துணை ராணுவப் படையில் கான்ஸ்டபிள் பணி!



வாய்ப்பு

447 பேருக்கு வாய்ப்பு!


சி.ஐ.எஸ்.எஃப். என்று சுருக்கமாக சொல்லப்படும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை(Central Industrial Security Force), 1983 ஜூன் 15ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆயுதமேந்திய மத்திய காவல் படைகளுள் ஒன்றாகும். இந்தப் படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.இது இந்தியாவின் முக்கிய தொழில் நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படையாகும்.

அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டடங்கள், புராதன சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கிறது. இதன் தலைமைச் செயலகம் புதுடெல்லியில் உள்ளது. தற்போது இந்தப் படைப்பிரிவில் கான்ஸ்டபிள் தரத்திலான டிரைவர்,  டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 447 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் கான்ஸ்டபிள் டிரைவர் பணிக்கு 344 இடங்களும், கான்ஸ்டபிள் டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் பணிக்கு 103 இடங்களும் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்களும் டிரைவிங் லைசென்ஸ் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 19.3.2018-ம் தேதியை அடிப்படையாகக்கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
தேர்வுசெய்யும் முறை: உடல்அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 19.3.2018.
மேலும் விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள https://cisfrectt.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.