ஆபீஸில் கல்யாணி மனமுடைந்து அமர்ந்திருந்தாள். நேற்று அவளை 15வது முறையாக பெண் பார்க்க வந்திருந்தார்கள். இந்த வரனும் தட்டிப் போன சோகம் அவளுக்கு!
விஷயம் அறிந்து, மேனேஜர் அவளை அழைத்தார்.‘‘கல்யாணி, எனக்கு கொஞ்சம் ஜோசியம், வாஸ்துவெல்லாம் தெரியும்மா! நீ இப்ப உக்கார்ந்திருக்குற சீட்டு சரியில்லை. நம்ம பர்ச்சேஸ் டிபார்ட்மென்ட்டுக்கு உன்னை மாத்துறேன். அதுக்கப்புறம் பார்... நீ சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடுவே!’’ என்றார் அவர்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த கல்யாணிக்கு இதுவும் ஆறுதலாகத்தான் இருந்தது. ஆனால், பர்ச்சேஸ் டிபார்ட்மென்டுக்கு மாறி மூன்றே மாதத்தில் கல்யாணம் நிச்சயமாகும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை. கல்யாண ரிசப்ஷனில் கல்யாணியின் குடும்பமே மேனேஜருக்கு நன்றி சொன்னது.
‘‘அடடே, இது ஜோசியமெல்லாம் இல்லைங்க. கல்யாணி நல்ல பொண்ணு. ஆனா, மூணு மாசம் முன்னாடி கொஞ்சம் ஓவர் வெயிட்டா இருந்தாங்க. அதனாலதான் அவங்களை டிபார்ட்மென்ட் மாத்தினேன். அது லிஃப்ட் இல்லாத பழைய பில்டிங். மூணாவது மாடியில வேலை. அடிக்கடி வெளியேயும் போக வேண்டியிருக்கும். இந்தக் கட்டாய உடற்பயிற்சியால உடல் இளைச்சு கண்ணுக்கு லட்சணமா மாறிட்டாங்க. கல்யாணமும் முடிவாகிடுச்சு... அவ்வளவுதான்!’’ என்றார் மேனேஜர் பணிவாக!
எஸ்.ராமன்