தமிழ் தோன்றிய மலையின் தனித்துவ வழிபாடு
தமிழகத்தில் சுமார் 7.9 லட்சம் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். அதில் நெல்லை மாவட்ட வனப்பகுதியில் வாழும் ‘காணி’ இன மக்களின் வாழ்க்கை முறை தனித்துவமானது மட்டுமல்ல... கவித்துவமானதும் கூட. இயற்கையை எட்டி மிதித்து நாகரிக கோபுரத்தில் ஏறிய மனிதர்களுக்கிடையே இயற்கையை இறைவனாகப் பார்ப்பவர்கள் இவர்கள். காடுகளின் பாதுகாப்புக்காக கொண்டாடப்படும் ‘வனப் பொங்கல்’, இம்மக்களின் தனிப்பெரும் சிறப்பு!

வற்றாத ஜீவநதி தாமிரபரணி யையும் அது உற்பத்தியாகும் பொதிகை மலையையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் காரணிகளில் காணி இனமும் ஒன்று. இவ்வினத்தில் தற்போது காரையாரைச் சுற்றிலுமுள்ள மைலாறில் 63 குடும்பங்களும், இஞ்சிக்குழியில் 10, அகத்தியர் காணி குடியிருப்பில் 49, சேர்வலாறு தருவட்டான்பாறையில் 88 குடும்பங்களுமே வாழ்கின்றன. தமிழ், மலையாளம் கலந்த மொழி பேசும் இம்மக்களின் உரையாடலில் வழிகிறது இரக்கமும், வெகுளித்தனமும்!
இவர்கள் தங்களுக்கென கொண்டாடி, கூத்தாடும் ஒரே திருவிழா பொங்கல்தான். ஆனால் இது தை மாதம் முதல் நாள் அல்ல... கார்த்திகை மாதத்தின் இறுதிதான் இவர்களின் பொங்கல் நாள். இதற்கு ‘கார்த்திகை கொடுதி’ என்றும் பெயருண்டு.‘‘காடுதான் சாமி எங்களுக்கு எல்லாமே’’ - பரந்திருக்கும் மலைப்பகுதிகளைக் காட்டிப் பேசுகிறார் தட்சிணாமூர்த்தி. காணி மக்களில் ஊர்த் தலைவரை மூட்டுக்காணி என்பார்கள். மைலாறு காணி குடியிருப்பின் மூட்டுக்காணி இவர்தான்.

‘‘கரன்ட்டுக்காகத்தான் துரைமார் காலத்துல இங்க அணையைக் கட்டுனாக. ஆனா, இத்தன வருஷமாயும் எங்களுக்கு ராவெல்லாம் வெளிச்சமில்லா வாழ்க்கதான். ஆனா, நாங்க இத சூரிய சாமி உத்தரவா நினச்சி வாழ்ந்துட்டோம். கொஞ்ச காலமா எங்க மக்களும் மண்ணூர் மக்கள மாதிரி (சமவெளி மக்கள்) தீவாளி, ஓணமெல்லாம் கொண்டாடுறாங்க. எத்தன பண்டிகை வந்தாலும் ‘கார்த்திய கொடுதி’தேன் எங்க பொங்க விழா. அத நெனச்சாலே மனசெல்லாம் சொகந்தான்யா’’ எனப் பூரிக்கிறார் அவர்.
இங்குள்ள ஒவ்வொரு காணி குடியிருப்பு மக்களும் தாங்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு பெரிய மரத்தை தாங்கள் வணங்கும் 101 வன தேவதைகள் குடியிருக்கும் கொடி மரமாக (கொடுதி) கருதுகின்றனர்.
அம்மரத்தின் அடியில் தங்களின் குலதெய்வமான கருமாண்டி அம்மன் மற்றும் வனப்பேச்சி, கருமிமித்தி, கல்லணை இயக்கி, நிலமியக்கி, அகத்தியர், சொரிமுத்தையன் உள்ளிட்ட 101 தெய்வங்களையும் உருவகப்படுத்தி நேமிதம் செய்கின்றனர். இவற்றுக்கு மூலக் கடவுளாகக் கருதப்படும் களக்காடு செங்கல்தேரி வனப்பகுதி கருமாண்டி கோயிலிலிருந்து பிடிமண்/உருவக்கல் எடுத்து வருகின்றனர்.
கார்த்திகை கொடுதி தேதி முடிவானதும் சுற்றியுள்ள காணி குடியிருப்புகளுக்கும், நாகர்கோவில் வனப்பகுதியில் வசிக்கும் உறவுகளுக்கும் சேதி அனுப்புகின்றனர். இரு நாட்கள் கொண்டாடப்படும் விழாவில் இரண்டாம் நாள்தான் பொங்கல். வேண்டுதலுக்கு ஏற்ப ஒன்று முதல் 9 பானை வரை அடுப்பு மூட்டி பொங்கலிடுகின்றனர். ஒரு பானை மட்டும் வைத்தால் அதை இனிப்பில்லாப் பொங்கலாகவும், 9 பானைகள் வைத்தால் அதில் ஒன்றை இனிப்புப் பொங்கலாகவும் இடுகின்றனர்.
காட்டில் விளைந்த கிருஷ்ண துளசி, விபூதிப்பச்சை, ரோஜா, செம்பருத்தி, நந்தொட்டி, வாடாமல்லி, பச்சிலைகளைக் கோர்த்து மாலை தயாரித்து கடவுளுக்கு சார்த்துகின்றனர். இயற்கையில் கசியும் பரிசுத்தமான குங்கிலிய பிசினின் மணமே அப்பகுதிக்கு ஒருவித தெய்வீகத்தைக் கொண்டுவருகிறது. பின்னர் தங்களை வாழ வைக்கும் சூரியனையும், மழையையும், வனதேவதைகளையும், விலங்குகளையும், மூதாதையர்களையும், அகத்தியர், சொரிமுத்தையனையும் வணங்குகிறார்கள். வனத்தையும் அதை நம்பி வாழும் தங்களையும் காத்தருள வேண்டி பொங்கலை நேமிதம் செய்து வழிபடுகின்றனர்.
‘‘நாங்க விலங்குகளை வேட்டையாட மாட்டோம்ங்க. எல்லா விலங்குகளையுமே எங்க சாமியாத்தான் பாக்கோம். அதனாலதான் இருட்டுலேயே வாழ்ந்தாலும் எங்க மக்க யாரும் விலங்குக்கு இரையாகுறதில்ல’’ என்கிறார், பொதிகைமலை ஆதிவாசி காணிக்கார சமுதாய முன்னேற்றச் சங்க பொதுச்செய லாளரும், மாநில வன உயிரின வாரிய உறுப்பினருமான கணேச மூர்த்தி.‘‘பொதிகையில எங்களச் சுத்தியிருக்கற மலை ஒவ்வொன்றையும் ஒரு விலங்குக்கு காணிக்கையாக்கிருவோம்.
அந்த எடத்துல தேனெடுக்க, கிழங்கெடுக்க போவும்போது அந்த விலங்கையும், மலைக்குரிய தெய்வத்தையும் வணங்கிட்டுத்தான் போவோம்ங்க. எங்க மலையில விளைய வச்ச மிளகு, கிழங்கு, பலா, கொல்லாங்கொட்டையை வாங்கி விக்க ஒரு சொசைட்டி வச்சிருக்கோம். இங்கருந்து சிவந்திபுரம் சொசைட்டிக்கு அனுப்பிருவோம். அவுக அத மதுர, திருநெல்வேலி மாதிரி ஊருக்கு அனுப்பி வித்து காசு தருவாங்க’’ என்கிறார் அவர்.
‘‘மத்தவங்க மாதிரி நாங்க சொத்து பத்துக்கு ஆசப்பட்ட ஆளுங்க கிடையாதுங்க. சாமியா பாத்து எத்தனயோ தலமொறயா எங்கள இங்க வாழ வச்சிருக்கு. அந்த சாமிக்கு உண்மையா நடந்து இந்த வனத்த காக்கோமுங்க!’’ என்கிறார் வனத்துறை கார்டாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சங்கரவேல்.
இவரின் குடும்பமே தலைமுறை தலைமுறையாக இந்தக் காட்டில் கார்டாக வேலை பார்த்திருக்கிறது. பொதிகை மலையின் சந்து பொந்துகள் எல்லாம் அத்துப்படி யான காணிகளே வனத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டியாகவும், வேட்டையாட வருபவர்கள் குறித்து அறிந்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிப்பவர்களாகவும், விலங்குகள் கணக்கெடுப்பு நடைபெறும்போது அவற்றின் வாழ்விடம் குறித்து கூறுபவர்களாகவும் உள்ளனர்.
‘‘இப்போ எங்க பசங்க கொஞ்சம் படிக்கிறாங்க. வெளி உலகத்தைத் தெரிஞ்சிக்கிறாங்க. அடிப்படையில நாங்க ரொம்ப வெகுளிங்க. யார் கேட்டாலும் எங்ககிட்ட இருக்கறத கொடுத்திருவோம். ஆனா, இந்த வனத்தோட இயற்கையை மட்டும் யாருக்கும் காவு கொடுக்க விட மாட்டோம்ங்க’’ என்கிறார் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆனந்தன் பிச்சாண்டி. இவர்கள் இருக்கும் வரை நம் சந்ததி பொங்கல் கொண்டாடும்!
தான் தின்னி ஓடை!ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஓர் வெள்ளைக்கார அதிகாரி, ராயப்பன் காணி என்பவரை துணைக்கு அழைத்துக் கொண்டு பொதிகை மலைக்கு வந்தாராம். நல்ல பசியெடுத்த நேரம், வெள்ளைக்கார துரை ஒரு ஓடை அருகே அமர்ந்து, தான் எடுத்துச் சென்ற ‘பிரட்’ துண்டுகளைச் சாப்பிட்டிருக்கிறார்.
அதைத் தனக்கும் தருவார் என ராயப்பன் காணி காத்திருக்க, அவர் தராமல் சாப்பிட்டு முடித்துவிட்டாராம். அதன் பிறகு அதிகாரி ‘இந்த ஓடைக்குப் பெயர் என்ன?’ என்று கேட்க, விரக்தியில் இருந்த காணி, ‘‘இது தான்தின்னி ஓடை’’ என்று சொல்லியிருக்கிறார். பொதிகை மலை குறித்த வரலாற்றுப் பதிவில் இன்னமும் அந்த ஓடையின் பெயர் அப்படியே உள்ளது!
‘‘கரன்ட்டுக்காகத்தான் துரைமார் காலத்துல இங்க அணையைக் கட்டுனாக. ஆனா, இத்தன வருஷ மாயும் எங்களுக்கு ராவெல்லாம் வெளிச்சமில்லா வாழ்க்கதான்!’’
- ப.ராஜசேகரன், சு.கோமதி விநாயகம்
படங்கள்: மா.கண்ணன்