உயிர் பொம்மை : கவிதைக்காரர்கள் வீதி





*  பள்ளிக்குச் செல்லும்
    குழந்தை
    விட்டுவிட்டுச் செல்கிறது
    மனதை பொம்மையிடம்

*  பொம்மைகளுடன்
    பகிர்ந்து கொள்ளப்படும்
    எந்த ரகசியமும்
    கசிவதேயில்லை

*  அணைத்துக்கொண்டு தூங்கும்
    குழந்தையின் ஸ்பரிசத்தில்
    உயிர்பெறக்கூடும்
    பொம்மை

*  குழந்தையை
    நடக்க வைத்து
    ஜெயித்தாள் அம்மா
    பொம்மையை
    நடக்க வைத்து
    தோற்றது குழந்தை

*  பள்ளி விடுமுறை என்றதும்
    குழந்தையைவிட
    அதிகம் சந்தோஷப்பட்டது
    பொம்மை

*  ‘நிலா தூங்காதா’
    என்ற குழந்தையின் கேள்விக்கு
    பதில்
    சொல்லத் தெரியவில்லை எனக்கு

*  அர்ச்சகரின் மந்திரங்களைவிட
    குழந்தையின் கூச்சலையே
    விரும்புகிறது சாமி