. அப்படி செய்தால் மதிப்பெண்கள் கூடுவதற்குப் பதிலாகக் குறைவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது. வினாக்களில் உள்ள லாஜிக்கை புரிந்துகொள்ள நிதானமாக வினாக்களை ஒரு முறை படிப்பது அவசியம். எனவே, அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி நிதானமாக வினாத்தாளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள் பிறகு விடை எழுதத் தொடங்குங்கள்.

* தேர்வைக் கண்டு பயம் வேண்டாம்தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.பாடத்தை மனப்பாடமாகப் படிக்காமல் உள் கருத்தை உள்வாங்கிக்கொண்டு படித்தால் எளிதாகத் தேர்வு எழுதலாம்.

தேவை இல்லாத குறியீடுகளை எழுதக்கூடாது. விடைகளைச் சரியான முறையில் எழுதுங்கள். அப்போதுதான் விடைத்தாள் மீது மதிப்பு ஏற்பட்டு மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும்.கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வார். அப்படி இருக்கும்போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பதோடு அடித்தல் திருத்தல் இன்றி எழுதுவது அவசியம்.

* தேர்வு எழுதும்போதுதேர்வு எழுதப் பள்ளிக்குச் சென்றவுடன் நேராகத் தேர்வறைக்குச் சென்று விடுங்கள், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால் அது நம்மைப் பலவீனப்
படுத்தக்கூடும்.

தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம். எனவே, நமது நம்பிக்கையை பலவீனப்படுத்தக்கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.

தேர்வறைக்குள் நுழைந்தவுடன் உங்கள் சட்டைப் பை, பேன்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாகப் பரிசோதித்துக் கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களைத் தூக்கி எறிந்துவிடுங்கள். தேர்வு எழுதும் நாற்காலியின் மீது ஏதாவது எழுதியிருந்தால் அழித்துவிடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வுக் கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.

கேள்வித்தாள் வந்ததும் கவனமாகப் படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t loose your confident). தொடர்ந்து கேள்வித்தாளைப் படிக்கவும். நன்றாகத் தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாகத் தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்குத் தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம்.
எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.

பக்கம் பக்கமாகப் பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள்(Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிக்கோடிடுங்கள். சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and Equations) கட்டத்திற்குள் எழுதுங்கள். வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள். பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும். எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள். ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள். ஒரே கேள்வியை நீண்டநேரம் எழுதிக்கொண்டு இருக்க வேண்டாம். விடைத்தாளை அளிக்கும் முன் கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதி பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள். எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைத்தாளை அழகுபடுத்தும் வேலையைச் செய்யுங்கள்.

* தேர்வு எழுதி முடித்தபிறகு தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்குச் செல்லுங்கள் நண்பர்களுடன் வினா-விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிக்காட்டி நமக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள்.

இது நம்மைக் கவலையில் ஆழ்த்திவிடும். இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதைப் பாதிக்கும். நாம் என்னதான் வருத்தப்பட்டாலும் கவலைப்பட்டாலும் மீண்டும் அந்தத் தேர்வை எழுதமுடியாது. நமக்குத் தெரிந்ததை எழுதிவிட்டோம். எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்குச் சென்று அடுத்த தேர்விற்குப் படிக்க ஆரம்பியுங்கள்.                    

இரத்தின புகழேந்தி