மேஷ ராசிக்கு மாமியார் -மருமகள் சண்டையைத் தீர்க்கும் இறைவன்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                      உற்றார், உறவினர்களோடு நாம் கொண்டிருக்கும் இணக்கம் தான் நமது வாழ்க்கையில் நிம்மதியைத் தீர்மானிக்கிறது. நெருக்கமான உறவுகளுக்குள் சிக்கல் ஏற்பட்டால் அமைதி காணாமல் போகிறது. அந்தப் பிரச்னை வீட்டிற்குள்ளேயே இருந்தால் விரக்திதான் மிஞ்சுகிறது. இப்படி பிரச்னைகளில் முக்கியமானது மாமியார் - மருமகள் பிரச்னை. எதனால் இது ஏற்படுகிறது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் அடுக்கலாம். ‘‘நான் என்ன நினைக்கிறேன்னு புரியவைக்கப் போகும்போதுதான் இன்னும் சண்டை அதிகமாகுது’’ என்று சொல்வோரும் உண்டு. பிரச்னை எங்கே தொடங்கியது... என்ன காரணம் என்று தெரியாமலேயே இடியாப்பச் சிக்கலாக சுற்றிக் கொள்கிறது.

‘‘மாமியார் - மருமகள் பிரச்னைங்கறது வேத காலத்துலேருந்து நடந்து வர்ற விஷயம்’’ என்பார் எனது நண்பர் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் யுகத்துக்கு யுகம் தொடர்ந்து வரும் தீராத வேதனையாகத்தான் இது இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு வீட்டுக்கு வெளியில் சென்றால் குதூகலம்; வீட்டிற்குள் வந்தால் போர்க்களமாகிப் போகிறது. ‘‘ஏன்தான் வீட்டுக்கு வந்தோம்னு இருக்கு’’ என்று குமுறாத பெண்கள் குறைவு.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


 
     திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் கூட, பலருக்கு மாமனார், மாமியார் பிரச்னை தொடர் கதையாகிறது.

 ‘‘அவர் ரொம்ப நல்லவரு. நல்லா பாத்துக்கிறாரு. கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கறாரு, ஆனா அவர் அம்மாகிட்ட இருந்து ஒரு போன் வந்துட்டா போதும். அப்படியே மாறிடுவாரு. எரிஞ்சு எரிஞ்சு விழுவாரு. முகத்தை தூக்கி வச்சுகிட்டு எதையோ பறிகொடுத்த மாதிரி இருப்பாரு. ஒண்ணா இருக்கும்போதுதான் ஆயிரத்தெட்டு பிரச்னைன்னா, தனியா வந்துகூட நிம்மதியில்லாம இருக்கு’’ என்கிற புலம்பல்களுக்கும் குறைவில்லை. ‘‘அவருக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போறேன்’’ என்று பூமாதேவியாக சகித்துக் கொள்ளும் பெண்கள் பலருண்டு.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் சரிதான், மேடைகளில் பெண்ணுரிமை பேசும் சமூக சீர்திருத்த சகோதரியானாலும் சரிதான்... தன் மருமகளோடு சமையலறையில் நின்று சண்டை போடத் தவறுவதில்லை. ‘‘எங்க வீட்ல பெண் வாரிசே இல்லை. உங்க பொண்ணு இனிமே எங்க பொண்ணு’’ என்று பெண் பார்க்கும் படலத்தின்போது வாய்ப்பந்தல் போடுவார்கள். திருமணத்திற்குப் பிறகு எல்லாம் தலைகீழாகும்.

‘‘காயத்ரி... எழுந்திரும்மா. சூடா காபி வச்சிருக்கேன்’’ என்று மருமகள் வந்த பின்பும் வழக்கம்போல அதிகாலையில் எழுந்து, வாழவந்த பெண்ணுக்கும் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடும் அரிதான மாமியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காலையில் எழுந்ததிலிருந்து வாஷிங் மெஷின் செய்ய வேண்டிய வேலையை தானே செய்து, வியர்த்து விறுவிறுத்து வேலைக்காரியாக வேதனைப்பட்டு ரத்தக்கண்ணீர் வடிக்கும் மருமகள்களும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதேபோல சில வீடுகளில் மருமகளிடம் சிக்கித் தவிக்கும் முதிய மாமியாரின் பரிதாப வேதனைகளுக்கும் குறைவில்லை.

கடந்த மாதத்தில் ஒரு பெண்மணி வந்திருந்தார். சென்னி மலையிலிருந்து வருவதாகவும், தன் பெயர் பேபி என்றும் கூறினார். ‘‘இது என் மாமியாரோட ஜாதகம்... அவங்களோட ஆயுள், ஆரோக்கியம் எப்படிங்க இருக்கு’’ என்று கேட்டார்.

‘‘உங்க ஜாதகத்தையோ உங்க கணவருடைய ஜாதகத்தையோ முதல்ல பார்க்கறேன்’’ என்றேன்.

‘‘எங்க ஜாதகத்தைவிட என் மாமியார் ஜாதகத்தோட பலன்களை பார்க்கத்தான் வந்தேன். மாமியார் எனக்கு தெய்வம் மாதிரி. இன்னும் முப்பது, நாப்பது வருஷம் அவங்க இருக்கணும். அதுக்காக நான் என்ன பரிகாரம் வேணாலும் செய்ய தயாரா இருக்கேன். எந்தக் கோயிலுக்கு போகணும், என்ன விரதம் இருக்கணும். தான, தர்மம் செய்யணுமா’’ என்று அவர் உருகியதில் ஆச்சரியப்பட்டேன். அந்தப் பெண்மணியின் ஜாதகத்தை ஆராய்ந்தேன். மாமியார் ஸ்தானம் சொல்லும் கட்டத்தில் வளர்பிறை சந்திரன் அமர்ந்து, அந்த வீட்டுக்குரிய சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்ந்திருந்தார். அதனால்தான் அந்தப் பெண்மணிக்கு தன் தாயாரால் கிடைக்காத மகிழ்ச்சியும், மன நிம்மதியும் மாமியாரால் கிடைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

‘‘எம் புள்ளைய எங்கிட்ட இருந்து பறிச்சிட்டா... முந்தானையில முடிஞ்சிட்டா’’ என்று சில மாமியார்கள் சொல்வது உண்மையான காரணமாகுமா? Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘தலையணை மந்திரம் போட்டு நல்லா மயக்கிட்டா’’ என்று புலம்புவதன் காரணம்தான் என்ன? ‘‘அந்த மாயவரம் மகாதானத் தெரு ஜோசியர் கூட பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருக்குன்னு சொன்னாரு... எம்புள்ளைய பிரிச்சிடுவாள்னு சொல்லலை’’ என்பதுபோல மாறிப்போன வாழ்க்கையின் மர்மம்தான் என்ன?

உலக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ‘‘எல்லாம் விட்டுக் கொடுக்குறதுலதான் இருக்கு’’ என்று வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்கள் போகிற போக்கில் அறிவுரை கூறலாம். இவையெல்லாம் அவரவர் பிறக்கும்போது அமைந்த கோள்களின் கோலாட்டத்தால் வரும் கோளாறுகள்தான். நல்ல மாமனார் - மாமியார் அமைவது, மாமனார் - மாமியாரே இல்லாத வாழ்க்கைத்துணை அமைவது, இவர்கள் இருந்தும் உதவாமல் இருப்பது, குடும்பத்தில் பிரிவினைகள் ஏற்படுவது... இப்படி எல்லா பிரச்னைகளுக்குமே சொந்த ஜாதகம்தான் காரணமாகிறது.

திருமணம், வீடு, குழந்தை என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஸ்தானம் இருக்கிறது. அதை ஒவ்வொரு கிரகமும் ஆள்கிறது என்று விரிவாகப் பார்த்தோம். அது போலத் தான் ஒவ்வொரு வருக்கும் மாமனார், மாமியார் எப்படி அமைவார்கள், உதவுவார்களா... உபத்திரவம் தருவார்களா என்பதையும் பார்க்கத்தான் வேண்டும். மணப்பொருத்தம் பார்க்கும்போதே, மாமனார் - மாமியாரும் பொருந்தி வருவார்களா என்பதையும் பார்த்துவிடுதல் நல்லது.

சொந்த ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திலிருந்து 3ம் இடம் மாமனாரைக் குறிப்பதாகவும், 10ம் இடம் மாமியாரை இனம் காட்டுவதாகவும், 9ம் இடம் வாழ்க்கைத்துணையின் இளைய சகோதர, சகோதரியை வெளிப்படுத்துவதாகவும், 5ம் இடம் வாழ்க்கைத்துணையின் மூத்த சகோதர, சகோதரியை நிர்ணயிப்பதாகவும் அமைகிறது.

முதலில் மேஷ ராசியினருக்கு மாமனார்-மாமியார் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்போம்... 

பொதுவாகவே நீங்கள் சகோதரன், சகோதரி, சித்தப்பா, பெரியப்பா, மாமன், மாமி, பாட்டன், பாட்டி என பெருங் கூட்டத்துடன் கூட்டுக் குடும்பமாக வாழ ஆசைப்படுவீர்கள். வெகுளியாகப் பேசும் நீங்கள், ரத்த பந்தங்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பீர்கள். உங்களின் சொந்தங்களைப் பற்றி யாரேனும் குறை சொன்னால் கொதித்து எழுவீர்கள். பெரியப்பா பெண்ணுக்கு கல்யாணம் என்றால் உங்கள் மனசெல்லாம் மத்தாப்பாக பூரிக்கும். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பீர்கள்.

 இப்படி இருக்கும் நீங்கள், நெருங்கிய உறவினர்கள் உதாசீனப்படுத்துவதாகவோ, அவமானப்படுத்துவதாகவோ தெரிந்து விட்டால் அத்தனை உறவுகளையும் வெட்டி விடுவீர்கள். அவர்களின் முகத்திலேயே விழிக்கக்கூடாது என்று வீறாப்புடன் ஊர்விட்டு ஊர் மாறுவீர்கள். ஏனெனில் செவ்வாய் உங்கள் ராசிக்கு அதிபதியாக வருகிறார்.

உங்கள் மாமனார் ஸ்தானத்திற்குரிய கிரகமாக மிதுன புதன் வருவதால், ஜோவியலாக பேசக்கூடிய மாமனார் அமைவார். ‘‘மாப்ளே! என் பொண்ணு அப்படித்தான் அப்பப்போ கத்துவா. எப்படி பேசினா அவளுக்கு பிடிக்கும். எதை வாங்கிக் கொடுத்தா கூல் ஆயிடுவாள்னு நான் சொல்றேன்’’ என்று தன் மகளை சமாளிக்கக் கூடிய வழிவகைகளை சொல்லித் தருபவராக உங்கள் மாமனார் இருப்பார்.

உங்கள் ஜாதகத்தில் புதன், சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருந்தால், உங்களுக்காக அதிகம் செலவு செய்பவராகவும், வீட்டில் விசேஷம் என்றால் விலையுயர்ந்த அன்பளிப்பு தருபவராகவும் மாமனார் இருப்பார். மாமனாரின் பொறுப்புணர்வையும் பாசமழையையும் கண்டு அவ்வப்போது வியப்பில் ஆழ்வீர்கள். புதன் ராகு, கேதுவுடன் சேர்ந்திருந்தாலோ, சனியின் பார்வை பெற்றிருந்தாலோ, ‘‘உங்கப்பா பெருமையை எங்கிட்ட பேசிக்கிட்டுருக்காதே. கல்யாணம் முடிஞ்ச மூணாவது நாள், எங்க அப்பா அம்மாவை பார்த்து அவர் என்ன கேட்டார்னு உனக்குத் தெரியுமா? அதை நினைச்சா இன்னமும் எனக்கு தூக்கம் வரலை’’ என்று மனைவியுடன் அவ்வப்போது மல்லுக்கு நிற்பீர்கள். புதன் கெட்டிருந்தால் மாமனார் ஊனமாகவோ அல்லது வீட்டில் செல்வாக்கில்லாதவராகவோ அமைவார்.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineமாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக மகரச்சனி வருவதால் உங்கள் மாமியார் மணக்க மணக்க வாய்க்கு ருசியாக ஏதாவது சமைத்துத் தருபவராக இருப்பார். ‘‘ராத்திரியெல்லாம் இருமிக்கிட்டே இருந்தியே... உடம்புக்கு என்னம்மா பண்ணுது? ஆபீஸுக்கு பேசாம லீவ் போட்டுடேன். சுக்கு, கண்ட திப்பிலி, கசகசா, சோம்பெல்லாம் அரைச்சு விட்ட மருந்து குழம்பு வச்சிருக்கேன். சாப்பிட்டியான்னா இதமா இருக்கும்’’ என்று அன்பாக உபசரிக்கும் மாமியார் அமைவார்.

உங்கள் ஜாதகத்தில் குரு வீட்டில் சனி அமர்ந்திருந்தாலோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ, குருவுடன் சேர்ந்திருந்தாலோ, சந்திரன் பார்வை அல்லது சந்திரனின் சேர்க்கை பெற்றிருந்தாலோ, சனி சொந்த வீடுகளில் அமர்ந்திருந்தாலோ உங்களை மருமகளாக நினைக்காமல் மகளாக நினைத்து உங்கள் வளர்ச்சிக்கு உதவும் மாமியார் அமைவார். மேஷ ராசிக்கு அதிபதியாக செவ்வாய் வருகிறார். செவ்வாய்க்கு எதிர் கிரகங்களாக மாமனார் ஸ்தானத்திற்குரிய கிரகமாக புதனும், மாமியார் ஸ்தானத்திற்குரிய கிரகமாக சனியும் அமைவதால், மேஷ ராசியில் பிறந்த பலருக்கு மாமனார், மாமியார் இருவரில் ஒருவர் இல்லாத வாழ்க்கைத்துணையே அமைகிறது.

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த உறவில் பிரச்னை என்றால் வணங்க வேண்டிய ஆலயம், நம்பிக்கோயில் என்றழைக்கப்படும் திருக்குறுங்குடி நம்பிப் பெருமாள் ஆலயம். ஏனெனில் இக்கோயிலின் கருவறையிலேயே புதனுக்குரிய பெருமாளும், ஈசனுக்கு உரிய சனியும் அமைந்துள்ளது. இப்படி கருவறையில் ஈசனும் பெருமாளும் அருள்பாலிக்கும் ஆச்சரியமான தலம் இது. ஒருமுறை இந்தத் தலத்திற்கு சென்று தரிசித்துவிட்டு வாருங்கள். உறவுகள் உன்னதமாவதை உணர்வீர்கள்.

திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ. தூரத்தில் இக்கோயில் உள்ளது. திருநெல்வேலி-நாகர்கோவில் வழியில் வள்ளியூர் சென்று அங்கிருந்து திருக்குறுங்குடியை அடையலாம்.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
முனைவர் கே.பி.வித்யாதரன்