சனிப் பெயர்ச்சி பலன்கள்



இனி எல்லாம் சுகமே!

நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1ம் தேதி செவ்வாய்க் கிழமை (16.12.2014) கிருஷ்ண பட்சத்து தட்சணாயன புண்ய காலம் அஸ்தம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சௌபாக்கியம் நாமயோகம், பத்தரை நாம கரணம், ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில் மதியம் 2 மணி 16 நிமிடத்திற்கு சனிப் பெயர்ச்சி நிகழ்கிறது.

சனி பகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து மூன்று வருடங்கள் தன் ஆதிக்கத்தைச் செலுத்துவார். வழக்கமாக இரண்டரை வருடம்தான் சனிப் பெயர்ச்சிக்குரிய காலமாகும்.

பூமிகாரகனும், சகோதரகாரகனுமாகிய செவ்வாய் வீட்டில் சனி பகவான் நுழைவதால் வியாபாரம் சூடு பிடிக்கும். ஆண் ஆதிக்க கிரகமான செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால் ஆண் குழந்தை பிறப்பு குறையும். பூமிகாரகனாகவும் செவ்வாய் வருவதால் உலகெங்கும் நிலத்தின் விலை அதிகரிக்கும். இயற்கை சீற்றங்கள் நேரும். ஆடம்பரத்திற்கும், வசதி வாய்ப்புகளுக்கும் மக்கள் அடிமையாவார்கள். ரசாயன உற்பத்தி அதிகரிக்கும். நீரிழிவு நோய், கேன்சர், எலும்பு, மூட்டுத் தேய்வு போன்றவற்றிற்கு புதிய மருந்துகள் கண்டறியப்படும்.

அறுவை சிகிச்சைகளை எளிதாக செய்வதற்கு நவீன கருவிகள் கண்டறியப்படும். பெட்ரோல், டீசல் விலை படிப்படியாகக் குறையும். தங்கம், வெள்ளி விலை கட்டுப்பாட்டிற்கு வரும். ஷேர் மார்க்கெட் சூடு பிடிக்கும்.

சகோதரகாரகனாகவும் செவ்வாய் வருவதால் சகோதர உறவுகளில் கசப்புணர்வு அதிகமாகும். சொத்துப் பிரச்னைகளால் பாரம்பரிய குடும்பங்கள் பிரியும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும். புதிய நோய்களால் உயிரிழப்புகள் அதிகரிக்கும். உணவுத் தட்டுப்பாடு அதிகரித்தாலும் மற்றொரு பக்கம் விளைச்சலும் அதிகமாகும். பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்.

காவல் துறைக்கும், ராணுவத் துறையினருக்கும் ஓய்வில்லாமல் போகும். புதிய தளவாடங்கள், ஏவுகணைகளை இந்தியா வாங்கும். சீனாவுடன் சுமுகமான நட்புறவு உண்டாகும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெண் ஆதிக்க கிரகமான சுக்கிரனின் வீடான துலாம் ராசியில் சனி பகவான் அமர்ந்திருந்ததால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்தன. இனி பெண்கள் ஆதிக்கம் மீண்டும் ஓங்கும்.

அரசியல், ஆன்மிகம், அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறுவார்கள். என்றாலும் சனிபகவான் 7ம் பார்வையால் பெண்ணாதிக்க வீடான ரிஷபத்தைப் பார்ப்பதால் பெண்கள் மறைமுகமாக ஒடுக்கப்படுவார்கள். பெரிய பொறுப்புகளில் இருக்கும் பெண்களுக்கு பிரச்னைகள் வரும்.

சாஃப்ட்வேர், சினிமா துறைகளில் வேலைவாய்ப்பு குறையும். நதிகளை இணைப்பதற்கான முயற்சிகள் உடனடியாக அமலுக்கு வரும். இளைஞர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வயதானவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 சனி பகவான் ரிஷபத்தைப் பார்ப்பதால் கால்நடைகளை விநோத நோய்கள் தாக்கும். சிவாலயங்கள் பாதிப்படையும். ரிஷப ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். சிம்ம ராசியையும் சனி பகவான் பார்ப்பதால் இரண்டாம் மட்ட அதிகார வர்க்கங்களின் கை ஓங்கும். சனி பகவான் தன் வீடான மகரத்தை பார்ப்பதால் புதிய தொழிற்சாலைகள் உருவாகும். 

மன உறுதி கிடைக்கும்

மேஷம்

தன்மானம், சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7ல் அமர்ந்திருந்த சனி பகவான் 16.12.2014 முதல் 17.12.2017 வரை 8ம் வீட்டில் அஷ்டமத்து சனியாக வருவதால் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வரும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சில நேரங்களில் மரியாதைக் குறைவான சம்பவங்களும் நிகழக்கூடும்.

முன்கோபம் அதிகமாகும். கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகள், நெருங்கியவர்களையும் பகையாளி ஆக்கிவிடலாம், கவனம்.வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுங்கள். பண விஷயத்தில் யாருக்கும் கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

எந்த விஷயமாக இருந்தாலும் ஆற, அமர யோசித்து செயல்படுவது நல்லது. இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்றெல்லாம் ஆழம் தெரியாமல் காலை விட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்பாராத பண வரவு இருக்கும். ஆனால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். நல்ல நோக்கத்தில் நீங்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கூட அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடும்.உடல்நலப் பிரச்னைகள் அடிக்கடி வந்து வாட்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரி பார்த்துக் கொள்வது நல்லது. அடிக்கடி அலர்ஜி, யூரினரி இன்ஃபெக்ஷன் வரக் கூடும். கண், பல் மற்றும் காது வலி வரக்கூடும். மசாலா, காரம் மற்றும் அதிக எண்ணெய் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வேற்று மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். 

சனி பகவான் ராசிக்கு 2ம் வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சி வசப்படுவீர்கள். சனி பகவான் 5ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். ஆனாலும் மனம் மகிழும் விதமாக மகனுக்கு வேலை கிடைக்கும்; மகளுக்கும் பொருத்தமான வரன் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சனி பகவான் 8ம் வீட்டைப் பார்ப்பதால் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

மாணவ-மாணவிகளே! வழக்கம்போல அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அரசியல்வாதி களே! உட்கட்சிப் பூசல் வெடிக்கும். சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். 

வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். திடீரென்று அறிமுகமாகிறவரை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்கள், வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் கடமையைச் செய்ய நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். சக ஊழியர்களில் சிலர் இரட்டை வேடம் போடுவதையும் புரிந்துகொள்வீர்கள்.

சிலர் உங்கள் மீது பொய் வழக்கு போடுவார்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள்.    இந்தச் சனி மாற்றம் இடையூறு களைத் தந்தாலும், அதை எதிர்கொள்ளும் மன உறுதியையும் தரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிய வைக்கும்.

இலக்கை எட்டலாம் : ரிஷபம்

வளைந்து கொடுக்கத் தெரியாததால் சில வாய்ப்புகளை நழுவ விட்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான், 16.12.2014 முதல் 17.12.2017 வரை உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் நுழைந்து பலன் தரப் போகிறார். 7வது வீட்டில் சனி அமர்ந்து கண்டகச் சனியாக வருகிறாரே என்று பதற்றப்படாதீர்கள். சனி பகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்களுக்கு ஓரளவு நல்லதையே செய்வார்.

இனி உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக செயல்படப் பாருங்கள். என்றாலும் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் சனி அமர்வதால் குடும்பத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஈகோ பிரச்னை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மூட்டு வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். வழக்குகளில் அவசரப்பட வேண்டாம். சில நாட்களில் தூக்கம் குறையும். அரசு காரியங்கள் இழுபறியாகும். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப் பாருங்கள். உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டி வரும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

வெளிவட்டாரப் பழக்கம் சிறப்பாக இருக்கும். விலையுயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். சிலர் கடன் பட்டாவது வீடோ, மனையோ வாங்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். புண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் காய்ச்சல், தலைசுற்றல், செரிமானக் கோளாறு, வயிற்று வலி வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.

சனி பகவான் 4ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், தாயாருடன் கருத்து வேறுபாடுகள், அவருக்கு கை, கணுக்கால் வலி, உங்களைப் பற்றிய மறைமுக விமர்சனங்கள் என மனம் நெருடச் செய்யும் நிகழ்வுகள் தொடரும். சனி பகவான் 9ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்பற்றாக்குறை, தந்தையாருடன் மோதல்கள், பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் என வந்து போகும்.

மாணவர்களே! உயர்கல்வி யில் அலட்சியப் போக்கு வேண்டாம். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். மந்தம், மறதி வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! திருமணம் நினைத்தது போல சிறப்பாக முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதி களே! கட்சிக்குள் நடக்கும் உள்நாட்டுப் போரில் பங்கேற்காதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போங்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும்.

சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அலுவலக ரகசியங்களையோ, மேலதிகாரியைப் பற்றியோ வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கலைத்துறையினரே! வீண் வதந்திகள் வரக்கூடும். படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். இந்த சனி மாற்றம் தடைகளையும், அலைச்சலையும் தந்தாலும், சமயோசித புத்தியால் இலக்கை எட்டிப் பிடிக்க
வைக்கும்.

தொட்டது துலங்கும்: மிதுனம்

சுற்றியிருப்பவர்கள் சுகப்பட தன் தேவைகளை சுருக்கிக் கொள்பவர்களே! இதுவரை உங்களின் 5ம் வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை 6ம் வீட்டில் அமர்வதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். அனுபவபூர்வமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இனி கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும், மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டீர்களே!

பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டை விட்டு சனி விலகுவதால், அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுடைய பொறுப்பற்ற போக்கு மாறும். அவருக்கும் எதிர்பார்த்தபடி நல்ல வாழ்க்கைத்துணை அமையும். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேரவேண்டிய பங்கு கைக்கு வரும்.

பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கண்டும், காணாமல் சென்று கொண்டிருந்த நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். ஷேர் மூலமாக பணம் வரும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே, நல்ல பதில் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். என்றாலும் அவ்வப்போது பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். இனந்தெரியாத கவலைகளும் வந்து போகும்.

சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். சனி பகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மனோபலம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். என்றாலும் இளைய சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் தலை தூக்கும். சனி பகவான் 8ம் வீட்டைப் பார்ப்பதால் சிறுசிறு விபத்துகள், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

முக்கிய அலுவல்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். சனி பகவான் 12ம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநில புண்ணியதலங்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களின் அழகு, ஆரோக்கியம் கூடும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். காதல் கைகூடும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும்.

மாணவ-மாணவிகளே! மதிப்பெண் கூடும். விளையாட்டு, கலைப் போட்டிகளிலும் முன்னேறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அரசியல்வாதிகளே! பரபரப்புடன் செயல்படுவீர்கள். தலைமை உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். பிரபலமான இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரிகள் சங்கத்தில் முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

சக ஊழியர்களும் இனி மதிக்கத் தொடங்குவார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். அயல்நாட்டு நிறுவனத்திலிருந்தும் அழைப்பு வரும். கலைத்துறையினர் பிரபலமாவீர்கள். உங்களது படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சம்பளம் உயரும். இந்த சனிப் பெயர்ச்சி தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைப்பதுடன், வசதி, வாய்ப்பு களையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

நிம்மதி நிச்சயம் : கடகம்

மரத்தடியில் பிறந்தாலும் மாநிலத்தை ஆள நினைப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை 5ம் வீட்டில் அமர்வதால் ஓரளவு நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். சிலர் சொந்த வீடு கட்டி குடி புகுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் குறையும். தாயாரின் உடல்நிலை சீராகும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.

நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சனி பகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். என்றாலும் பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள்.

மகளுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. மகனுடைய உயர்கல்வி, உத்யோகத்திற்காக கொஞ்சம் செலவு செய்து, மற்றவர்களின் சிபாரிசில் சேர்க்க வேண்டி வரும்.

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். எந்த விஷயத்திலும் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நாட்களில் தூக்கம் குறையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

உறவினர்களில் ஒருசிலர் உங்களை விட்டு ஒதுங்குவார்கள். அவ்வப்போது கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சனி பகவான் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். என்றாலும் நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. காலில் அடிபடக்கூடும். பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

சனி பகவான் 7ம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம் சற்று தாமதமாகும். கணவன், மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். நினைவாற்றல் பெருகும். கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். மாதவிடாய்க் கோளாறு, தொண்டை வலி, சளித்தொந்தரவு நீங்கும். அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள். மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். 

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை இழுப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

பதவி உயர்விற்காக தேர்வெழுதிக் காத்திருந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினர் அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயமடைவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி உங்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்துவதுடன் உங்களுடைய சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றித் தரக்கூடியதாக அமையும்.

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்