கவிதைக்காரர்கள் வீதி



தொலைந்து போனவள்

என் வீட்டு வாசலில்
உதிர்ந்து கிடக்கும்
ஒற்றை மலர்
நீ சூடி உதிர்த்ததாக
இருக்கலாம்

நள்ளிரவின் நிசப்தத்தில்
அலைபேசியில் அழைத்துவிட்டு
அவசரமாய் அணைத்து வைத்தது
நீயாகத்தான் இருக்க வேண்டும்!

புறப்பட்டுவிட்ட
பேருந்தில்
முன்னிருக்கையில் அமர்ந்து
பதற்றமாய்
கையசைத்துப் போனவள்
நீயாக இருக்கக் கூடும்

ஹேமா வீட்டுத் திருமணத்தில்
தோழிகளுடன் வந்து
மலர்க்கொத்து கொடுத்துவிட்டு
மின்னலென மறைந்தவள்
நீதான் என நினைக்கிறேன்.

அன்றொரு நாள்
சரிகை சலசலக்கும்
புதுப்புடவை உடுத்திக்கொண்டு
புருஷனோடு போனவள்
நீயாக இருக்க வாய்ப்பில்லை.

ஆதலையூர்
சூரியகுமார்