தேசிய திரைப்பட விருதுகளால் தமிழ்ப் படவுலகம் ஐந்து முறை மகிழ நேர்ந்திருக்கிறது. சிறந்த பொழுதுபோக்குப் பட ரேஸில் சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ முந்திவிட, குதிரைக்காரராக வந்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகராக லகான் பிடித்திருக்கிறார். ‘ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜா, சிறந்த புதுமுக இயக்குநர் விருதையும், அதே படத்துக்காக பிரவீன் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதையும் பெற்றிருக்கிறார்கள். சிறந்த பிராந்திய மொழிப்படமாக இயக்குநர் ஏ.சற்குணத்தின் ‘வாகை சூட வா’ பேர் ராசிப்படியே வாகை சூடிக்கொண்டிருக்கிறது.
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள் ஐவரும்...
‘‘நம் எந்த முயற்சியுமே சிறப்பாதான் இருக்கணும்; இருக்க முடியும். அதனால இந்த விருதை எதிர்பார்க்காமலேயே நாம நல்ல படம்தான் கொடுத்திருக்கோம்னு நினைச்சேன். விமர்சகர்களால பாராட்டப்பட்ட அளவுக்கு அது வெற்றிப்படமா ஆகலைங்கிறதுதான் உண்மை. ஆனா எனக்கு நல்ல பெயரைத் தந்த படம் அது. இப்ப இந்த விருது இன்னொரு முறை என்னை நினைக்க வச்சிருக்கு...’’என்று களிப்பைத் தாண்டி வெகு இயல்பாகப் பேசிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இதே படத்தின் எடிட்டிங்கும் விருது பெற்றதைப் பற்றியும் பேசினார்.
‘‘இது ஒரு த்ரில்லர் டிராமா. ஆனா வழக்கமான த்ரில்லர் படங்கள் போல கட்டிங்குகள் இருக்கக்கூடாதுன்னு ஆரம்பத்திலேயே முடிவு பண்ணினோம். அப்படியே காட்சிகளையும் லெங்க்த்தியா ஷூட் பண்ணினோம். அதைப் புரிஞ்சுக்கிட்டு நான் சொன்னதை அப்படியே ஏத்துக்கிட்டு எடிட் பண்ணியதுக்காக பிரவீனுக்கு நன்றி..!’’
தன் விருதுக்கான நன்றியை முதலில் தயாரிப்பாளர் எஸ்.பி.சரணுக்கு காணிக்கையாக்கினார் எடிட்டர் பிரவீன் கே.எல். ‘‘என்னைக் கூப்பிட்டு ‘ஆரண்ய காண்டம்’ ஸ்கிரிப்ட்டை அவர் கொடுத்தப்ப, நான் படிச்சுட்டு ‘நல்ல ஸ்கிரிப்ட். ஆனா உங்களுக்கு வருமானம் வர்றது கஷ்டம்’னு சொன்னேன். ஆனாலும், ‘அதுபற்றிக் கவலையில்லை. எனக்கு இப்படி வித்தியாசமான நல்ல ஸ்கிரிப்ட்டுகள்தான் வேணும்’னு பிடிவாதமா இதைத் தயாரிச்சார். அந்த தைரியத்துக்கும், டைரக்டர் குமாரராஜாவோட வித்தியாசமான சிந்தனைக்கும் கிடைச்ச அங்கீகாரம்தான் இந்த விருது. ‘சென்னை 28’லேர்ந்து சமீபத்திய ‘அரவான்’ வரை நான் எடிட் செய்த அத்தனை படங்கள்லயும் என்கூடவே எடிட் செய்தவர் என் நண்பர் ஸ்ரீகாந்த். எங்க ரெண்டு பேரோட பெயர்களும்தான் டைட்டில்ல வரும். ஏனோ விருது அறிவிப்பில ஸ்ரீகாந்த் பெயர் விட்டுப் போயிருக்கு...’’ என்று திருத்தினார் அவர்.
‘அழகர்சாமியின் குதிரை’ பெற்ற விருதில் அகமகிழ்ந்திருந்தார் இயக்குநர் சுசீந்திரன். ‘‘வெற்றியும் தோல்வியும் கடந்து போகும். ஆனா நல்ல முயற்சிகளுக்கு இப்படிப்பட்ட அங்கீகாரங்கள்தான் நம்பிக்கையையும், அடுத்தும் இதே மாதிரி முயற்சி செய்ய தைரியத்தையும் கொடுக்கும். படத்துக்குக் கிடைச்ச விருதைவிட அதிகமா நான் சந்தோஷப்பட்டது அப்புக்குட்டிக்கு கிடைச்ச விருதுக்காகத்தான். ஏன்னா அழகர்சாமி படத்துக்கு அப்புக்குட்டியை ஹீரோவாக்கியதுல கண்டனங்கள் வந்தும் பிடிவாதமா இருந்தவன் நான். அந்த முடிவு சரிதான்னு விருது உரக்கச் சொல்லியிருக்கு.
இந்தப் படத்தை சரியான நேரத்துல ரிலீஸ் பண்ணலையோன்னு ஒரு வருத்தம் எனக்கு இருந்தது. இப்ப தயாரிப்பாளர் இந்தப்படத்தை மீண்டும் ரிலீஸ் பண்ணப்போறார்னு செய்தி கேட்டு மேலும் மகிழ்ச்சியில இருக்கேன்...’’ என்றார் சுசீ.
‘‘சமரசம் இல்லாம நேர்மையா படம் எடுத்ததுக்கு கிடைச்ச அங்கீகாரமா இந்த விருதை எடுத்துக்கறேன் ...’’என்றவர், வாகை சூடிக்கொண்ட ஏ.சற்குணம். ‘‘ஆரோக்கியமான முயற்சிகளுக்கு கிடைக்கற இதுபோல விருதுகள்தான் இனி வர்ற இளைய இயக்குநர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும்...‘‘ என்ற சற்குணம், அரசாங்கம் அங்கீகரித்தும் நல்ல படங்களை ரிலீஸ் செய்வதில் இருக்கும் சிக்கல்கள் படத்தின் வெற்றியைப் பாதிக்கிறது என்று வருந்தினார்.
‘‘பெரிய நடிகர் படங்களுக்கு இருக்கிற முன்னுரிமை நல்ல படங்களுக்கு இல்லை. சரியான தியேட்டர்களோ, தியேட்டர்கள் கிடைச்சாலும் ரெகுலர் ஷோக்கள் கிடைக்காம ஏதோ ஒரு ஷோ கிடைக்குது. அந்த குறிப்பிட்ட ஷோவுக்காகக் காத்திருந்து யாரும் படம் பார்க்க வரமாட்டாங்க. விரல் நுனியில 300 சேனல்கள், நெட்லயும், செல்போன்லயும் உள்ளங்கைல சுருங்கிப்போன உலகம், திருட்டு விசிடிக்கள் தாண்டி மக்களை தியேட்டருக்கு வரவழைக்கிறது சாதாரண வேலையில்லை. நல்ல படங்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் இதுபோன்ற விருதுகளோட, வெற்றிக்கான ஆரோக்கிய சூழலும் சேர்ந்துதான் தர முடியும்...’’
யாரோ விளையாடறாங்கன்னு நினைச்சேன்!
‘‘வீட்ல கரன்ட் இல்லாததால டிவி பாக்க முடியலே. பழைய ஆல்பங்களை எடுத்து வச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். அப்பதான் டெல்லியில இருந்து ஒரு போன் வந்துச்சு. ‘உங்களுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு’ன்னு சொன்னாங்க. காலண்டரைப் பாத்தேன். ஏப்ரல் 1ம் தேதியும் இல்லை. யாரோ நம்மகிட்ட விளையாடுறாங்கன்னு நினைச்சேன். கொஞ்ச நேரத்தில சுசீந்திரன் அண்ணன் போன் பண்ணி, ‘ரொம்ப சந்தோஷமா இருக்குடா... பெரிய அங்கீகாரம்’னு பாராட்டினார். அப்போதான் நம்புனேன்...’’ என்று சிரிக்கிறார் அப்புக்குட்டி.
‘‘சினிமாவுல சாதிக்கணும்ங்கிறதுக்காகத் நான் சென்னை வரலே. பிழைக்கிறதுக்காகத் தான் வந்தேன். இன்னைக்கு நாலுபேருக்கு என்னைத் தெரியுதுன்னா அதுக்கு சுசீந்திரன் அண்ணன்தான் காரணம். அவர் மட்டும் ‘வெண்ணிலா கபடிக்குழு’வில வாய்ப்பு தராம போயிருந்தா, இன்னைக்கும் கூட்டத்துல ஒருத்தனாதான் சினிமாவில நின்னிருப்பேன். ‘அழகர்சாமியின் குதிரை’யில் இப்படி ஒரு வாய்ப்பு கொடுப்பார்னு நினைச்சுக்கூட பாக்கலே. சினிமாவை மட்டுமில்லே... வாழ்க்கையையும் எனக்குப் புரிய வச்சவர் அவர்தான்’’ என்று நெகிழ்கிறார் அப்புக்குட்டி.
வெ.நீலகண்டன்
வேணுஜி