தன் உடலுக்கு தானே கொள்ளிவைத்த மூதாட்டி





‘‘மூணு பிள்ளைகளப் பெத்தும் இப்பிடி அனாதியா கிடந்து அவதிப்படுறேன்... இருக்கனா, போயிட்டேனான்னு கூட எதுவும் வந்து பாக்கமாட்டேங்குது. என் பொணத்துக்கும் நானேதான் கொள்ளி வச்சுக்கணும் போலருக்கு... - கண்கள் கலங்க சகுந்தலா சொன்ன இந்த வார்த்தைகளுக்கு அக்கம்பக்கத்தினர் ஆறுதல் மட்டுமே சொல்லமுடிந்தது. தனிமைத் துயரால் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்து வந்த அந்தத் தாய், சுடுகாட்டுக்குச் சென்று, உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே கொள்ளி வைத்துக்கொண்டார்.

இதயமுள்ள மனிதர்களின் உயிரைப் பிடித்து உலுக்குகிறது சகுந்தலாவின் மரணம். பெற்று, வளர்த்து, ஆளாக்கி சமூகத்தில் உலவவிடும் பெற்றோரை, முதுமையில் தள்ளிவைத்து தனிமையில் தவிக்கவிடும் சுயநலமிகளின் உள்ளத்தில் கொள்ளி வைத்துவிட்டு முடிந்துபோன இந்த 70 வயது அபலைத்தாய் சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர். இன்னும் அந்தப்பகுதி சகுந்தலாவை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

‘‘ரெண்டரை வருஷம் முன்னாடிதாங்க அந்த அம்மா இங்கே குடிவந்தாங்க. தங்கமான மனுஷி. யார்கிட்டயும் எந்த உதவியும் எதிர்பார்க்க மாட்டாங்க. அவங்க வேலையை அவங்களே செய்வாங்க. அவங்க முடியாம கிடந்தா, நாங்களே போய் பாத்து சாப்பாடு கொடுப்போம். சங்கடத்தோட வாங்கிக்குவாங்க. நல்லா வாழ்ந்த மனுஷிங்க. மூணு புள்ளைக... பையன் சைக்கிள் கடை வச்சிருந்தாரு. ஒரு பொண்ணு கல்யாணமாகி நாலைஞ்சு வருஷத்தில இறந்துபோச்சு. இன்னொரு பொண்ணை ஐயப்பன்தாங்கல்ல கட்டிக் கொடுத்திருக்காங்க.

பக்கத்துலதான் இவங்க பூர்வீக வீடு இருக்கு. என்ன பிரச்னையோ, அவங்க பையன் இந்த வீட்டை லீசுக்கு எடுத்து அவங்களயும், அவங்க வீட்டுக்காரரையும் இங்கே குடிவச்சாரு. புள்ளைக மேலயும், பேரன், பேத்திகள் மேலயும் ரெண்டு பேருமே ரொம்ப பாசமா இருப்பாங்க.

இந்த அம்மாவோட வீட்டுக்காரர் டெய்லர். நல்ல மனுஷன். அவரு இருக்குறவரைக்கும் இந்த அம்மாவை தங்கமா வச்சுப் பாத்துக்கிட்டாரு. போன வருஷம் அவரும் போய்ச் சேந்துட்டாரு. அவரு போனபிறகு இந்த அம்மாவுக்கு ஒண்ணும் புரியலே. எப்பவும் அழுதுக்கிட்டே உக்காந்திருப்பாங்க. அப்பப்ப மக வீட்டுக்குப் போயிட்டு வருவாங்க. மத்தபடி இங்கே உள்ள புள்ளைக விளையாடுறதை பாத்துக்கிட்டு இந்த திண்ணையிலயே உக்காந்திருப்பாங்க’’ என்று கண்கலங்குகிறார் சகுந்தலாவின் பக்கத்து வீட்டுக்காரரான வேலு.



‘‘இவங்க வீட்டுக்காரர் இறந்தபிறகு பையனுக்கும், பொண்ணுக்கும் ஏதோ சங்கடம் வந்திடுச்சு போலருக்கு. அவங்க ரெண்டு பேருக்குள்ள பேச்சுவார்த்தை இல்லை. அதுவே இந்த அம்மாவை ரொம்ப பாதிச்சிருச்சு. குறிப்பா, மகன் வீட்டுக்குப் போகவே மாட்டாங்க. அவருதான் வந்து இவங்களப் பாத்துட்டுப் போவாரு. அவரை நினைச்சு எப்பவும் கவலைப்படுவாங்க. கொஞ்ச நாளாவே, ‘எனக்குன்னு யாரும் இல்லம்மா... இனிமே இருக்கிறது நல்லதில்லை. யாருக்கும் சங்கடமில்லாம போய்ச் சேந்திரணும்’னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நாங்கள்லாம் ஆறுதல் சொல்லுவோம். சாகுறன்னிக்கு மகளுக்குப் போன் பண்ணி, ‘மனசே சரியில்லம்மா... ஒரு எட்டு வந்து பாத்துட்டுப் போ’ன்னு சொல்லியிருக்காங்க. அந்தப் பொண்ணு வர்றதுக்கு முன்னாடியே அவங்களா சுடுகாட்டுக்குப் போய் படுத்துக்கிட்டு, மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திக்கிட்டாங்க. அவங்க வழக்கமா கட்டுற ஒரு சேலை பக்கத்துல கிடந்துச்சு. அடையாளம் தெரிஞ்சுக்கிறதுக்காக போட்டுருப்பாங்களோ என்னவோ. அதை வச்சுத்தான் கண்டுபிடிச்சோம்’’ என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த புவனா.

பிள்ளைகளின் புறக்கணிப்பும் தனிமையுமே சகுந்தலாவை சாவை நோக்கி உந்தித் தள்ளியிருக்கிறது. அந்த நிலையிலும், தன் பிள்ளைகளுக்கு எந்த சிரமமும் வைக்கக்கூடாது என்ற அவரது எண்ணத்திலும் உன்னதமான தாய்மை ததும்பி நிற்கிறது.

‘‘சகுந்தலா மட்டுமல்ல... அவரைப் போலவே இந்தியாவில் வாழும் 48 சதவீத முதியோர்கள் பிள்ளைகளின் புறக்கணிப்பாலும் தனிமையாலும் தவிக்கிறார்கள்’’ என்று அதிர் வூட்டுகிறார் முதியோர் சிறப்பு மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.

‘‘பெண்களுக்கு மருமகள்களால் மட்டுமே கொடுமை நிகழ்வதாக ஒரு கருத்து உண்டு. ஆனால் யதார்த்தம் வேறு. 56 சதவீத தாய்கள், மகன்களால்தான் தனிமையில் தள்ளப்படுகிறார்கள். மருமகளால் பாதிக்கப்படும் பெண்கள் வெறும் 23 சதவீதம் தான். இன்றைய தலைமுறை தம் பெற்றோரை எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அலட்சியம் செய்கிறது. தம் பிள்ளைகளிடம் பாசத்தையும், கனிவையும், கவனிப்பையும், பாதுகாப்பையும் எதிர்பார்க்கும் பெற்றோர், அது கிடைக்காதபோது விரக்தி அடைந்து இதுபோன்ற முடிவை எடுக்கிறார்கள்.

இப்போதெல்லாம் பெற்றோருக்கு சற்று வயதாகிவிட்டாலே பிள்ளைகள் சொத்தைக் கேட்டு நிர்ப்பந்திக்கத் தொடங்குகிறார்கள். தாய்மை, உறவு, நன்றிக்கடன்... எதையும் இன்றுள்ள பெரும்பாலான பிள்ளைகள் நினைப்பதில்லை. சொத்து கிடைத்ததும் பெற்றோர் வீண்சுமை ஆகிவிடுகிறார்கள். சில பிள்ளைகள், கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி முன்பின் தெரியாத இடத்துக்கு பெற்றோரை அழைத்துச் சென்று விட்டுவிடுகிற கொடுமையையும் பார்த்திருக்கிறேன்.

முன்பு, முதியோர் இல்லங்களின் மீது எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. ஒரு முதியோர் இல்லம் திறந்தால் நூறு தாய்மார்கள் அனாதையாகி விடுவார்கள் என்று சொல்வேன். ஆனால் இன்று, அதிக எண்ணிக்கையில் முதியோர் இல்லங்களை அரசு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குறைந்தபட்சம் இருக்க இடமாவது அவர்களுக்கு கிடைக்குமே..! முதியோரின் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் வழி செய்யவில்லையென்றால் இன்னும் நிறைய சகுந்தலாக்கள் உருவாவதைத் தடுக்கமுடியாது’’ என்கிறார் நடராஜன்.

பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் முதியோர்கள் சட்டப் பாதுகாப்பு பெறுவது எப்படி..? மூத்த குடிமக்கள் மன்றத்தின் தலைவர் சிங்கராஜாவிடம் கேட்டோம்.
‘‘பெற்றோர் மற்றும் முதியோர் பாதுகாப்புச் சட்டம் 2009ல் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி பெற்றோருக்கு உணவு, உடை, மருத்துவம், சிகிச்சை, வீடு போன்ற அத்தியாவசியத் தேவைகளை வாரிசுகள் கட்டாயம் வழங்கவேண்டும். வயதான பெண்மணியை முதியோர் இல்லத்தில் விட்டாலே அது சட்டப்படி குற்றம். பிள்ளைகளால் பாதுகாக்கமுடியாத நிலையிருந்தால், மாதாமாதம் அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்கவேண்டும். இதை தர மறுக்கிறவர்களுக்கு அபராதமும், சிறைத்தண்டனையும் வழங்க வழியிருக்கிறது. ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. மேலும், எந்தப் பெற்றோரும் தம் பிள்ளைக்கு எதிராக பிரச்சனை எழுப்புவதில்லை. வெளிநாடுகளில் முதியோர்களைக் காப்பாற்றும் நோக்கில் ‘சோஷியல் செக்யூரிட்டி’ திட்டங்கள் உண்டு. இங்கு அப்படி எந்த திட்டமும் இல்லை’’ என்று வருந்துகிறார் சிங்கராஜா.
மனிதாபிமானம், மனிதநேயம் என்ற வார்த்தையெல்லாம் வெறும் ஏட்டில்தான் இருக்கிறது. சகுந்தலா தன்மீது வைத்துக்கொண்ட நெருப்பு, பெற்றோரைத் தவிக்கவிட்டு பணம், பணம் என்று அலையும் சுயநலமிகளை காலம் முழுவதும் சுட்டுக்கொண்டே இருக்கும்.
- டி.ரஞ்சித்
படங்கள்:ஆர்.சி.எஸ், தமிழ்வாணன்