வாழ்க்கையின் அப்பட்டமான பிரதி



‘‘எழுதப் படிக்கக் கற்றிருந்தாலும், 300 வருஷத்துக்கு மேல் நாம் இங்கிலீஷ்காரனுக்கு அடிமையாக இருந்துவிட்டோம். விளைவு, அதே அடிமை மனோபாவமே நம்மிடம் வளர்ந்துவிட்டது. அது இன்னமும் நம்மை விட்டபாடில்லை. உடன்கட்டை ஏறுதல் உட்பட காட்டுமிராண்டித்தனம் ஏகப்பட்டதை நாம்தான் கடைப்பிடித்தோம்.

தமிழ் ஞான மரபை உள்ளே போய்ப் பார்த்தால் ஆச்சரியம் மேலிடுகிறது. போகர் முதலான சித்தர்கள் தகரத்தை தங்கமாக்கியிருக்கிறார்கள், நீரில் நடந்திருக்கிறார்கள், பஞ்ச பூதங்களை ஆட்டிப் படைத்திருக்கிறார்கள். வள்ளலார் ஜோதியில் சென்று மறைந்தார் என்பது பொய்யில்லை... எல்லாமே சாத்தியம்தான். ஆனால், நாம் சிங்கப்பூர், அரபு நாடுகளுக்குப் போய் அடிமைத் தொழில் செய்து பொருளீட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானோம்.

இன்றைய தமிழ் எப்படியிருக்கிறது..? 5000 வருடத்து பழைய தமிழ் வரலாறு தான் என்ன? இதையெல்லாம் எழுதத் துணிந்தேன். கடம்ப மரத்தை வீட்டிலே வைத்து மூன்று வருஷமாக வழிபட்டேன். எல்லா வகையான சோதனையும் என் உடம்பிலேயே செய்து பார்த்தேன். என்னுடைய மூன்று வருட விடாத உழைப்பின் பலன்தான் ‘புதிய எக்ஸைல்’. (வெளியீடு: கிழக்கு பதிப்பகம், விலை: ரூ.1000/-).

மிகச் சிறந்த படைப்பாக என்னையே இதில் விதைத்திருக்கிறேன். ஆதி முதல் இன்று வரை யாரும் பயன்படுத்த முடியாத புதிய நடையில் எழுதியிருக்கிறேன். நிறையவும் Flow of Thoughtsதான். அதில்தான் ஆழமான உண்மை இருக்கும்.

இவ்வளவு பக்கம் எழுதுவேன் என்று நினைக்கவேயில்லை. எல்லாமே சத்தியம். தொன்று தொட்டு இப்போதுவரை நாவல் நீண்டுகொண்டே போகிறது. அழகான அனுபவத்திற்கு, நேர்த்திக்கு, வாசிப்பு அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

இதை வாசிக்காது போனால் உங்கள் இருப்பை உணரும் அனுபவத்தை இழக்கிறீர்கள் என்று பொருள். உங்களை மட்டுமே உணரும் ஒருவித மோனநிலை அது. அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முயல்வதை விட ஆத்மார்த்தத்தை உணர முயற்சியுங்கள். மிகமிகச் சுதாரிப்புடன், உங்கள் கவனத்தை ஒரு புள்ளியில் குவிக்கும் மாயம் இதில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

நமது மூளைக்கு சிக்கலில் சிக்கிக்கொண்டு மீள வகை தெரியாமல் தவிக்கப் பிடிக்கும். நாம் விரும்பினால் மட்டுமே கை, கால் விரல்களைக் கூட அசைக்கிறோம். அதைப் போலவே மூளையையும் நாம் விரும்பும் சமயம் மட்டுமே சிந்திக்க அனுமதிக்க வேண்டும். ‘புதிய எக்ஸைல்’ பழம்பெருமை பேசுவதில்லை. நம் வாழ்க்கையின் அப்பட்டமான பிரதி. பாசாங்கை உதறி, பல அபூர்வங்களைச் சாத்தியப்படுத்தும் படைப்பு. உத்திகளுக்காக அல்ல, உண்மைக்கான தரிசனத்தை விரும்பினால், ‘புதிய எக்ஸைல்’தான் ஒரே விடியல்!’’

சாருநிவேதிதா