ஏ.சி.திருலோகசந்தரின் பேத்தி இன்று ஹீரோயின்!
நடிக்கப் போறேன்னு சொன்னதும் தாத்தா ‘நோ’ சொன்னார்.
தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகளான எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களை வைத்து ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர் ஏ.சி.திருலோகசந்தர். ஒரு தலைமுறை இடைவெளிக்குப் பிறகு இவருடைய குடும்பத்தில் இருந்து நடிக்க வந்துள்ளார் யாமினி சந்தர். இவர் சண்முகப் பாண்டியன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘படை தலைவன்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்த நிலையில் யாமினியை மறைமலை நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்.
 ‘படை தலைவன்’ படத்திலிருந்து ஆரம்பியுங்கள்..?
முற்றிலும் வித்தியாசமான அனுபவம். ஏனெனில், அது காட்டில் நடக்கும் கதை. வழக்கமான ஹீரோயினுக்கான கதை கிடையாது. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் நாயகியாக முதன்மை வேடத்தில் நடித்தேன். யானை, மான் போன்ற வனவிலங்குகளைச் சுற்றி நடந்த கதை. படமாகவும், படப்பிடிப்பு நடந்தவிதமாகவும் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்துச்சு.
 சண்முகப் பாண்டியன்..?
எளிமையாகப் பழகக் கூடியவர். கேப்டன் சாரின் மகன் என்ற மனோபாவம் இல்லாதவர். தன் அப்பா மாதிரி எளிமையாகப் பழகுவார். செட்ல உள்ள எல்லோரையும் அன்பாக நலம் விசாரிப்பார். ஃப்ரெண்ட்லியாக இருந்தார். இன்னொரு சர்பிரைஸ் சொல்லட்டுமா... நானும் அவரும் ஒரே பள்ளியில்தான் படித்தோம். ஒன்றாகச் சேர்ந்து நடிப்போம்னு கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
 படத்துல என்ன மாதிரி சவால்கள் இருந்துச்சு?
என் போட்டோஸ் பார்த்துவிட்டு இயக்குநர் அன்பு சார் கூப்பிட்டார். ஆடிஷன் வெச்சு செலக்ட் பண்ணினார். காடு பற்றிய கதை என்பதால் அதற்கேற்ப சில சவால்கள் இருக்கும் என்று முன்பே சொல்லியதால் என்னை தயார்படுத்த முடிஞ்சது.
காட்டில் படமாக்கும்போது ஆர்ட்டிஸ்ட் இருக்கும் இடத்தில் கேரவன் பார்க்கிங் பண்ண முடியாது. தொலைவில் நிறுத்தி வெச்சிருப்பாங்க. வெதர் கண்டிஷன் திடீர்னு மாறும். நெனைச்சுப் பார்க்காத நேரத்தில் மழை வரும். அட்டை, வண்டு என பூச்சிகள் தொல்லைகளும் இருக்கும். அதையெல்லாம் சமாளிச்சுப் பண்ணணும். மற்றபடி நடிப்புக்கான சவால்கள் எதுவுமில்லை. தாத்தா மாபெரும் இயக்குநர்... அதுதான் சினிமாவில் நடிக்க ஆர்வத்தை தூண்டுச்சா?
நான் நடிகையாக அதுவும் காரணம். தாத்தாவுடைய பல படங்கள் பார்த்துள்ளேன். தாத்தாவுடன் பழகிய நாட்கள் மனசுல பசுமையாக இருக்கு. எனக்குத் தெரிஞ்சவரை தாத்தாவுடைய பேஷன்தான் எனக்கும் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் மாடலிங், விளம்பரங்கள் பண்ண ஆரம்பிச்சு பிறகுதான் சினிமாவுக்கு வந்தேன். நடிக்கப் போறேன்னு சொன்னதும் தாத்தா ‘நோ’ சொன்னார். மெல்ல தாத்தா, அப்பா, அம்மா என எல்லோரையும் சமாதானப்படுத்திவிட்டுதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான் நடித்த படத்தை தாத்தாவால் பார்க்க முடியவில்லை. தாத்தாவின் ஆன்மா என்னை வாழ்த்தும் என்று நம்புகிறேன். சினிமா பின்புலம் வாய்ப்புகளை எளிதாக்கியுள்ளதா?
கண்டிப்பாக கிடையாது. ‘டைனோசர்’, ‘வால்டர்’, ‘நெஞ்சுக்கு நீதி’ உட்பட இதுவரை நான் பண்ணிய எல்லா படங்களையும் ஆடிஷன்லதான் செலக்ட் பண்ணினார்கள். ஆடிஷன் போகும்போது தாத்தாவுடைய பேத்தின்னு சொல்லமாட்டேன். இங்கு திறமை இருந்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும். ஆடியன்ஸ் நம்மை ஏத்துக்கணும். அவர்கள் பாராட்டு கிடைத்தால்தான் ஒரு லெவலுக்குப் போகமுடியும்.
எந்த ரோலில் நடிக்க ஆர்வமாக உள்ளீர்கள்?
இதுவரை பண்ணியது எல்லாமே சீரியஸ் வேடங்கள். கலகலன்னு வரும் ரெகுலர் ஹீரோயின் ரோல் பண்ணணும்னு ஆசை. பாடல், லவ் சீன், காமெடி சீன் என கமர்ஷியல் ஹீரோயின் ரோல் பண்ணணும். எனக்கு டான்ஸ் தெரியும். அதுமாதிரி கிடைத்தாலும் சந்தோஷம். பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் படங்கள் எப்போது செய்யப் போகிறீர்கள்? அவர்களிடம் வாய்ப்பு கேட்டு உள்ளீர்களா ?
எல்லோருக்கும் இருக்கும் அந்த ஆசை எனக்கும் உண்டு. ‘படை தலைவன்’ படமும் பெரிய பட்ஜெட் படம்தான். அடுத்து பெரிய படம் கிடைச்சிருக்கு. அறிவிப்பு சீக்கிரத்துல வரும். தாத்தாவுக்குப் பிறகு உங்கள் குடும்பத்தில் சினிமாவில் புகழ் பெற்றவர்கள் யார்? உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்?
அப்பாவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி பிசினஸ். அம்மா சில வருடங்களுக்கு முன் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தார். தாத்தாவுக்குப் பிறகு அவருடைய வாரிசுகள் யாருக்கும் சினிமா ஆர்வம் இல்லை. எல்லோரும் டாக்டர், என்ஜினியர் என பல புரஃபஷனில் இருக்கிறார்கள். ஒரு தலைமுறை கடந்து எனக்கு சினிமா ஆர்வம் வந்துச்சு. என்னுடைய அப்பாவைப் பார்த்தால் ஏ.சி.திருலோகசந்தரின் மகனா என்று கேட்பீர்கள். ஏனெனில், அவருக்கு சினிமா டச் துளியும் இருக்காது.
சினிமாவில் நடிக்க அழகு, திறமை, பின்புலம் எது முக்கியம்?
அழகு, திறமை முக்கியம். அத்துடன் ஃபோட்டோஜெனிக் ஃபேஸ் இருக்கணும். குட் லுக், பேட் லுக் பற்றி சொல்லவில்லை. கேமராவுக்கான முகமாக இருக்க வேண்டும். ஆடிஷன்ல அதை எதிர்பார்க்கிறார்கள். மற்றபடி நிறம், ஒல்லியா இருக்கிறோமா, குண்டா இருக்கிறோமா போன்ற பிரச்சனை கிடையாது. அழகு இருந்தாலும் திறமை முதன்மை தகுதியாக பார்க்கப்படும். பின்புலத்துல எனக்கு நம்பிக்கை இல்லை.
தாத்தா இயக்கிய படங்களில் பிடித்த படம் எது?
‘அன்பே வா’. கமர்ஷியல் பட இயக்குநர்களுக்கு அந்தப் படம் இன்ஸ்பிரேஷனாக இருந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். சுந்தர் சி, சார் அவருடைய பேட்டியில் ‘அன்பே வா’ பிடிக்கும்னு சொல்லியிருக்கிறார்.பல படங்களில் எம்ஜிஆர் சாரை ஏழையாக காண்பிச்சிருப்பார்கள். ஆனால், தாத்தா ரிச் பெர்சனாகவும், லவ் ஸ்டோரியாகவும் பண்ணியிருப்பார். அடுத்து சிவாஜி சார் மூன்று வேடங்களில் நடிச்ச ‘தெய்வமகன்’ பிடிக்கும். அப்போது அந்தப் படம் ஆஸ்கர்ல நாமினேட் வரை சென்றதாம். சிவாஜி சாரின் லவ்லி ஆக்ட்டிங்கை அதுல பார்க்கலாம்.
காதல் குறித்து...?
விட்டுக்கொடுத்துப்போவது. நீ பெரிய ஆள், நான் பெரிய ஆள் என்றில்லாமல் எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிஞ்சிருக்கணும். இறுக்கிப் பிடிச்சுப் பண்ணினால் கையைவிட்டுப் போயிடும்னு சொல்வார்கள். காதலர்களுக்கு பரஸ்பர டிரஸ்ட் இருந்தால் ஃப்ரீயா விடணும். கண்டிப்பாக அவங்க உங்ககிட்டதான் வருவாங்க. எந்த இடத்திலும் ஈகோ இருக்கக் கூடாது.
தமிழ் பேசும் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கிறதா?
அவ்வளவாக இல்லை. பலர் வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ளார்கள். அவர்களும் நன்றாகப் பண்ணுகிறார்கள். இதுல பிரிச்சுப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. டேலன்ட் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஷைன் ஆகிறார்கள். தமிழ் பேசும் பெண்கள் வந்தால் நல்லாயிருக்கும். எல்லா மொழியிலும், அந்த மொழி தெரிஞ்சவங்க இருப்பாங்க. எனக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.
செய்தி: எஸ்.ராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|