கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது?





உங்களைச் சுற்றி ஒரு உலகத்தையே உருவாக்கும் சாகசக்காரர் நீங்கள். ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்று எப்போதும் ஒரு அக்னி ஜுவாலை உள்ளுக்குள் எரிந்தபடி இருக்கும். அங்கீகாரத்திற்காக அல்லாடுவீர்கள். மிதுனத்திற்கும், கன்னிக்கும் புதனே அதிபதியாகும். ஆனாலும், புதனின் முழு வீச்சுமே கன்னி லக்னக்காரர்களிடம்தான் வெளிப்படுகிறது. பெண்மையின் நளினத்தை தன்னிடத்தே கொண்டது புதன். எனவே, இரக்க குணம் என்பது உங்களோடு ஒட்டிப் பிறந்தது. ஏகலைவன் போல பார்த்துப் பார்த்தே பாதி விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். எவ்வளவு காரியங்களை செய்தாலும் தன்னளவில் திருப்தி அடைய மாட்டீர்கள். யாரையும் சாராமல் வாழப் பார்ப்பீர்கள். நேர்வழியில் சம்பாதித்ததே நிலைக்கும் என அசையாத நம்பிக்கை கொண்டிருப்பீர்கள்.

புதனை இன்டலக்சுவல் பிளானட் என்றழைப்பார்கள். கூர்மையாக யோசிப்பவர்களின் நட்பை என்ன விலை கொடுத்தாவது தக்க வைத்துக் கொள்வீர்கள். வெற்று நம்பிக்கையை வெறுப்பீர்கள். தேங்கிய குளமாக புத்தி இல்லாமல் பார்த்துக் கொள்வீர்கள். நிறைய புதுப்புது விஷயங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். இசை, எழுத்து, ஆடல், பாடல் என்று ஏதேனும் ஒரு விஷயத்தில் உங்களை பூரணமாக ஈடுபடுத்திக் கொள்வீர்கள். தவறு எனில் முகத்திற்கு நேராக சொல்லி விடுவீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்வது பிடிக்காது. ஒவ்வொரு காரியத்தையும் அழகாக, ரசிக்கும் விதமாக செய்வதுதான் பிடிக்கும். நீங்கள் எதைச் செய்தாலும் அதில் தரமும் உயர்வும் இருக்கும். உங்கள் கருத்தை புரிய வைப்பதற்காக கோபப்படுவீர்கள். ஆனால், அதை எதிராளி திமிராகக் கருதுவார். உங்களைச் சுற்றி வேறொரு குழியை ரகசியமாகத் தோண்டுவார்.  

அறியும் ஆவலை புதன்தான் கொடுப்பார். எந்த விஷயமாக இருந்தாலும் உங்களின் கோணத்தில்தான் அதைப் பார்ப்பீர்கள். தேவைப்பட்டால் உங்களது பலவீனங்களைக் கூட மற்றவர்களிடம் சொல்லத் தயங்க மாட்டீர்கள். சமூகத்தின் சகல அவலங்களுக்கும் தனி மனித சுய ஒழுக்கமின்மைதான் காரணம் என்பது உங்களின் அசைக்க முடியாத கருத்தாகும். சிறிய உதவிக்குக் கூட நன்றியோடு இருப்பீர்கள். உங்களோடு பேசுபவர்களுக்கு புதியதாக இரண்டு, மூன்று விஷயங்களைச் சொல்லி அசத்துவீர்கள்.

உங்களின் லக்னத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார். சென்சிடிவாக இருப்பதால் சட்டென்று முகம் காட்டுவீர்கள். சின்னச் சின்ன அவமானங்களை பாசிட்டிவ்வாக மாற்றிக் கொள்வீர்கள். ஏதோ சாதித்த உணர்வில் திரிந்து கொண்டிருப்பது தான் உங்களின் மிகப் பெரிய பலவீனம். பத்து படி மேலே ஏறினால் கொஞ்சம் தலை கிறுகிறுக்கும். அப்போதெல்லாம், ஜெயித்தவர்களின் வாழ்க்கையைப் பார்த்து அமைதியாக வேண்டும். உங்களின் சொந்த ஜாதகத்தில் புதன் கெடாமல் வலிமையாக இருந்தால் புத்திக்கூர்மை மிக்கவராக இருப்பீர்கள். அசாத்திய ஞாபக சக்தி இருக்கும்.

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் முக்கிய கிரகங்களாக புதன், சுக்கிரன், சனி போன்றோர் வருகின்றனர். இந்த மூன்று கிரகங்களும் உங்களின் சொந்த ஜாதகத்தில் எங்கிருந்தாலும் சரிதான், உங்களுக்கு நன்மையையே செய்வார்கள். இவர்கள் மூவரையும் வாழ வைக்கும் தெய்வங்கள் என்றுகூட கூறலாம். நீங்கள் கன்னி லக்னத்தில் பிறந்து, சுக்கிரன் ஆட்சி செய்யும் கலைத்துறையில் ஈடுபாட்டோடு சேர்ந்தீர்கள் என்றால், எப்படியேனும் அத்துறையில் பிரகாசிக்க வைத்து விடுவார். எழுத்துத் துறையில் ஈடுபாட்டோடு இருந்தால் நன்கு எழுதும் திறனை அளிப்பார். இவர்களில் சுக்கிரனும், சனியும் முதலாவதாக உதவுவார்கள். அதற்குப் பிறகுதான் உங்கள் லக்னாதிபதியான புதனும் உதவ முன் வருகிறார்.   

உங்களின் ஒட்டுமொத்த சுகமான வாழ்க்கையை சுக்கிரன்தான் தீர்மானிக்கிறார். கன்னி லக்னத்தில் இரண்டு மற்றும் ஒன்பதாம் இடத்திற்குரியவராக சுக்கிரன் வருகிறார். இரண்டாம் இடம் என்பது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தைக் குறிக்கும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கெடாமலோ, அல்லது பலவீனமாகவோ இல்லாது இருந்தாலே போதும். எல்லா வளங்களையும் கைமேல் கனியாகக் கொண்டு வந்து தருவார். ஏனெனில், இவர்தான் உங்களுக்கு சகல யோக பலன்களையும் அளிக்கப் போகிறார். அதிலும் சுக்கிரனோடு, புதனும் சேர்ந்தால் மாபெரும் ராஜயோகம் உண்டு. புத்தி சாதுர்யம் பிரமிக்கத்தக்க வகையில் அமையும். மேலும், ஒன்பதாம் இடம் எனும் பாக்கியஸ்தானத்திற்கும் சுக்கிரன் அதிபதியாக வருவதால், தந்தையின் சொத்துகள் கிடைக்கும்; தந்தையால் மிகுந்த நன்மைகள் நடைபெறும். அவர் பார்த்த வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு அமையும். நில புலன்களோடு பங்களாக்கள் கட்டிக்கொண்டு வாழவைப்பார் சுக்கிரன். பெரிய மனிதர்களின் தொடர்புகளையும் வி.ஐ.பிக்களின் நட்பையும் கொடுப்பார். ஆனால் உங்களின் ஜாதகத்தில் சுக்கிரன் குருவோடு சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருந்தால், கொஞ்சம் திணறித்தான் உதவுவார்.



நடைமுறை வாழ்க்கையில் சுக்கிரனை பலப்படுத்துங்கள். காதல் திருமணம் செய்தவர்களுக்கு உதவுங்கள். முட்டை கோஸ், காலிபிளவர், சோம்பு போன்றவற்றை அவ்வப்போது ருசி பாருங்கள். மாதுளம் பழம் சாப்பிடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழைப் பெண்ணின் திருமணத்தில் உங்களால் முடிந்த அளவு உதவுங்கள். வெள்ளி ஆபரணங்களை அணியுங்கள். உங்களுக்கு எந்தத் தசை நடந்தாலும் அதில் சுக்கிர புக்தியோ, அந்தரமோ வந்தால் பலன்களை அள்ளி வீசுவார். பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களிலும், 6, 15, 24 போன்ற தேதிகளிலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
சனி பகவான் உங்களுக்கு பூர்வ புண்ணியாதிபதியாக வருகிறார். அதேசமயம் ஆறாம் இடம் என்றழைக்கப்படும் சத்ரு ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறார். பூர்வ புண்ணியாதிபதியாக வருவதால் குழந்தை பாக்கியத்தை காலதாமதப்படுத்தாது அருளுவார். குழந்தைகளை அனுபவசாலியாக வளர்க்க ஆசைப்படுவீர்கள்.  வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல என்பதைத்தான் முதலில் போதிப்பீர்கள். தெரிந்ததை சொல்லிக் கொடுத்து விடுவீர்கள்; பிறகு உலகம் உனக்கு போதிக்கும் என்று விட்டு விடுவீர்கள். ஆனால், மறந்துபோயும் கிணற்றுத் தவளைகளாக இருக்கக் கூடாது என்று நினைப்பீர்கள். இதே சனி சத்ரு ஸ்தானாதிபதியாக இருப்பதால் படிப்பு அல்லது பணியை முன்னிட்டு குழந்தைகளைப் பிரிய வேண்டியிருக்கும். ஆதாயம் வேண்டுமெனில் அலைச்சல் இருக்கத்தான் செய்யும் என்று சனி பகவான் பாடம் நடத்துவார். இப்படி நேர்மறை மற்றும் எதிர்மறை பலன்களை அவர் அளிக்கிறார். சொந்த ஜாதகத்தில் சனி நன்றாக இருப்பின் தந்தையாருடனான உங்களின் நட்பு பலமாக இருக்கும். தந்தையின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும். பணப் பெருக்கத்தை இந்த பாக்கிய ஸ்தானம்தான் தீர்மானிக்கிறது. சேமிப்புகளைக் கூட இந்த இடம் பேசுவதால் வங்கிக் கணக்கில் பணம் நிரம்பி வழியும்.  

உங்களுக்கு எந்த தசை நடந்தாலும் சரிதான், அதில் சனி புக்தியோ, அந்தரமோ வந்தால் பலன்களை அள்ளி வீசுவார். பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்கள், 8, 17, 26 தேதிகள், சனிக்கிழமை போன்றவை உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டம் தரும். உங்கள் ஜாதகத்தில் சனியை பலப்படுத்த முதியோர்களுக்கு உதவுங்கள். வாழ்ந்து கெட்ட குடும்பத்திற்கு ஆதரவாக இருங்கள். விபத்தில் காலை இழந்தவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் நிறுவனம் வைத்து நடத்திக் கொண்டிருந்தால், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுங்கள். அரு நெல்லிக்காய், தக்காளி, எள்ளுருண்டை, நல்லெண்ணெய், மாங்காய், கத்தரிக்காய், அத்திக்காய், கருணைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, கருப்பு திராட்சை என்று சாப்பிடுங்கள். 



உங்களின் லக்னாதிபதியான புதன் உங்களின் அடிப்படையான விஷயங்களை, மனதின், உள்ளுணர்வின், உயிராகிய லக்னத்தை தீர்மானிக்கிறார். கன்னி ராசிக்காரர்கள் கூட புதனின் ஆளுமையிலிருந்து விடுபடலாம் ஆனால், கன்னி லக்னக்காரர்கள் விடுபட மாட்டார்கள். உடும்புப் பிடிபோல புதனின் அடிப்படை குணங்கள் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கும். சத்ரு ஸ்தானாதிபதியான செவ்வாயோடு சேர்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ, அல்லது செவ்வாயின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ கொஞ்சம் அவஸ்தைகள் இருக்கும். நடக்குமா... நடக்காதா... வருமா... வராதா... என்கிற அலைக்கழிப்புகள் இருக்கும். எத்தனை தடவை முயற்சித்தாலும் நடக்காத விஷயங்கள் திடீரென்று நடக்கும். இந்த புதன் கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தாலோ, ஏழு அல்லது பத்தில் அமர்ந்திருந்தாலோ, திருமண வாழ்வு நிம்மதியில்லாமல் இருக்கும். ஆனாலும், இவையெல்லாவற்றையும் தாண்டி புதன் உதவ முயற்சிப்பார். இந்த லக்னாதிபதியான புதன் 4, 7ம் இடத்தில் அமர்ந்திருந்தால் சிரமப்படுவீர்கள். தாயா... தாரமா என்கிற போராட்டம் இருக்கும். 3, 8, 12 போன்ற இடங்களில் புதன் இருந்தால் நல்லது. குருவின் பார்வை அல்லது சேர்க்கை இல்லாமல் இருப்பது நல்லது. இது எதுவுமே வாய்ப்பில்லை எனில் குருவை சனி பார்த்துவிட்டால் போதுமானது. குருவால் வரும் பாதக பலன்கள் குறையும்.

உங்கள் ஜாதகத்தில் புதன் எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவரை பலப்படுத்த நடைமுறை வாழ்வில் சிலவற்றை மேற்கொள்ளுங்கள். உணவில் பச்சைப் பயறு, சுண்டைக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், வாழைத்தண்டை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை நாலு பேருக்கு சொல்லிக் கொடுங்கள். தாழ்வு மனப்பான்மையில் தவிப்போருக்கு ஆறுதல் சொல்லுங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற அளவு உதவுங்கள். தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவினர்களுக்கு உதவுங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். புதன் தசை, புதன் புக்தி, புதன் அந்தரம், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்கள், 5, 14, 23 போன்ற தேதிகளில் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
பொதுவாகவே சயனக் கோலத்தில் பாற்கடல் பெருமாளாக தரிசனம் தரும் ஆலயங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும். அதிலும் கடற்கரையோரம் அருளும் பெருமாளாக இருப்பின் இன்னும் அதிக நற்பலன்கள் கிடைக்கும். அப்படிப்பட்ட தலமே மகாபலிபுரம். புண்டரீக முனிவரின் பக்தியை மெச்சி இத்தலத்தில் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் சேவை சாதித்தார். இவ்வாறு காட்சி தந்தமையால் ஸ்தலசயனப் பெருமாள் என்கிற திருநாமம் அவருக்கு உண்டாயிற்று. இத்தலம் சென்னைக்கு அருகே அமைந்துள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)