நடிப்பில் நூறு படங்கள் என்பதே சாதனை. அதில் இன்னும் ஒரு ஐம்பது சேர்த்து 150 படங்களை முடிக்கிறார் 'ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அர்ஜுன். அந்த எண்ணிக்கையைப் பதிவு செய்யும் படமாக அமைகிறது ஏ.கே.கே. என்டர்டெயின்மென்ட்டின் ‘பிரசாத்’. மணிரத்னத்தின் ‘கடல்’ மற்றும் வசந்த் இயக்கும் படங்களில் நடித்து வரும் அர்ஜுன், ஆஸ்கர் பிலிம்ஸுக்காக ஒரு படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறார்.
வெளியாகவிருக்கும் ‘பிரசாத்’ பற்றி சிலாகிக்கும் அவர், அந்தப் படம் பற்றிப் பேசினார்...
‘‘எனக்குக் கதை சொல்ல வர்றவங்க ஆக்ஷன் உள்ளிட்ட தயாரிப்புகளோட வருவாங்க. ஆனா என்னை சந்திச்ச இந்தப்பட புரட்யூசர் அசோக்கேனி, ‘அடுத்த என்னோட படத்துக்கு ஒரு கதை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். நீங்க நடிக்க ஒத்துக்குவீங்களான்னு தெரியலை. இருந்தாலும் கேளுங்க...’ன்னு இந்தப் படத்தோட கதையை சொல்ல வச்சார். டைரக்டர் மனோஜ் சதி சொன்ன கதை, என் 27 வருஷ கரியரையே புரட்டிப் போடற மாதிரி இருந்தது. கேட்டு முடிச்சதும், ‘ஏன் இதுல நடிக்கக் கூடாது’ன்னு தோணிச்சு. நான் இப்படித்தான் நடிப்பேன்னு எப்பவும் சொன்னதில்லை. ஆனாலும் எனக்குன்னு இமேஜ் உருவாகி, ரசிகர்கள் எதிர்பார்க்கிற விஷயங்களை உள்ளடக்கியே படங்கள் பண்ணி வந்ததுல ‘மங்காத்தா’ ஒரு மாற்றம் தந்தது. இந்தப் படக் கதையும் புரட்டிப் போடறதா அமைய, நான் நடிக்க ஒத்துக்கிட்டேன்...’’ என்ற அர்ஜுனிடம், ‘‘அப்படி என்ன மாற்றம் கதையில இருந்தது..?’’ என்றதற்கு பதிலாக படத்தைப் பற்றித் தொடர்ந்தார்.
‘‘முதல்ல இந்தப் படத்துல எனக்கு ஆக்ஷன் இல்லை; டூயட்டும் இல்லை. நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழற ஒரு மெக்கானிக் கேரக்டர் எனக்கு. கஷ்ட ஜீவனம் வாழற யாருமே, அடுத்த தலைமுறை மேலதான் நம்பிக்கை வைப்பாங்க. நமக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்து, அவனை நல்லா படிக்க வச்சு ஆளாக்கிட்டா நம்ம குடும்ப சூழ்நிலை மாறும்னு நான் கணக்குப் போட்ட மாதிரியே ஆண் குழந்தை பிறக்குது. கனவு நிறைவேறிய சந்தோஷம் ஓரிரு வருஷங்கள்லயே பறிபோயிடுது. ஏன்னா... பேசவோ, கேட்கவோ முடியாத சிறப்புத்திறனாளி குழந்தை அவன்ங்கிறது தெரிய வர, அடுத்து என் வாழ்க்கையில என்னென்ன நடக்குதுங்கிறதெல்லாம் நெகிழ்ச்சியா இருக்கும்.
என் 150வது படம் இப்படி இருக்கணும் னெல்லாம் கணக்குப் போட்டு செய்யலை. தற்செயலா இப்படி ஒரு படம் அமைய, அதைப் பயன் படுத்திக்கிட்டே ன்னு சொல்லலாம். இந்த ப்படத்துல என் மகனா நடிச்ச சங்கல்ப் பத்தி சொல்லியே ஆகணும். அவனும் கேரக்டர் போலவே இயல்பிலேயே சிறப்புத்திறன் கொண்டவன்தான். கேட்கவோ பேசவோ முடியாத ஏழு வயசு சங்கல்ப்புக்கு எப்படிக் காட்சிகளைப் புரிய வச்சு நடிக்க வைக்க முடியும் சொல்லுங்க..? அந்த வேலையை நானும் எடுத்துக்கிட்டேன்.
ஆனா எங்க முயற்சிக்கு வேலையே வைக்காம நடிச்சு அசத்திட்டான் சங்கல்ப். அதுவும் பெரிய நடிகர்கள் போலவே மானிட்டர் எல்லாம் தேவைப்படாம டேக்ல பாத்துக்கிறேன்னு சைகைலயே எங்களுக்கு சொல்லிட்டு அப்படியே நடிச்சும் காட்டிடுவான். அவன் திறமை பெரிய அளவில பேசப்படும். அதை மெய்ப்பிக்கிற அளவில பெர்லின் உலகப்பட விழாவுல இந்தப் படத்தை ஸ்கிரீன் பண்ணியப்போ, சீனர்கள் எல்லாம் படத்தைப் பார்த்துக் கண் கலங்கிட்டாங்க. இளையராஜா இசையும் படத்தை உணர வச்ச காரணங்கள்ல ஒண்ணு. படத்தோட கிளைமாக்ஸ், சமூகத்துக்கு செய்தியா இருக்கிறதோட, என் நாட்டுப்பற்றை சொல்றதாவும் இருக்கும்...’’
ஆஹா... இது அர்ஜுன் படமேதான்..!
வேணுஜி