சிறுகதை - ரயில் ஸ்னேகங்கள்...
‘‘திருநெல்வேலி போகிற ட்ராவல்ஸ் பஸ்லாம் இங்கதானே நிற்கும்?’’
சென்னை மாநகரின் அத்தனைக் கூட்டத்திலும் அந்த ஆளிடம் ஏன் கேட்டேன் என்று இப்போது யோசிக்கிறேன். ஒருவேளை மல்லு வேட்டியை மடித்துக் கட்டி, தெத்துப் பல்லுடன், ஒல்லியான கைக்கு பொருந்தாத பெரிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப்புடன் வாட்ச் அணிந்திருந்தது அவரை கொஞ்சம் அப்பாவியாய் காட்டியதால் இருக்கலாம். ‘‘கே.பி.யனா...’’ என்ற கேள்விக்கு ஆமாம்னு சொல்லித் தொலைத்திருந்திருக்கலாம். ‘‘அட ஏ.வி.ஆர்.எம்வியா... அங்க நிக்கும் சார், வாங்க நாங்களும் அதுக்குத்தான் வெயிட்டிங்...’’ என்று அன்யோன்யமாய் அழைத்துப் போய்விட்டார்.

‘‘சாரும் நம்ம பஸ்ஸுதான்... நம்மூர்க்காரர முகத்த பார்த்தா தெரியாதா எனக்கு...’’ என்று அவர் மனைவியிடம் அறிமுகம் செய்தார்.மனைவி கொஞ்சம் தேவலாம். சீ த்ரூ ஜார்ஜெட் சாரியை பதவிசாய் அணிந்து, இவரை விட விவரம் என்று தெரிந்தது. கழுத்தில் ஒரு எட்டு பவுன் சங்கிலி பாரு பாரு என்று மின்னிக் கொண்டிருந்தது.சென்னை வெப்பம் சட்டையிலும், அக்குளிலும் கசகசத்தது.
நின்றவாறே சுற்றிப் பார்த்தேன். ஏகப்பட்ட பாலங்கள், அவற்றின் கொள்ளவுக்கு மூன்று மடங்கு கூடுதலாய் வாகனங்கள், இந்தியா மிளிரும் ரோட்டுக் கடைகள், பளபள கண்ணாடி சுவற்றுக்குப் பின்னால் ஏசியில் புரளும் கரன்சிகள், சம்பந்தமே இல்லாமல் அவற்றின் வாசலில் இருக்கும் பொட்டிக் கடையில் பல்லைக் குத்திக்கொண்டு நிற்கும் பைக் ஆபீஸர்கள், வாய் நிறைய ‘‘....த்தா’’க்களுடன் பொதுஜனம்.
ஏகப்பட்ட மாற்றங்கள் - இருந்தாலும் ஊர் மாறவே இல்லை.‘‘ஃபோன் போட்டு சொல்லாட்டி அப்படியே அழுத்திக்கிட்டு போயிடுவானுங்க... இந்த ஸ்டாப்புக்கு உள்ளியே வரமாட்டானுங்க. நான் அப்பவே ஃபோன் போட்டு சொல்லிட்டேன், நீங்க வேஸ்ட்டா கால் பண்ணிராதீங்க...’’ஊரை விட்டுப் போய் பன்னிரெண்டு வருடங்கள் ஆயிற்று.
கட்டடங்கள் மாறியிருக்கலாம் பாலங்கள் மாறியிருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டிய இந்த மாதிரி முத்திரைகள் ஊர் இன்னும் மாறவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தன.அவர் மனைவியிடம், ஜிப்பா, பவுடர் கர்சீஃப் சகிதமாய் நெற்றியெங்கும் சந்தனத்தோடு இருந்த நபர் பேசிக் கொண்டிருந்தார். ‘‘என்ன நட்சத்திரம்...’’ என்று சந்தனம் விசாரித்துக் கொண்டிருந்தார். ஜோசியராயிருக்கலாம். ‘ஆனி போய் ஆடி வந்தா டாப்புல வருவான்...’ சினிமா வசனம் நமுட்டுச் சிரிப்பாய் ஞாபகத்துக்கு வந்தது.‘‘சாமி அப்படியே புட்டு புட்டு சொல்றாப்புல... என்னய பத்தித்தான் கேட்டுக்கிட்டிருக்கும்...’’ என்று மல்லுவேட்டி சிலாகித்துக் கொண்டிருந்தபோது ‘‘உன் புருஷனுக்கு கொளுந்தியா மேல ஒரு கண்ணு... நீ ஜாக்கிரதையா இருக்கணும்...’’ என்று சந்தனம் எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்.
மல்லு வேட்டி காதிலும் விழ ‘‘அப்படியெல்லாம் ரொம்ப இல்லீங்க... சும்மா ஒரு இது... அவ்ளோதான்...’’ என்று என்னிடம் கெக்கெ பிக்கெவென்று பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார். எனக்கு பஸ் வந்தால் தேவலாமாயிருந்தது. வாட்ச் இன்னமும் லண்டன் டைமை காட்டிக் கொண்டிருக்க செல்போனை மணி பார்க்க எடுத்தேன்.
‘‘டொகொமோவா..?’’‘‘... யாரு...?’’ ‘‘இல்ல செல்லப் பார்த்தா டொகொமா மாதிரி இருக்கேன்னு கேட்டேன்... நாங்க மாறிட்டோம்... இப்பலாம் டவரு மின்ன மாதிரி கெடைக்க மாட்டேங்குது... ஹூம் அவனும் என்னத்த பண்ணுவான்? ஜனத்தொகை பெருத்துப் போச்சு... கவர்மெண்ட்ல அடிச்சிக்கிராய்ங்க ஊசியப் போடுங்கடான்னு யாரு கேக்குறா...’’விஷய ஞானம் காட்ட நினைத்த முனைப்பு அவனிடம் அப்பட்டமாய் தெரிந்தது. சுற்றிப் பார்த்தேன்.
‘‘அந்த கடைக்குப் பின்னாடி இருக்கு சார். அஞ்சு ரூவா... பாத்ரூம்ஸ் போய்ட்டு வரணும்னா வாங்க பைய வேணா பார்த்துக்கிறேன். டபுள்ஸ்ன்னா பத்து ரூபா...’’ அவன் மனைவி சந்தனத்தோடு பலத்த ஆலோசனையில் இருந்தாள். சந்தனம் இப்போது பையைத் துழாவி பெரிய மந்திரவாதி மாதிரி கண்ணை மூடி தாலிக்கு குங்குமப் பொட்டு விட்டுக் கொண்டிருந்தான்.
அவளும் தாலியைக் காட்டிக் கொண்டு, சாமியை நேரில் பார்ப்பது மாதிரி பரவசமாயிருந்தாள்.எனக்கு சந்தனத்தைப் பார்த்தாலே சரியாய்ப் படவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த செயினை ஆட்டையைப் போட்டுக்கொண்டு போகப் போகிறான் என்று உள்மனது சொல்லியது. ப்ச்ச்... இந்த மல்லுவேட்டி என்னிடம் வந்து டோகாமாவா ககோமாவான்னு பிதற்றிக் கொண்டிருக்கிறது. போடா போய்ப் பிடி அங்கே... அந்த சந்தனம் உன் பெண்டாட்டி தாலியை உருவிக் கொண்டிருக்கிறான்...
‘என்னங்க என் தாலியக் காணோம்ங்க...’‘ஓடுறா... அவன்தான் அந்த சந்தனம்தான்... நான் பார்த்தேன்... குங்குமம் வைக்கும் போதே நினைச்சேன். இப்படியா தாலிய பெப்பரப்பேன்னு காட்டுவாங்க... அவன மண்டமேலயே ஒண்ணு போடுறா...’என் சமூகப் பிரக்ஞை வயிற்றை முட்டிக்கொண்டு வர, சில்லறையைத் தேட வேண்டியிருந்தது.
குழாயில் இலவசமாய் சென்னை வெந்நீர் வந்தது. திரும்ப வந்தபோது பஸ் வந்துவிட்டிருந்தது.‘‘சீக்கிரம் வாங்க சார் வண்டி கிளம்பிடப் போகுது. நான்தான் நீங்க பாத்ரூம்ஸ் போயிருக்கீங்கன்னு டிரைவர பிடிச்சு வைச்சிருக்கேன்...’’சந்தனம் எனக்கு முந்தின சீட். மல்லுவேட்டியும் அவன் மனைவியும் அதே வரிசையில் அந்தப்புறம் இரண்டு சீட். என் பக்கத்து சீட் காலி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே மல்லுவேட்டி என் பக்கத்தில் வந்து மாறி உட்கார்ந்தான். ‘‘அவளுக்கு சாமிகிட்ட ஜோசியம் கேக்கணுமாம். நான் இங்க வந்தா உங்களுக்கும் பேச்சுத் துணையா இருக்குமில்ல..?’’ உதவி செய்வதாக அவனே முடிவு கட்டிக் கொண்டான். அவன் மனைவி விண்டோ சீட்டிலிருந்து மல்லுவேட்டியின் சீட்டிற்கு மாறிக் கொண்டு இந்தப்புறம் முன்சீட்டில் இருந்த சந்தனத்திடம் பேசிக் கொண்டிருந்தாள்.‘‘புது சினிமாவாம்... தாம்பரம் தாண்டித்தான் ஆரம்பிப்பான். பிடிச்சிருவாங்கல்ல... அதான்...’’அவன் மனைவி கழுத்தில் செயின் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்தேன்.
தாலி ஜார்ஜெட்டுக்கு வெளியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.‘‘நீங்க கம்மூட்டர்ல வேலை பார்க்கீங்களாமே... பெங்களூர்ல... கரெக்ட்டுத்தானா... சாமிதான் எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைக்காரே...’’விடமாட்டான் என்று தெரிந்தது. ‘‘ம்ம்ம் கரெக்ட்டுத்தான். உங்களுக்கு எந்த ஊரு... என்ன வேலை பார்க்கறீங்க?’’‘‘நமக்கு ஆயிரம் வேலை. காலைல எந்திரிச்சோம்னா அக்கடான்னு வந்து படுக்க ராத்திரி பத்து மணியாயிடும்...”சரிதான். வெட்டி ஆபீஸர் போல.
‘‘சார்... பெங்களூர்ல பொண்ணுங்கலாம் முட்ட முட்ட ரிங்க்ஸ் அடிப்பாங்களாமே... கூட ஆடியிருக்கீங்களா சார்?’’
சந்தனம் பஸ் ஓடும் சத்தத்தில் காது கேட்காத மாதிரி அவன் மனைவி கழுத்துக்கு மிக அருகில் வந்து காதில் பேசிக் கொண்டிருந்தான். அவன் மனைவியும் ரொம்ப ஆழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
ஜனங்களுக்கு தங்களுடைய பிற்காலத்தைப் பற்றிய ஆரூடத்தில்தான் எவ்வளவு அதீத ஆர்வம்.தாம்பரம் தாண்டி புது சினிமா புண்ணியத்தில் கண்கள் தானாய் மூடிக் கொண்டன. முழித்துப் பார்த்தபோது இரவு கவ்வியிருந்தது. பஸ் ஏதோ ஒரு மோட்டலில் நின்று கொண்டிருந்தது. கீழே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. ‘‘பெப்பரப்பேன்னு தாலியக் காட்டும் போதே நினைச்சேன்...’’‘‘யோவ்... இங்க கூச்சல் போட்டு ஒரு பயனும் கிடையாது... ட்ரைவர் வண்டிய அடுத்த போலீஸ் ஸ்டேஷன்ல விடுவார்... நீங்க உங்க பஞ்சாயத்த அங்க வைச்சிக்கோங்க...’’ கண்டக்டர் பலத்த சத்தத்தில் சந்தனத்திடம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். மாட்டிக்கொண்டான் போல.இறங்கிப் போய் பார்த்தேன். சந்தனம் என்னைப் பார்த்ததும் பிடித்துக் கொண்டார்.
‘‘சுக்கிரன் எப்போ வரும்... செவ்வாய் எப்போ வரும்ன்னு சனியன் நூறு ரூபாய குடுத்துட்டு கேட்டுக்கிட்டே வந்தா சார்... நானும் பொம்பளையாச்சே... பாவம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்... பாக்கெட்டுல கத்தையா ஆறாயிரத்தி சொச்சம் வைச்சிருந்தேன் சார்... அவ ஆட்டையப் போட்டுட்டா சார். ஜோடிக் களவாணிங்க... போன ஸ்டாப்புலயே அவசரம்ன்னு இறங்கிப் போய்ட்டாங்களாம்...’’எனக்குப் பகீரென்றது. பாக்கெட்டில் கைவிட்டுத் துழாவினேன். பர்ஸைக் காணவில்லை.ஊர் ரொம்பவே மாறி இருக்கிறது.
- அரூபன்
|