திவ்யா & ஆனந்த் = DNA...
அதர்வா முரளி ஓபன் டாக்
‘‘எனக்கு நானே ரிஃப்ரெஷ்மென்ட் கொடுத்துக்க நினைச்சேன். அதனால்தான் இந்த இடைவெளி. இதோ தொடர்ந்து இந்த வருடம் படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கு...’’ உற்சாகமாக பேசத் துவங்கினார் அதர்வா. ‘டி என் ஏ’, ‘பராசக்தி’, ‘இதயம் முரளி’, ‘ருக்மணி வண்டி வருது’, ‘தணல்’ உட்பட அரை டஜன் படங்களுக்கு மேல் இப்பொழுது அதர்வா பிசி.
 ‘டி.என்.ஏ’... எதனால் இந்தத் தலைப்பு?
Divya and Anand என்பதன் சுருக்கம். அதாவது என்னுடைய கேரக்டர் மற்றும் நிமிஷா சஜயன் கேரக்டரின் முதல் எழுத்துகள்தான் படத்தின் டைட்டில். சமூகத்தால நிராகரிக்கப்பட்ட ரெண்டு பேர் ஒருவருக்கொருவர் துணையா மாறும்போது என்னென்ன பிரச்னைகள் வருது... அதைச் சார்ந்து நிகழும் உணர்வுக் கலவைதான் படம்.
 இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்..?
அவருக்கு இருக்கிற திறமைக்கு ஏன் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி எடுத்துக்கிறார்னு தெரியல. ஆனால், அந்த இடைவேளைதான் வித்தியாசமான கதைகள் உருவாக்க காரணமா இருக்குன்னு நினைக்கிறேன். எந்தக் காட்சியும் ஏதோ கடந்து போகணும்னு எடுக்கவே மாட்டார். அவருடைய படங்கள் அத்தனையிலும் எமோஷன்ஸ் அவ்வளவு இருக்கும்.
ரொம்ப சிக்கலான கதைகளைத்தான் சொல்லுவார். அவருடைய படங்களிலேயே ‘டிஎன்ஏ’ எக்ஸ்ட்ரீம் லெவல் எமோஷனல் படமாக இருக்கும். திரைக்கதை, இயக்கம் இதையெல்லாம் தாண்டி அவர்கிட்ட மேனேஜிங் ரொம்ப நல்லா இருக்கும். கார்ப்பரேட் பின்னணியில் இருந்து வந்ததாலேயே எதிலும் ஒரு தெளிவான திட்டமிடலை அவர்கிட்ட பார்த்திருக்கேன்; பார்க்கறேன். உங்க கோ - ஸ்டார் நிமிஷா சஜயன்..?
அவங்க கூட ஸ்க்ரீன் ஷேரிங் ரொம்ப சவாலா இருக்கும். கொஞ்சம் அசந்தா மொத்த ஆடியன்சையும் தன் பக்கம் திருப்பிடுவாங்க. அதனால் முடிஞ்ச வரைக்கும் நமக்கான ஸ்க்ரீன் டைம் கிடைக்கும் போது பயன்படுத்திக்கணும்.
ரமேஷ் திலக் கூட ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடிச்சேன். இப்போதான் திரும்ப இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அவருடைய கேரக்டர் என் கூடவே ட்ராவல் ஆகும். அவர் இல்லாமல் பாலாஜி சக்திவேல் சார், சுப்பிரமணியம் சிவா சார், ரித்விகா, சேத்தன் சார் நடிச்சிருக்காங்க. ஐந்து இசையமைப்பாளர் ஒரே படத்தில் அறிமுகம்... அதைப் பற்றி சொல்லுங்க..?
இதற்கு முன்னாடி ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில்தான் இந்த மாதிரி ஒரு மொமெண்ட் நடந்தது. மறுபடியும் பல வருடங்கள் கழிச்சு இப்போ இந்தப் படத்தில் நடந்திருக்கு. அஞ்சு பாட்டு. அஞ்சும் வேற வேற ஃபிளேவரில் வித்தியாசமா வந்திருக்கு. ஆக்சுவலி அதை எதிர்பார்த்துதான் நெல்சன் இந்தத் திட்டமே செய்திருக்கார். ஆன்டல் ஆகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சாய்வி, சத்திய பிரகாஷ், சகி சிவா... இந்த அஞ்சு பேருமே அஞ்சு விதமான பேக்ரவுண்டில் இருந்து வந்தவங்க.
படத்துக்கு பின்னணி இசை ஜிப்ரான் சார். பார்த்திபன் ஒளிப்பதிவு, தேசிய விருது புகழ் சாபு ஜோசப் எடிட்டிங். மேக்கிங் ஆகவே இந்தப் படம் எங்கேஜிங்கா போகும். உங்கள் குடும்பத்தில் இருந்து இன்னொரு சினிமா வரவு... அவருக்கு என்ன அட்வைஸ் கொடுத்தீங்க?
யாருக்கும் யாரும் அட்வைஸ் எல்லாம் இப்ப கொடுக்க முடியாது. அதே சமயம் நானும் தம்பி ஆகாஷ் முரளியும் அப்பாவை பார்த்து வளர்ந்தவங்க. அதனால் சினிமாவுக்கு எவ்வளவு உண்மையா இருந்தால் அது நமக்கு என்ன திருப்பிக் கொடுக்கும் அப்படின்னு ரெண்டு பேருக்குமே தெரியும்.
இன்னைக்கு இருக்கிற சினிமாவை புரிஞ்சுக்கவே முடியல, நானே இன்னமும் கத்துக்குற இடத்தில்தான் இருக்கேன். அதனால் எதையும் அப்படியே ஏத்துக்க தயாராக இருக்கணும். அதனால் அட்வைஸ் எல்லாம் யாருக்குமே இங்க கொடுக்க முடியாது. என் தம்பி போலவே விஷ்ணு விஷால் தம்பி ருத்ராவும் இந்த வருடம் அறிமுகமாகறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
கதைகளை இப்போ எப்படி தேர்வு செய்யறீங்க?
கதைதான் எல்லா படங்களுக்கும் மெயின் ஹீரோ. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நேர்மையா கதை சொன்னால் நிச்சயம் நேர்மையான வெற்றி கிடைக்கும். அதைத் தாண்டி என்னுடைய கேரக்டர் எந்த அளவுக்கு என்னை இம்ப்ரஸ் செய்கிறது என்று பார்ப்பேன். எப்போதுமான கதையா இல்லாமல் புதிதான லைனா இருக்கணும். எனக்கு இந்தக் கதையில் என்ன வேலை... இதையெல்லாம் புரிந்து கதைகளை தேர்வு செய்கிறேன்.
இன்னைக்கு மொழிக்கும் தடை கிடையாது, கற்பனைக்கும் தடை கிடையாது. யாரும் எந்தக் கதையையும் எந்த மொழியிலும் எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்.
எந்தக் கதை ஆனாலும் நமக்கு என்ன வேலை... அதை மட்டும் புரிஞ்சு கதையைத் தேர்வு செய்யணும்னு முடிவு செய்து இருக்கேன். உங்க அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க... எல்லாப் படங்களிலும் கெட்டப்பே வித்தியாசமா இருக்க வேண்டிய சவால் இருக்கும் போலவே?!
‘இதயம் முரளி’ படம் முடிஞ்சுடுச்சு. கூடிய சீக்கிரம் வெளியீட்டுக்கான வேலைகளை ஆரம்பிக்கப் போறோம். தொடர்ந்து ‘பராசக்தி’, ‘ருக்குமணி வண்டி வருது’ உள்ளிட்ட படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கு.
எனக்கு சீக்கிரம் தாடியும் சரி... முடியும் சரி வளர்ந்திடும். அதனால் நான் தப்பிச்சிட்டு இருக்கேன். மத்தபடி என்னுடைய கெட்டப் லுக்குக்கு எல்லாமே அந்தந்தப் படத்தின் இயக்குநர்களுக்குதான் கிரெடிட் கொடுக்கணும். முதலில் என்னை வித்யாசமான கெட்டப்களில் அவங்க யோசிச்சு எனக்காக ஒரு கேரக்டர், கதை எழுதுறாங்க எனில் நாம போற பாதை சரியா இருக்குனு அர்த்தம். அதுவே எனக்கு சந்தோஷமா இருக்கு.
‘டிஎன்ஏ’ எப்படிப்பட்ட படமாக இருக்கும்?
கிரைம் ஃபேமிலி டிராமா... சுருக்கமா சொல்லணும்னா குடும்பப் படமாதான் ஆரம்பிக்கும். ஆனால், திரைக்கதை போகப் போக ஒரு க்ரைம் திரில்லரா மாறும். அதற்கிடையில சிக்கலான கதைக்களம்... நிறைய உணர்வுகளை இந்தப் படம் எடுத்து வைக்கும்.
அதிலும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசனைப் பொறுத்தவரை அவருடைய பெண்கள் கதாபாத்திரம் ரொம்ப வலிமையா இருக்கும். அழுத்தமான பெண்ணியமும் பேசும். இந்தப் படமும் அப்படிதான். நிச்சயம் சமூகத்துக்கான படமாகவும் இருக்கும். படம் பார்த்ததும் நான் என்ன சொல்ல வர்றேன்னு எல்லாருக்கும் புரியும்.
ஷாலினி நியூட்டன்
|