பரிட்சை நேரத்திற்கான உணவுமுறை..!



பொதுத்தேர்வு டிப்ஸ்

பரிட்சை நேரங்களில் மாணவர்கள் உணவையும் உடல்நலத்தையும் மறந்து படிப்பது வழக்கம். அதிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? இதனால், உடல் சோர்வடைவதுடன் பரிட்சையும் சரியாக எழுத முடியாமல் போய்விடும்.

இதுபோன்ற நேரங்களில் என்ன மாதிரியான உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உணவியல் ஆலோசகர் யசோதரை கருணாகரன் கூறும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…
ஊட்டச்சத்துகள்தான் ஆரோக்கியமான உடலின் உருவாக்கம் மற்றும் பராமரிப்புக்கு அடித்தளமாகும். முக்கியமாக பரிட்சை நேரத்தில் மாணவர்களுக்குத் தேவைப்படும் முக்கியமான கவனிப்புச் சக்தி, மனப்பாடத்திறன், அறிவுத்திறன், செயல்திறன் மேம்பட ‘சரிவிகித உணவு’ மிகவும் துணைபுரியும்.

சிறுவயதினர் மிகவும் ஈர்க்கப்படுவது எண்ணெயில் பொரித்த மற்றும் துரித உணவுகளைத்தான். இதனால் சரிவிகித உணவில் சுணக்கம் ஏற்படும்.  அவர்களின் விருப்ப உணவு அதிக சக்தியைத் தருமேயொழிய புரதம், வைட்டமின் மற்றும் தாது உப்புகளைத் தராது.

காலை உணவில் புரதம் அதிகம் இருப்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நான்கு மணி நேரம் உயர்நிலையில் வைத்திருக்க உதவும். ஆனால், மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து இரண்டு மணி நேரம்தான் இருக்கச் செய்யும். பசியுடன் சோர்வு ஏற்பட்டால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இட்லி சாம்பார், எண்ணெய் இல்லாத தோசை, கோதுமை பிரெட், பொங்கல், பச்சை வகைச் சட்னி போன்றவை நல்லதொரு காலை உணவாகும்.

மதிய நேரத்தில் ஃபாஸ்ட் ஃபுட் போன்ற குப்பை வகையான உணவுகளைத் தவிர்த்து வைட்டமின் மற்றும் தாது உப்புகள் அதிகம் அடங்கிய காய், சூப், மோர், இளநீர் ஆகியவற்றை உண்பது நல்லது.மாலைநேர உணவாக நொறுக்குத் தீனிக்குப் பதிலாக பழங்கள் நல்லது. இரவில் அதிகளவு மாவுச்சத்து, மிதமான புரதம், குறைந்தளவு கொழுப்புச்சத்து நிறைந்த சப்பாத்தி, முளைவிட்ட பயறு, கிரேவி குறைந்தளவு மசாலாக்களுடன், தயிர்ப் பச்சடி போன்றவற்றை உண்பது உகந்தது.

Threonine என்ற அமினோ அமிலம் உடல் மற்றும் மனரீதியான வளர்ச்சியை ஏற்படுத்தும். இது கோதுமை, கிழங்கு வகைகள், தானியங்களில் அதிகம் உள்ளது. மனஅழுத்தம் ஊட்டச்சத்துகளை நிலைநிறுத்துவதில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும். இது பரிட்சை சமயங்களில் பொதுவாக ஏற்படும் பிரச்னையாகும்.

இதனால் வைட்டமின்-B குறைபாடு ஏற்படும். வைட்டமின்-B அதிகமாக இருப்பது தானியங்கள், oily fish, முளைப்பயறுகள், தயிர் மற்றும் பாலாகும்.
மேலும், மன அழுத்தம் குடலின் இயக்கத்திலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு, மந்தமான நிலை, சக்தியற்ற நிலை போன்றவற்றினால் நடக்கப்போகும் பரிட்சையின் போக்கு எப்படியாகுமோ என்ற பயஉணர்வை அதிகமாக்கிவிடும். இதனைத் தவிர்க்க காலையில் வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி தயிர் உண்பது இன்றியமையாததாகும்.

வைட்டமின் B6 மாணவர்களின் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. முட்டை, மீன், சோயா, வாழைப்பழம் முதலியன சிறந்த வைட்டமின் B6 உணவாகும். வைட்டமின் C பற்றாக்குறை சோர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும். ஆகையால் அவை
அதிகம் உள்ள கொய்யா, புளிப்புப் பழங்கள் முளைப்பயறு வகைகள் நல்லது.

- தோ.திருத்துவராஜ்