Top 10ல் 4 இந்தியர்கள்... அதில் மூவர் தமிழர்கள்!
கடந்த வாரம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் முதல்முறையாக நான்கு இந்தியர்கள் டாப் 10ல் இடம்பிடித்து உலகையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளனர்.
இதில் அர்ஜுன் எரிகைசி 3ம் இடமும், குகேஷ் 5ம் இடமும், பிரக்ஞானந்தா 7ம் இடமும், அரவிந்த் சிதம்பரம் 10ம் இடமும் பிடிக்க... அது வரலாற்றுத் தருணமாக மாறியது.
பொதுவாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் ஒரே நாட்டைச் சேர்ந்த இத்தனை வீரர்கள் டாப் 10ல் இடம்பிடிப்பது ரொம்பவே ஆச்சரியமான நிகழ்வு. அது அவ்வளவு சுலபமான விஷயமும் அல்ல.

ஆனால், அந்தச் சாதனையை இந்த இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதில் அர்ஜுன் எரிகைசியைத் தவிர்த்து மற்ற மூன்று பேரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நார்வே கிளாசிக்கல் செஸ் தொடரில் குகேஷ் மூன்றாம் இடம்பிடித்தார். இது செஸ் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், இந்தத் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை அவர் வீழ்த்தியிருந்ததால் குகேஷ்தான் பட்டத்தை வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அவர் அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைய, புள்ளிகள் அடிப்படையில் மூன்றாம் இடம் பெற்றார். இதில் கலந்துகொண்ட அர்ஜுன் எரிகைசி ஐந்தாம் இடம் பிடித்தார். இதேநேரம் ஆர்மேனியாவின் ஜெர்முக் நகரில் ஸ்டீபன் அவக்யன் நினைவு செஸ் தொடர் நடந்தது.
இதில் தமிழகத்தின் அரவிந்த் சாம்பியன் பட்டம் வெல்ல, பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். இதனால் நான்கு கிராண்ட்மாஸ்டர்களும் ஒரே நேரத்தில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் டாப் 10க்குள் வந்துசேர்ந்தனர். அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வரும்வேளையில், அவர்களின் பின்னணி கிராஃபை கொஞ்சம் பார்க்கலாம். அர்ஜுன் எரிகைசி
தெலுங்கானாவில் உள்ள வாராங்கலில் பிறந்தவர் அர்ஜுன் எரிகைசி. அப்பா னிவாஸ் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா ஜோதி.அர்ஜுனுக்கு மூன்று வயது இருக்கும்போதே அவரின் மழலையர் பள்ளி ஆசிரியை அவருக்கு செஸ் விளையாட்டைக் கற்றுத் தரும்படி பெற்றோரிடம் கூறியுள்ளார். காரணம், அர்ஜுனுக்கு நல்ல ஞாபக சக்தியும், கிரகிக்கும் திறனும் இருந்ததுதான்.
பின்னாளில் அவரின் ஆர்வத்தைப் பார்த்த பெற்றோர் அர்ஜுனை ஹனம்கொண்டாவில் உள்ள பி.எஸ் செஸ் அகடமியில் சேர்த்துள்ளனர். அப்போது அர்ஜுனுக்கு 11 வயது. அங்கிருந்து அவரின் செஸ் பயணம் வேகமெடுத்தது.
2018ம் ஆண்டு 14 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றார் அர்ஜுன். அடுத்த ஆறு ஆண்டுகளில் செஸ் விளையாட்டில் இந்தியாவின் வலிமையான இளம் வீரராக உருவெடுத்தார். 2021ம் ஆண்டு அர்ஜுன் எரிகைசிக்கு ஒரு வலுவான ஆண்டாக அமைந்தது. அவர் அந்த ஆண்டு கோல்ட்மணி ஆசிய ரேபிட் ஆஃப் தி சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெயரைப் பெற்றார். பின்னர் 2022ம் ஆண்டு டாடா ஸ்டீல் செஸ் சேலஞ்சரை வென்றார்.
இதேபோல் 28வது அபுதாபி சர்வதேச செஸ் போட்டியிலும் வென்றார். தொடர்ந்து 2022ம் ஆண்டு டிசம்பரில் டாடா ஸ்டீல் செஸ் இந்தியா பிளிட்ஸ் போட்டியிலும் வெற்றி பெற்றார். இதனால் அவரின் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ரேட்டிங் படிப்படியாக உயர்ந்தது.
பின்னர் 2024ம் ஆண்டு ஸ்டீபன் அவக்யன் நினைவு செஸ் தொடரில் பட்டம் வென்றார். இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல பெரிதும் துணை நின்றார். பிறகு லண்டனில் நடந்த டபிள்யு ஆர் செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையையும் வென்றார். இந்நிலையில் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ரேட்டிங்கில் 2800 புள்ளிகளைக் கடந்தார். விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு 2800 புள்ளிகளைக் கடந்த இரண்டாவது இந்தியர் என்ற ஆகச் சிறந்த பெயர் அவருக்குக் கிடைத்தது. இந்நிலையில்தான் தற்போதைய வெற்றிக்குப் பிறகு 2782 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் 21 வயதான அர்ஜுன்.
குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா தமிழகத்தைச் சேர்ந்த குகேஷிற்கும், பிரக்ஞானந்தாவிற்கும் எந்த அறிமுகமும் தேவையில்லை. தற்போது சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் இருவரும் முறையே 5 மற்றும் 7ம் இடங்களில் ஜொலிக்கின்றனர்.
2006ம் ஆண்டு சென்னையில் பிறந்த குகேஷ் ஏழு வயதிலிருந்து செஸ் ஆடி வருபவர். 12 வயதில் அண்டர்-12 பிரிவில் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். தொடர்ந்து அண்டர் 12ல் ஆசிய யூத் சாம்பியன்ஷிப்பின் தனிநபர் பிரிவில் ரேபிட், பிளிட்ஸ், கிளாசிக்கல் ஃபார்மட்களில் தங்கம், குழு பிரிவுகளில் தங்கம் என ஐந்து தங்கங்களைத் தட்டினார்.
பின்னர் 2019ம் ஆண்டு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று இளம் வயதில் கிராண்ட்மாஸ்டராக மிளிர்ந்தார். தொடர்ந்து 2022ல் சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் ஈவென்ட்டில் தங்கம் வெல்ல குகேஷை அனைவரும் உற்று நோக்கினர்.
பிறகு, 2024ம் ஆண்டு நடந்த 45வது செஸ் ஒலிம்பியாட்டிலும் தங்கம் வென்றார். இதை எல்லாவற்றையும்விட மகுடம் அதே 2024ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்றதுதான்.
விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதுமட்டுமல்ல. 18 வயதில் இந்தப் பட்டத்தை வென்று மிகக் குறைந்த வயதில் உலகச் சாம்பியனானவர் குகேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது 2776 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார் குகேஷ்.
இதேபோல் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்தான். 2023ம் ஆண்டு அஜர்பைஜானில் நடந்த செஸ் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அனைவரையும் வியக்கச் செய்தார். யார் இந்த பிரக்ஞானந்தா என எல்லோரையும் பேச வைத்தார். அதில் மேக்னஸ் கார்ல்சனுடன் தோற்று அவர் இரண்டாவது இடம் பிடித்தாலும் 17 வயது பையனான பிரக்ஞானந்தாவை உலகமே உற்று நோக்கியது. பத்து வயதில் இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்றவர், 12 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் எனத் தொடர்ந்து ஜொலித்து வருகிறார் 19 வயதான பிரக்ஞானந்தா. தற்போது அவர் 2767 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளார்.
*அரவிந்த் சிதம்பரம்
மதுரையில் 1999ம் ஆண்டு பிறந்தவர் அரவிந்த் சிதம்பரம். தன்னுடைய மூன்று வயதிேலயே தந்தையை இழந்தார். இந்நிலையில் இன்சூரன்ஸ் முகவரான தாய், அரவிந்த் செஸ் கனவிற்காக அங்கிருந்து சென்னைக்கு நகர்ந்துள்ளார்.
ஏழு வயதிலிருந்து செஸ்ஸை ஆர்வமாக விளையாடி வரும் அரவிந்த் 2013ம் ஆண்டு சென்னையில் நடந்த கிராண்ட்மாஸ்டர் இன்டர்நேஷனல் ஓபனில் நான்கு கிராண்ட்மாஸ்டர்கள், இரண்டு இன்டர்நேஷனல் மாஸ்டர்களை வெற்றி கொண்டார். இதன்பிறகு அவர் 2014ம் ஆண்டு இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டமும், 2015ல் கிராண்ட்மாஸ்டர் பட்டமும் ஜெயித்தார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிகொண்ட அரவிந்த் இப்போது ஸ்டீபன் அவக்யன் நினைவு தொடரில் வெற்றியை ஈட்டி டாப் 10ல் வந்துள்ளார்.தற்போது சர்வதேச செஸ் கூட்டமைப்பின் டாப் 100 வீரர்களின் பட்டியலில் அமெரிக்காவிற்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இதில் இந்திய வீரர்கள் 10 பேர் இருக்கின்றனர்.
டாப் 100 வீராங்கனைகளின் பட்டியலிலும் இந்தியா, சீனாவிற்குப் பிறகு இரண்டாம் இடம் வந்திருக்கிறது. இதில் டாப் 100க்குள் 9 இந்திய வீராங்கனைகள் ஜொலிக்கின்றனர்.
இதேபோல் டாப் ஜூனியர் பிரிவில் என்றும் எவர்கிரீனாக இந்தியா ஜொலிக்கிறது.
இதில் டாப் 100 பேர்களில் 20 பேர் இந்தியர்கள். டாப் கேர்ள்ஸ் பிரிவில், சிறந்த 100 வீராங்கனைகளில் 10 பேர் இந்திய வீராங்கனைகள் ஆவர். இப்படியாக உலக அளவில் செஸ் விளையாட்டில் ஆதிக்கத்தைத் திறம்பட செலுத்தி வருகிறது இந்தியா.
பேராச்சி கண்ணன்
|