‘‘பொதுவாவே என் படங்கள்ல கல்விக்கு முக்கியத்துவம் இருக்கும். காதலியோட கல்வியைத் தாங்கற இளைஞனா ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ல வருவேன். படிக்காதவனோட ஒரு படிச்ச பெண்ணுக்கு வர்ற காதலை ‘காத்தவராயன்’லயும், படிச்சு வேலை கிடைக்காதவன் நிலையை ‘தம்பி வெட்டோத்தி சுந்தரத்’திலயும் பார்க்கலாம். கல்வி உள்ளே வர்ற கதை எனக்குப் பிடிச்சதா இருக்கும்...’’ என்கிற கரண், தான் நடித்து இப்போது வெளியாகவிருக்கும் வி.பி.பிலிம்ஸின் ‘கந்தா’விலும் கல்விக்கான முக்கியத்துவம் தூக்கலாகவே இருப்பதாகச் சொல்கிறார்.
‘‘தமிழ்ல கல்வியைப் பற்றியும், ஆசிரியர் - மாணவர் உறவு முறைகளைப் பற்றியும் பதிவு செய்த கதைகள் குறைவுதான். ‘ஸ்கூல் மாஸ்டர்’ மாதிரியான கதைகள் அரிதாகத்தான் வரும். அப்படி வந்த ஒரு படம்தான் என் முதல் படமான ‘நம்மவர்’. அதுக்குப் பிறகு ‘கந்தா’விலதான் அப்படியொரு ஸ்கிரிப்ட் அமைஞ்சது...’’ என்ற கரண் தொடர்ந்தார்.
‘‘எல்லாரோட வாழ்விலும் ஆசிரியர்களோட பங்கு மகத்தானது. அதிலும் இன்றைய நகர நாகரிகத்தில பார்க்க முடியாத நெகிழ்ச்சி கிராமத்துப் பள்ளிக்கூடங்கள்ல இன்னும் இருக்கு. அங்கே படிக்கிற ஒவ்வொரு மாணவனைப் பத்தியும், அவங்க குடும்ப சூழல் பத்தியும் ஆசிரியர் தெரிஞ்சு வச்சிருப்பார். அப்படி தஞ்சையில ஒரு குடிகாரத் தந்தை இறந்துபோக, அவர் மகனான என்னைப் படிக்க வச்சு ஆளாக்கறார்
ஆசிரியர் ராஜேஷ். வெளிநாட்டுல வேலை கிடைச்சுப் போற நான், மீண்டும் ஊருக்கு வரும்போது முதல்ல அவரைத்தான் தேடறேன். அதுக்குப் பிறகு என்ன நடந்ததுங்கிற நிகழ்ச்சிகள்தான் கதை.
‘நம்மவர்’ல ஒரு மாணவன் எப்படி இருக்கக் கூடாதுன்னு என் நடிப்பில சொல்லியிருந்ததுக்கு நேர்மாறா ஒரு மாணவன் எப்படி இருக்கணும்னு காட்டற வேடத்துல இதுல நடிச்சிருக்கேன். என் ஜோடியா ‘காவலன்’ மித்ரா நடிச்சிருக்காங்க. சமூக சிந்தனையோட ஸ்கிரிப்ட் எழுத நிச்சயமா ஒரு எழுத்தாளராலதான் முடியும். அப்படியே இந்தக் கதையை எழுதியிருக்க டைரக்டர் பாபு கே.விசுவநாத்தும் எழுத்தாளர்தான். இலக்கிய உலகத்துல இருந்து சினிமாவுக்கு வர்றவங்களுக்கு கமர்ஷியலா படம் எடுக்கத் தெரியாதுங்கறது பிரச்னை. ஆனா அந்த ஏரியாவிலயும் குறை வைக்காம பரபரன்னு ஒரு ஸ்கிரீன்
பிளேவோட அற்புதமான படத்தைக் கொடுத்திருக்கார் பாபு. சமீபத்துல ஆசிரியையை ஒரு மாணவன் குத்திக் கொன்றதா வந்த செய்தியைப் பார்த்தப்ப எல்லோருக்குமே ஆசிரியர் - மாணவர் உறவு குறிச்சு கவலை எழுந்தது நிஜம். அந்த உறவை மேம்படுத்திச் சொல்ற காலக்கண்ணாடியா அமைஞ்ச கதை இது. இன்னும் ஊழல் நுழையாத இடமான ஆசிரியர் பணியோட மேன்மையைச் சொல்ற இந்தப்படம் தமிழ் சினிமாவில முக்கியப் படமா இருக்கும்...’’
- - ஜி