இந்தியாவின் சமத்துவ பூமி வேலூர்தான்!



வேலூர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது 16ம் நூற்றாண்டில் பொம்மு நாயக்கரால் (விஜயநகர பேரரசு) கட்டப்பட்ட வேலூர் கோட்டையும், 1830ம் ஆண்டு கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலையும், கோடையில் 110 டிகிரி வெளுத்து வாங்கும் வெயிலும், உலக அளவில் கல்வியில் முன்னணியில் திகழும் விஐடியும்தான். 
ஆனால், தற்போது முக்கிய அம்சமாக, இந்தியாவின் சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் வேலூர் திகழ்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

வேலூர் மாநகரத்தின் மையத்தில் இருப்பது உலகப் புகழ்பெற்ற விஐடி பல்கலைக்கழகமும், நூற்றாண்டைக் கடந்து மருத்துவ சேவையை ஆற்றி வரும் சிஎம்சி (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) மருத்துவமனையும். உலகத்தின் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் விஐடி யுனிவர்சிட்டியில் தங்கி படித்து வருகின்றனர். 
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தங்கள் மாநில / நாடுகளின் பாரம்பரிய உடை அணிந்து வந்து கலாசார விழாவை நடத்துகிறார்கள். சிலர் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்து கொண்டாடுவார்கள்.

இதுபோன்று பல்வேறு நாடு மற்றும் மாநிலங்களில் இருந்து உயர்தர சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு படையெடுக்கின்றனர். இதனால் வேலூர் மாநகரத்தில் பல்வேறு இனம், மொழி பேசுபவர்கள் அதிகமாகத் தங்கியுள்ளனர். இவர்களை மனதில் வைத்து இங்கு வீடுகள் கூட மினி லாட்ஜாக மாறி உள்ளன. சிறிய வாடகை அறைகளுக்கு கடும் கிராக்கி. சிறிய ரூமுக்கு வாடகை குறைந்தது ரூ.3 ஆயிரம் என்கிறார்கள்.

வசதியாக உள்ளவர்கள் தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து சிகிச்சை முடியும் வரை - அதாவது மூன்று மாதம் முதல் ஒரு வருடம் வரை - தங்கிச் செல்கின்றனர். விஷயம் இதுவல்ல. ஆனால், இது சார்ந்ததுதான்!வெளி மாநிலம் / வெளி நாடுகளில் இருந்து இப்படி கல்விக்காகவும் சிகிச்சைக்காகவும் வேலூருக்கு வந்து தங்கியிருக்கிறார்கள் அல்லவா? இவர்களால் எத்தனை நாட்களுக்கு தமிழ்நாட்டு சமையலையே, அதுவும் தினமும் மூன்று வேளையும் சாப்பிட முடியும்?

தனி வீடு எடுத்து தங்குபவர்கள் தாங்களே சமைத்துக் கொள்வார்கள். ஆனால், வசதி குறைந்த அறை வாடகை எடுத்து தங்குபவர்கள் என்ன செய்வார்கள்?

இவர்களை மனதில் வைத்தே வேலூர் வாசிகள், அவர்களது நாடு மற்றும் மாநிலங்களின் சமையலை சிறிய அளவில் செய்ய ஆரம்பித்தார்கள். 

மெஸ் என்னும் அளவுக்கு பெரியதாக இல்லை. என்றாலும் இவர்களைத் தேடி சாப்பிடுவதற்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.விளைவு, கொஞ்சம் கொஞ்சமாக  தனி கடையை வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்கள்.

ஆம். இன்று பீகார் ஹோட்டல், ஆந்திரா மெஸ், ராஜஸ்தான், பஞ்சாபி தாபா ஹோட்டல்கள்... என மொத்த இந்திய மாநிலங்களின் சமையலும் வேலூரில் அணிவகுத்து நிற்கின்றன.
உதாரணமாக பீகார் ஹோட்டலில் குல்கா (அடுப்பில் சுட்டெரிக்கப்படும் சப்பாத்தி), டால்பூரி, டால்பீதா என பல்வேறு உணவுவகைகளும் அதற்கான கிரேவியும் தயார் செய்து
பரிமாறுகிறார்கள்.இது சாம்பிள்தான்.

இப்படித் தான் அனைத்து மாநில ஹோட்டல்களும் படுஜோராக இயங்குகின்றன. இதன் காரணமாகவே அந்தந்த மாநில வாடிக்கையாளர்கள் அந்தந்த ஹோட்டல்களில் வரிசைகட்டி நிற்கின்றனர். ஆனால், எங்கும் எத்தருணத்திலும் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. எனவேதான் சமத்துவம், சமூகநீதியை நிலைநாட்டும் பூமியாக வேலூர் திகழ்கிறது என வெளிமாநிலத்தவர்கள் கூறுகின்றனர்.

கடுகு எண்ணெய் மணம் வீசும் பெங்காலி உணவகங்கள்

மேற்கு வங்கம் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களின் சமையலில் முக்கிய இடம் பெறுவது கடுகு எண்ணெய்தான். இது சமையலில் மட்டுமின்றி, அவர்களின் உடலிலும் மெருகேற்ற பயன்படுத்தப்படுவதுதான் விசேஷம். ஆம், மேற்கு வங்கத்தவர்கள் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் தினமும் தங்கள் உடலில் கடுகு எண்ணெயைப் பூசிக் கொள்கின்றனர். கேட்டால், இது தோலுக்கு சிறந்தது என்கிறார்கள் அவர்கள்.

அதனால்தான் வேலூர் சிஎம்சி அருகில் காந்தி ரோடு, பாபுராவ் தெரு, சுக்கையவாத்தியார் தெரு, மிட்டா அனந்தராவ் தெரு... ஆகியவற்றில் மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலத்தவர்கள் நிரம்பி தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் குடியேறியதால் ‘குட்டி மேற்கு வங்கமாக’ இப்பகுதி திகழ்கிறது.

இந்தப் பகுதியில் உள்ள விடுதிகள் மட்டுமின்றி, மேற்கு வங்கத்தவர்களால் நடத்தப்படும் உணவகங்கள் அனைத்தும் கடுகு எண்ணெய் வாசம் வீசும் பகுதியாகவே மணக்கிறது.
மட்டுமல்ல, ‘குட்டி மேற்கு  வங்கமாக’க் காட்சி தரும் வேலூர் மெயின் பஜாரைச் சுற்றியுள்ள சைதாப்பேட்டை  பகுதியில் அம்மக்களுக்கான உணவகங்கள் மட்டுமின்றி அம்மக்கள் அணியும் ஆடை,  ஆபரணங்கள் விற்கும் கடைகளும் நிரம்பியுள்ளன.

செந்தில்