சினிமா பின்புலம் மனஅழுத்தத்தை கொடுக்கும்!



‘‘சினிமாவில் இது எனக்கு 25 வது வருடம். இந்தப் பயணத்தில் பல வெற்றி, தோல்வி கள் உண்டு. இப்போது ‘அக்யூஸ்ட்’ செய்துள்ளேன். பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படமும் பேசப்படும் என்ற நம்பிக்கை உள்ளது...’’ உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் உதயா.  

இது க்ரைம் ஸ்டோரியா?

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதை. கமர்ஷியல் கதைக்கான அமசங்களும் இருக்கும். நான் செய்துள்ள படங்களில் இதுதான் பெரிய பட்ஜெட் படம். பஸ் ஃபைட்டுக்காக மட்டுமே ஒரு கோடி செலவு பண்ணினோம். பஸ்சை விலைக்கு வாங்கி 12 நாள் ஷூட் நடத்தினோம். கதைக்கும் அந்த ஆக்‌ஷன் காட்சி தேவைப்பட்டுச்சு.

‘அக்யூஸ்ட்’ என்பது ஒரு சிஸ்டம். அக்யூஸ்ட்ன்னு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லோருமே குற்றவாளிகளா என்று கேட்டால் அப்படிச் சொல்ல முடியாது. உண்மையான அக்யூஸ்ட் யார் என்ற கோணத்தில் கதை பயணமாகும். நான்கு கதாபாத்திரங்களை  மையமாக வெச்சு திரைக்கதை எழுதப்பட்டிருக்கு. புழல் சிறையிலிருந்து  சேலம் சிறைக்கு அக்யூஸ்ட் அழைத்துச் செல்லப்படுகிறார். அந்தப் பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யங்களை கமர்ஷியல் சினிமாவாக சொல்லியுள்ளோம்.

உங்களுக்கு ஜோடி யார்?

ஜான்விகா. திறமையான ஆர்ட்டிஸ்ட். அஜ்மல் போலீஸ் ஆபீசராக வர்றார். ‘கோ’ படத்தில் அஜ்மல் நடிப்பு மிரட்டலாக இருந்துச்சு. இந்தப் படத்திலும் அந்த அட்டகாசம் தொடரும்படி சிறப்பாக நடித்துள்ளார். யோகிபாபு முக்கியமான கேரக்டர் செய்துள்ளார். அவர் வரும் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதமாக இருக்கும். பிரபுசாலமன் சார் கெளரவ வேடத்துல வர்றார். வில்லனாக பிரபல கன்னட நடிகர் பிரபாகர் நடிக்கிறார். 

‘ஓ மரியா...’ பாடல் புகழ் டேனி இதில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.நரேன் பாலகுமார் மியூசிக். ‘உத்தரவு மகாராஜா’, ‘நிழற்குடை’ போன்ற படங்கள் பண்ணியவர். 3 பாடல்கள். ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள பாடலுக்கு பல மில்லியன் வியூவ்ஸ் கிடைச்சிருக்கு. பிரியாணிக்காக ஒரு பாடல் இருக்கு. அந்தப் பாடலை வெங்கட்பிரபு, பிரேம்ஜி பாடியுள்ளார்கள்.

மருதநாயகம் கேமரா கவனிக்கிறார். நீரவ்ஷாவின் மாணவர். அதை ஃபிரேம் பை ஃபிரேம் ப்ரூவ் பண்ணியிருக்கிறார். 4 ஃபைட். சில்வா மாஸ்டர் பிரம்மாண்டமாக கம்போஸ் செய்து கொடுத்தார். என்னுடன் சேர்ந்து பன்னீர்செல்வம், தங்கவேல் ஆகியோர் தயாரித்துள்ளார்கள்.பிரபு நிவாஸ் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களம் தேவைன்னு இன்ஸ்ட்டாகிராமில் விளம்பரம் கொடுத்தேன். அதைப் பார்த்து விட்டு இயக்குநர் பிரபு நிவாஸ் பேசினார்.

அடிப்படையில் அவர் டான்ஸ் மாஸ்டர். 500 படங்களுக்கு மேல் ஒர்க் பண்ணியுள்ளார். கன்னடத்தில் சில படங்கள் செய்துள்ளார். அது எல்லாமே சூப்பர்ஹிட். என்னிடம் அவர் சொன்ன கதை  பிடிச்சிருந்துச்சு.

நீண்ட இடைவெளி ஏன்?

‘மாநாடு’ படத்துல கெஸ்ட் ரோல் பண்ணினேன். சினிமாவில் இடைவெளியை தவிர்க்க முடியாது. ஆனாலும் சினிமாவில் 25 வருஷமாகப் பயணிக்கிறேன். வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைச்சிருக்கு. 

என்னுடைய பேஷன் சினிமா. அதுதான் என்னை தளர்ந்துவிடாமல் வழிநடத்தியது. சினிமாவை நேசித்ததால் அவமானங்களைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னுடைய இந்தப் பயணத்தில் அப்பா, தம்பி தோள்கொடுக்க தயாராக இருந்தாலும் என்னுடைய தனிப்பட்ட முயற்சியில்தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.

சினிமா பின்புலம் அறிமுகத்துக்குத்தான் பலமாக இருக்கும். அதுவே நாளடைவில் மன அழுத்தத்தைக்  கொடுக்கும். அது எப்படி என்றால் ஒரு வீட்டில் ஒருவர் பெரிய உயரத்திலும் இன்னொருவர் அந்த இடத்தில் இல்லாதபோதும் அது கடினமான சுமையாக மாறும்.தனிமனிதனாக ஒவ்வொரு செங்கல்லையும் நானாக எடுத்துவைத்து இவ்வளது தூரம் வந்துள்ளேன். அது வலியும், வேதனையும் மிகுந்த போராட்டம்.

உதயா என்றால் நல்ல படம் பண்ணுவார் என்ற பெயர் இருக்கு. ‘ரா ரா’ என்ற படம் நடித்தேன். அது திருக்குறள் தொடர்புடைய படம். நான் நடித்த படங்களாக இருந்தாலும் சரி, தயாரித்த படங்களாக இருந்தாலும் சரி சிறந்த படங்களாகவே இருந்துள்ளன.

நான் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். சில படங்கள் வெளிவராமல் இருந்துள்ளன. அதையெல்லாம் கடந்து தொழிலை நேசிக்கும்போது, என்றாவது ஒரு நாள் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எஸ்.ராஜா