‘காக்காசு வாங்கினாலும் கவர்மென்ட் காசு வாங்கணும்’ என்பது போன தலைமுறைப் பொன்மொழிதான். ஆனால் இன்று, ‘பர்மனென்ட் வேலை வேணும் மச்சான்’ என்கிற ரீதியில் மீண்டும் அது ஃபீனிக்ஸ் ஃபீலிங்ஸ் ஆகியிருக்கிறது. ஐ.டி துறையே சரணம் என்று வெறும் கீ போர்டில் முழம் போட்டுக் கொண்டிருந்தவர்களின் உச்சந்தலையில் உலகப் பொருளாதாரம் நச்சென்று ஒரு குட்டு வைத்திருப்பதே இதற்குக் காரணம்.
‘‘பாதுகாப்பானது, நிரந்தரமானது என்பதால் இப்போது அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவன வேலைகளுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. ஆனால், வட இந்தியர்களோடு ஒப்பிடும்போது நம்மவர்கள் இன்னும் இந்த அரசு சார்ந்த வேலைகளில் அதிக கவனம் செலுத்தவில்லை’’ என்கிறார்கள் வேலைவாய்ப்புத் துறையைச் சார்ந்த நிபுணர்கள்.
நம் இளைஞர்களுக்கு இந்த விஷயத்தில் உதவுவதற்காகவே இந்த யூஸ்ஃபுல் தொடர்...
‘அதெல்லாம் நமக்குக் கிடைக்குமா’ என்ற அவநம்பிக்கையும், ‘அதுக்கு பெரிய புரொஸீஜர் இருக்கே... யாரால செய்ய முடியும்?’ என்ற அறியாமையுமே இந்த விஷயத்தில் நம் இளைஞர்களைப் பின்தங்க வைத்திருக்கிறது.
உண்மையில் அரசு வேலை பெறுவது அப்படி யொன்றும் அசகாய சூரத்தன மில்லை. எல்லா பணிகளுக்கும் தனித் தனியாக தேர்வுகள் உண்டு. அந்தத் தேர்வுகளில் ஜெயிக்கத் தேவையான படிப்பும் புத்திசாலித்தனமும் நம்மிடம் நிறையவே இருக்கிறது. கூடவே கொஞ்சம் விழிப்புணர்வும் இருந்தால், அந்த வேலையை அசால்ட்டாக தட்டிச் செல்லலாம்.
இந்த மார்ச் மாதத்தை வேலைக்கான சீஸன் என்றே சொல்லலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிதாக 10 ஆயிரம் பணியாளர்களை நியமிப்பதற்கு இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியிட இருக்கிறது. 19 பொதுத்துறை வங்கிகளுக்கு ஊழியர்களைத் தேர்வு செய்யும் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன்’ (ஐபிபிஎஸ்) அமைப்பு இந்த மாதம் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்தத் தேர்வை எழுதுகிறவர்களே வங்கிகளில் பணியில் சேர முடியும். ஒவ்வொரு வருடமும் மத்திய அரசும் வங்கிகளும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்கின்றன. அந்த வேலைகள் தொடர்பான விபரங்கள், படிப்பு முறைகள், சம்பள விகிதங்கள் போன்றவற்றை வாராவாரம் விளக்க வருகிறார்கள் இது தொடர்பான நிபுணர்கள்!
நம் இளைஞர்கள் முன் கொட்டிக் கிடக்கும் ஏராளமான வாய்ப்புகளை விவரிக்கிறார் சங்கர்’ ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் சங்கர்...
‘‘அரசு அறிவிக்கும் ஐம்பதாயிரம் வேலைகளில் சுமார் இருபதாயிரத் திலிருந்து முப்பதாயிரம் வேலைகள் அரசு சார்ந்த வங்கிகளில் இருக்கின்றன. இதற்காக ஐபிபிஎஸ் அமைப்பு வருடம் இரண்டு முறை தேர்வுகளை நடத்துகிறது. இது பற்றிய அறிவிப்பு மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிடப்படும். இதில் பல்வேறு வேலைப் பிரிவுகளுக்காக தேர்வு நடக்கிறது. இதுதவிர பாரத ஸ்டேட் வங்கியும், அரசு நிறுவனமான ரிசர்வ் வங்கியும் இணைந்து ஒரு தேர்வு நடத்துகிறது. இதில் இரண்டாயிரம் வேலைகளுக்கு ஆளெடுக்கிறார்கள்.
ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே பணியாளர் தேர்வாணையம் இரண்டாயிரம் வேலைகளுக்கு தேர்வு நடத்துகிறது. மத்திய அரசின் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் அமைப்பு, இன்கம்டாக்ஸ் அஸிஸ்டென்ட், கமர்ஷியல் டாக்ஸ் அஸிஸ்டென்ட் பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. இதில் இரண்டாயிரம் வேலைகள் ரெடியாக உள்ளன. உளவுத்துறையில் சுமார் எழுநூறு, சி.பி.ஐயில் சுமார் எழுநூறு வேலைக்கான வாய்ப்புகள் உள்ளன. பாதுகாப்புத் துறை வருடத்துக்கு இரண்டு முறை தேர்வுகளை நடத்துகிறது. ஒவ்வொன்றிலும் சுமார் எழுநூறு பேர் வரை தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்திய வனத்துறையும் வருடத்தில் நூறு பேருக்காக தேர்வு நடத்துகிறது. பிறகு ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் போன்ற உயர் பதவிகளுக்காக யு.பி.எஸ்.சி நடத்தும் வருடாந்திரத் தேர்வுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
தமிழக அரசு வேலைகளுக்காக டி.என்.பி.எஸ்.சியும் அறிவிப்பு வெளியிட உள்ளது. சமீபகாலமாக இந்தத் தேர்வு நிர்ணயிக்கப்பட்ட காலங்களில் நடக்காததால் மாணவர்கள் ஏமாற்ற மடைந்தனர். இப்போது இந்த அமைப்பு சீரமைக்க ப்பட்டுள்ளதால், இனி இப்படியான பிரச்னைகள் வராது எனலாம்.
அடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் சுமார் தொள்ளாயிரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமனத்துக்கான அறிவிப்பை இந்த மாதத்துக்குள் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத் தேர்வாணையமும் சீரமைப்புப் பணி முடிந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுவாக வடஇந்திய மாணவர்கள் கல்லூரியில் சேரும்போதே அரசு சார்ந்த வேலைகளுக்காகவும் தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள். நம் ஊரில் படிப்பை முடித்ததும்தான் வேலைகள் பற்றி யோசிக்கிறார்கள். கடைசி நேரத்தில் படிப்பது தேர்வுக்குத் துணை புரியாது. பொதுவாக அரசு சார்ந்த தேர்வுகளில், எந்த வேலை என்றாலும் மூன்று வகையான பிரிவுகளில் கேள்விகள் இருக்கும். பொது அறிவு, மென்டல் எபிலிட்டி எனப்படும் அறிவுத்திறன் போட்டி, இறுதியாக ரீஸனிங் எனப்படும் பகுப்பாய்வு. ஒன்றில் அதிகம் படித்து இன்னொன்றில் கோட்டைவிடுவது தேர்ச்சிக்கு உதவாது. துறைகளுக்கேற்ப இந்த கேள்வித்தாள்களில் கடினம் இருக்கும். உதாரணத்துக்கு, டி.என்.பி.எஸ்.சி குரூப் நான்கு தாளில் இலகுவாக இருக்கும் கேள்விகள், யு.பி.எஸ்.சி தேர்வுகளில் கடினமாக இருக்கும்’’ என்கிறார் சங்கர்.
வங்கிகளே அதிகபட்சமான வேலைவாய்ப்புகளை வழங்குவதால், வங்கி வேலைவாய்ப்பின் பிரிவுகள், தகுதிகள், சம்பள விகிதங்கள், படிக்கும் முறைகள்... அடுத்த இதழில்!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்