மீண்டும்...





நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வருகிறார்கள் இரண்டு அம்மாக்கள். ஒருவர், பூர்ணிமா பாக்கியராஜ். இன்னொருவர் ராதிகா சரத்குமார். 

‘‘28 வருஷங்களுக்குப் பிறகு நடிக்கப் போறேன். கேமரா முன்னாடி நிற்கப் போறோம்ங்கிறதை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு...’’ என்கிற பூர்ணிமா, சுசீந்திரன் இயக்கவுள்ள ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் நடிக்கிறார். ‘‘நான் கடைசியா நடிச்ச படம், ‘உங்கள் வீட்டு பிள்ளை’. அதன்பிறகும் நிறைய வாய்ப்புகள் வந்தது. குடும்பம், குழந்தைகள்னு ஆனதும், அவங்களைப் பார்த்துக்கவே நேரம் சரியா இருந்தது. இப்போ பிள்ளைங்க, அவங்கவங்க கேரியரில் நல்லபடியா வந்துட்டாங்க. இனி நடிக்கலாம்னு யோசிச்ச நேரத்துல சுசீந்திரன் வந்து கதை சொன்னார். நல்ல கேரக்டர்ங்கறதால ஒப்புக்கொண்டேன்.

ஹீரோவோட அம்மாவா நடிக்கப்போறேன். முதல் படத்தில் அறிமுகமானபோது எந்த மாதிரியான மனநிலை இருந்ததோ, அப்படித்தான் இப்பவும் ஃபீல் பண்றேன். நான் நடிச்சதுல ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘விதி’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தங்கமகன்’, ‘கிளிஞ்சல்கள்’ போன்ற படங்கள் இப்பவும் என் மனசுக்குள்ள பசுமையா இருக்கு. இப்ப நான் வேற பூர்ணிமா. அதனால என்னை கதாநாயகி பூர்ணிமாவோட கம்பேர் பண்ணி பார்க்கக்கூடாதுங்கிறதுதான் ரசிகர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள்’’ என்கிற பூர்ணிமாவுக்கு ஒரு வாழ்த்து பூங்கொத்து!

தயாரிப்பு நிறுவனம், சின்னத்திரையில் நடிப்பு என தேனீயின் சுறுசுறுப்புடன் செம பிஸியாக இருக்கும் ராதிகா சரத்குமார் ஏற்று நடிக்காத வேடங்கள் சொற்பமே. பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகிறார்.

‘‘பல வேலைகளில் நேரமே கிடைக்காததால் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். ‘சகுனி’யில் நடிக்கக் கேட்டபோதும், டைம் இல்லாததால் தயங்கினேன். சிவகுமார் சார் போன் பண்ணி, ‘நீ நடிக்கணும்’னு சொன்னார். அவர்கூட ஜோடியா நடிச்சிருக்கேன். சூர்யாவுடனும் நடிச்சிட்டேன். இப்போ கார்த்தியுடன் நடித்துவிட்டால் ஃபுல் ஃபீல் கிடைச்சிடும்ங்கறதுக்காக ஒத்துக்கிட்டேன்.

மோசமான கேரக்டர் என்பதுபோல் ஆரம்பித்து, பிறகு வேற மாதிரி மாறிடும் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அப்பாகூட நடிச்சவங்களாச்சேங்கிற ஃபீலிங்கெல்லாம் இல்லாமல், என்னுடன் நடிக்கும்போது கார்த்தி ரொம்பவே ஈஸியா இருந்தான். ரொம்ப நல்லா நடிக்கிறான். படத்தில நானும் அவனும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுற மாதிரி சீனெல்லாம் இருக்கு. அந்தக் காட்சியை எடுத்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டே செம கலகலப்பா இருந்துச்சு’’ என்றார் ராதிகா.
கலக்குங்க மேடம்! 
- அமலன்