‘நீங்கா நினைவில் 31ம் நாள் நினைவு அஞ்சலி’ - இப்படியொரு கண்ணீர் அஞ்சலி விளம்பரம். வாசகத்தின் பக்கத்தில் பால்வடியும் நடிகை பாவனாவின் முகம்! இதைப் பார்த்து பதறிவிட்டனர் இலங்கையிலுள்ள தமிழ் ரசிகர்கள்! அதே பதற்றத்தோடு பாவனாவின் நம்பரைத் தட்டிய நமக்கு, ‘‘ஹல்லோ... பாவனா ஹியர்’’ என்று மறுமுனை சொன்னதும்தான் உயிரே வந்தது!
பிரபல நடிகைகளின் தலையை வெட்டி, ஆபாச போஸில் இருக்கும் வேறொரு உடம்பில் ஒட்டி, நெட்டில் உலாவ விடும் ஜிம்மிக்ஸ் பார்ட்டிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ‘உயிரோடு இருக்கும்... பார்க்க அம்சமாக வேறு இருக்கும் பாவனாவைப் போய் இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க எப்படித்தான் மனசு வந்துச்சோ!’ என்று நமக்கு கன்னமெல்லாம் துடிக்க, பாவனாவுக்கு விஷயத்தை விளக்கினோம்.
‘‘எண்ட அம்மே...’’ என்றபடி பூகம்ப அதிர்ச்சி காட்டியவர், குருவாயூரப்பன் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டார். ‘‘சத்தியமா நான் உயிரோடதாங்க இருக்கேன். என் எதிரிக்குக்கூட இப்படி ஒரு சர்ச்சையில சிக்கற நிலைமை வரக்கூடாது. இப்படியெல்லாம் கூடவா செய்வாங்க?’’ என்று கொதித்தார்.
பிறகு சகஜ நிலைக்கு வந்தவராக பேசத் தொடங்கினார்... ‘‘ஒரு பக்கம் அப்படி செஞ்சவங்க மேல எனக்குக் கோபம் வந்தாலும், இன்னொரு பக்கம் இதை நல்ல சகுனமா எடுத்துக்க வேண்டியதுதான். செத்துப் போயிட்டதா ரூமர் வந்தா நல்லதுன்னு சொல்லுவாங்க. எனக்கு நல்லது நடக்கும்னு நானும் நினைச்சுக்கறேன். அந்தக் கும்பலை தேடிப் பிடிச்சி சண்டை போடுறதுக்கு எனக்கு நேரம் இல்லைங்க!’’ என்று பேச்சை முடிக்க நினைத்த பாவனாவிடம், ‘‘இன்னும் சில கேள்விகள் இருக்கே...’’ என்றதும் தயாரானார்.
பாவனா பேசுவதற்கு முன், ‘பாவ்ல(ன)£ நினைவஞ்சலி’ பற்றி விளக்கி விடுகிறோம்...
லண்டன்வாசியான இலங்கைத் தமிழர் ஒருவரிடம், யாழ்ப் பாணத்திலிருந்து பெண் ஒருவர் இன்டர் நெட் மூலமாக அறிமுகமாகி, தொலைபேசியில் பழக்கத்தை வளர்த்திருக்கிறார். ‘‘நடிகை பாவனாவும் நானும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல இருப்போம். நான் கிட்டத்தட்ட பாவனாவின் ஜெராக்ஸ் என்றே சொல்லலாம்’’ என ஆரம்பத்தில் அள்ளி விட்டிருக்கிறார் அந்தப் பெண்.
மெயிலில் தனது ‘பாவனா ஜெராக்ஸ்’ போட்டோவையும் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலாகி கசிந்துருக, டூப்ளிகேட் பாவனாவின் பின்னிருந்த கும்பல் ஒன்று லண்டன் இளைஞரிடம் மீட்டர் சூடாகும் அளவுக்குக் கறந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ‘வர்றேன் உன்னைப் பார்க்க’ என்று லண்டன் இளைஞர் பெட்டி தூக்கிவிட்டார்.
‘இனி என்ன செய்வது’ என்று யோசித்த டூப்ளிகேட் பாவனா கும்பலுக்கு பளிச்சென்று ஒளிர்ந்த ஐடியா பல்புதான், இந்த இறப்பு நாடகம். ‘உதயன்’ என்ற யாழ்ப்பாண தமிழ் நாளிதழில் வந்த கண்ணீர் அஞ்சலி விளம்பரம் ஒன்றில் பாவனா போட்டோவை லேசாக் ‘டச்’ செய்து இடைச் செருகல் செய்து, இணையதளங்களில் அதைப் பரப்பியும் விட்டார்கள். ஃபேஸ்புக் மூலம் இதை லண்டன் ரோமியோவுக்குத் தெரியப்படுத்த, அவர் தேம்ஸ் நதிக்கரையில் சில நாட்கள் தேவதாஸாகத் திரிந்திருக்கிறார்.
பின்பு, ‘இது ஓர் ஏமாற்று வேலை’ என்று நண்பர்கள் மூலம் தெரியவர, ‘‘மாப்பு... வச்சுட்டாய்யா ஆப்பு...’’ என்று வடிவேலு பாணியில் புலம்பிக் கொண்டிருக்கிறார் அந்த இளைஞர்.
பாவனாவுடன் மீண்டும்...
‘‘கோடம்பாக்கம் பக்கம் ஆளையே காணோ மே. சரியான கதை கிடைக்கலதானே?’’‘‘யெஸ், கரெக்டா சொல்லிட்டீங் களேன்னு நான் அசடு வழிய மாட்டேன். நிஜமாவே யாரும் என்னை அப்ரோச் பண்ணல. இதை ஒத்துக்கறதுல எனக்குத் தயக்கம் இல்லை. அதுக்காக சும்மா இல்லைங்க. தமிழ்ல நடிக்கலைன்னாலும் கன்னடம், மலையாளத்துல நடிக்கிறேன். நெக்ஸ்ட் வீக் தொடங்குற ஒரு கன்னடப் படத்துல உபேந்திராவுக்கு ஜோடியா பண்றேன். அப்புறம் அடுத்த மாசம் மலையாளத்துல ஆசிப் அலி ஜோடியா ஒரு படத்துல நடிக்கப்போறேன். இப்படி ஓரளவு பிஸியாதான் இருக்கேன்.’’
‘‘கிரிக்கெட் வீரர் ராஜீவ் பிள்ளையுடன் இணைத்து செய்திகள் வந்துச்சே?’’‘‘அவருக்கும் எனக்கும் இடையில எந்தத் தொடர்பும் இல்லை. செலிபிரிட்டி கிரிக்கெட் மேட்ச் நடந்தப்பதான் அவரை மீட் பண்ணினேன். புதுசா ரெண்டு பேர் மீட் பண்ணும்போது பொதுவா அவங்களப் பத்தி ஷேர் பண்ணிக்கிற மாதிரிதான் எங்க மீட்டிங்கும் அமைஞ்சது. உடனே நான் அவர் கூட சுத்தறதாவும், கல்யாணம் பண்ணிக்கப் போறதாவும் நியூஸ் வந்துடுச்சு. சரி, செலிபிரிட்டி கிரிக்கெட்ல இதெல்லாம் சகஜம்தானேன்னு நானும் சைலன்ட்டா விட்டுட்டேன். இதுல இருந்தே நான் எவ்ளோ அப்டேட்டா இருக்கேன்னு தெரிஞ்சுக்குங்க!’’
தெரிஞ்சுக்கிட்டோம் மேடம்!
- அமலன்