சிறுகதை - புரிந்த உள்ளங்கள்



‘‘வாடி. ஏன் இவ்வளவு நேரம்?’’ என்று, பொன்னால் மாளிகை அமைத்து வைர மணிகளைப் பதித்து வீண்மீன்களை சரமாக தொங்கவிட்டது போல் மின்விளக்குகளால் அலங்கரித்து மினுங்கிக் கொண்டிருந்த அந்தத் திருமண மண்டபத்தின் முகப்பில் நின்று சந்தோஷமாக வரவேற்றாள் என் தோழி மஞ்சு.
அவள் தங்கையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்தோம். ‘‘சரியான டிராபிக்டி...’’ என்றபடி உள்ளே நுழைந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

முகப்பில் நின்று கொண்டு வந்தவர்களை, ‘‘வாங்க... வாங்க...’’ என்றும் ‘‘ஆவோஜி... ஆவோ...’’ என்றும் வரவேற்றுக் கொண்டிருந்தார் ஒரு வட இந்தியர்.வந்தவர்களை அவரிடமும், அவரிடம் வந்தவர்களையும் உரிய முறை சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தார் மஞ்சுவின் கணவர். எங்களை அவருக்கும், அவருக்கு எங்களையும், ‘‘நண்பர்கள்...’’ என்றும் சொல்லவே முகமன் கூறினோம்.

அப்போது மஞ்சுவிடம் எதுவும் கேட்க முடியாததால் பிறகொருநாள் அவரைப்பற்றி அலைபேசியில் கேட்டபோது அவள் சொன்னதுதான் இந்த உண்மை நிகழ்வு .
‘‘அம்மா! அம்மா!’’ குதித்தபடி வந்தனர் ராஜீவ், ராகவ் இருவரும்.

‘‘என்னடா... எதுக்கு இத்தனை சந்தோஷம்?’’‘‘இந்தத் தடவை பெரிய லீவுக்கு தில்லிக்கு போப் போறமாம். அப்பா சொன்னாங்களே!’’‘‘ஆமாடா கண்ணுங்களா. ஃப்ளைட்ல...’’‘‘இந்தத் தடவை நான்தான் விண்டோ சீட்...’’‘‘போடா ராஜீ. போனதடவ குலு மணாலி போனப்ப நீதான உட்கார்ந்த. இந்தத் தடவ நாந்தான்...’’
‘‘ஏம்மா..!’’

‘‘அதை எல்லாம் பிளைட் ஏறும்போது பாத்துக்கலாம். இப்ப இருந்தே எதுக்கு அடிச்சுக்கறீங்க?!’’

‘‘இல்லையே... இல்லையேன்னு கேட்டதுக்கு நல்ல ரெட்டை வால் பசங்களா குடுத்துட்டாரு கடவுள்...’’ சந்தோஷப் பெருமூச்சு விட்டாள் மஞ்சு. எப்போதும் வீடு துவம்சப்பட்டுக் கொண்டே அமர்க்களமாகத்தான் இருக்கும்.ரகுநந்தன் வங்கியில் வேலை செய்வதால் வருடம் தவறாமல் எதாவது ஒரு இடத்திற்கு சுற்றுலா சென்று விடுவார்கள். இந்தத் தடவை தில்லி செல்வதாக முடிவாகியிருந்தது.

ஒரு வாரத்தில் சொன்னபடி தில்லி வந்தாகி விட்டது. ரெட் போர்ட், ஜும்மா மசூதி, இந்தியா கேட் என்று தினமும் ஒரு இடமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ராஜீவ், ராகவ் இருவரின் குதியலுக்கு அளவே இல்லை என்றாலும் தீராத பஞ்சாயத்து அங்கேயும் நடந்து கொண்டேதான் இருந்தது. அதிக வெய்யில் கூட பாதிக்கவில்லை. எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து பத்து நாட்கள் தீர்ந்து புறப்படும் நாளும் வந்தே விட்டது.

‘‘ஏண்டா... புறப்படறதுக்கு மனசே இல்ல. வருஷம் முழுக்க ஸ்கூல் ஹாலிடேவா இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்...’’ என்றான் ராஜீவ்.‘‘போடா மக்கு. எப்பவும் ஸ்கூல் லீவா இருந்தா எப்படிப் படிப்பயாம்..! பாருங்கம்மா இவன!’’ என்று வழக்கப்படி மஞ்சுவிடம் வந்தான் ராகவ்.

‘‘சரி... சரி. உங்க சண்டையை எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். கிளம்புங்க...’’ என்றபடி சாமான்களை அடுக்கத் தொடங்கினாள் மஞ்சு.‘‘பில் எல்லாம் செட்டில் பண்ணிட்டேன். கிளம்பலாம்...’’ என்றபடி வந்தார் ரகு. கிளம்பினார்கள். 

அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது விமான நிலையம்‌.டாக்ஸி ரெடியாக நின்று கொண்டிருந்தது. குதியாட்டம் போட்டபடி முன் இருக்கையில் ஏறிக் கொண்டார்கள் குழந்தைகள் இருவரும். ஓட்டுநர் வழியில் இருந்த கட்டடங்களை எல்லாம் காட்டியபடி ஆங்கிலத்தில் விளக்கிக் கொண்டே வந்தார்.

ஐந்து கிலோமீட்டர் தொலைவு வந்த போதுதான் அந்த விபரீதம் நடந்தது‌. அவர்களுக்கு முன்னால் சென்றிருந்த அத்தனை வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
திபுதிபுவென்று இந்தியில் எதேதோ கத்தியபடி கும்பலாக ஓடிக் கொண்டிருந்தனர்.

‘‘என்ன இது..?’’‘‘இருங்க சாப்...’’ என்றபடி ஓடினார் ஓட்டுநர்.‘‘சாப்... இங்கு இருந்து தமிழ்நாட்டுக்குச் சென்ற தலைவருக்கு எதோ ஆபத்து நேர்ந்துவிட்டதாம். நடந்தது தமிழ்நாட்டில் என்பதால் தமிழர்களின் மேல் ஆத்திரம் கொண்டு அடிக்கிறார்கள். வண்டிகளுக்கு எல்லாம் கூட தீ வைக்கிறார்கள். ஒரே கலாட்டாவா இருக்கிறது...’’ என்றார் விசாரித்துவிட்டுவந்த ஓட்டுநர்.
‘‘ஐய்யோ... என்னங்க...’’ என்றபடி குழந்தைகளை அணைத்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள் மஞ்சு.

‘‘மாஜி! அழாதீங்க. என் வீடு பக்கத்துலதான் இருக்கு. வாங்க... அங்க போய்த் தங்கிட்டு கலவரம் அடங்குனப்புறம் போலாம்...’’ என்றார் ஓட்டுநர்.‘‘வேற வழியில்லை... ஆபத்தான நேரத்துல வேற வழியில்ல...’’ என்றபடி கொண்டு வந்த லக்கேஜ்களைத் தூக்கிக் கொண்டு, முன்னும் பின்னும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க ஊடே புகுந்து அவர் பின்னால் போனார்கள்.

சின்ன வீடாக இருந்தாலும் தனியாக சாலையில் இருந்து சற்று உள்ளடக்கமாக இருந்தது அந்த அழகான வீடு.

‘‘சுஷ்மா...’’ என்றபடி இந்தியில் கிசுகிசுத்தார் வியப்பாகப் பார்த்த தன் மனைவியிடம்.அவ்வளவுதான். ஓடிவந்து மஞ்சுவின் கைகளைப் பிடித்து, ‘‘ஆவோ தீதி! ஆவோ...’’ என்றபடி குழந்தைகளை அரவணைத்தபடி ரகுவிடமும் முகமன் கூறி உள்ளே கூட்டிக் கொண்டு போனார் சுஷ்மா. பின்னால் வந்த ஓட்டுநர் வேகமாக ஒரு காரியத்தைச் செய்தார். 

கழட்டி விட்டிருந்த செருப்புகளை ஒரு பையில் போட்டு மறைவான ஓரிடத்தில் வைத்தார்.கொஞ்ச நேரத்திலேயே தொலைவில் யாரோ கத்திக்கொண்டே ஓடிவரும் சத்தம் கேட்டது.

‘‘சாப், தீதி... குழந்தைகளோட ரூம்லேயே இருங்க. வெளியே வராதீங்க...’’ என்றவர் வேகமாக வெளியே ஓடினார். அதற்குள் நாலு பேர் கொண்ட அந்தக் கும்பல் வந்துவிட்டது.‘‘மதராஸி... மதராஸி...’’ என்ற குரல்கள் மட்டும் கேட்டன. 

அந்த அறையில் இருந்த சின்ன ஓட்டை வழியாக வெளியே நடப்பது தெளிவாகத் தெரிந்தது.இவர் மறுக்க, மறுக்க அவர்கள் எகிறி எகிறிக் கத்துவது கேட்டது. கடைசியாக மேலே கைகாட்டி தன் கையை சத்தியம் என்பது போல வைத்துச் சொல்லவேதான் அவர்கள் கிளம்பினார்கள்.

‘‘என்னங்க... ப்ராமிஸ் எல்லாம் பண்ணீட்டீங்க!’’ என்ற ரகுவிடம், ‘‘உயிரைக் காக்க எத்தனை பிராமிஸ் வேணும்னாலும் செய்யலாம். கடவுளுக்குத் தெரியும்..’’ என்றார் நெஞ்சில் கை வைத்து.

கண்ணில்நீர்மல்க, நன்றி சொல்லக்கூட முடியாமல் அவரை அணைத்துக் கொண்டார் ரகு.ஒற்றைப் படுக்கை அறை கொண்ட சிறிய வீடுதான். இவர்களுக்கு அவர்கள் படுக்கையறையைத் தந்து அவர்கள் ஹாலில் படுத்துக் கொண்டார்கள்.

இரவு உணவுக்கு ரொட்டியும் பருப்புக் குழம்பும் தந்தார்கள். பசித்த வயிற்றுக்குள் அமுதமாக இறங்கியது உணவு. மனதும் உடலும் அசந்து போக எப்படித் தூங்கினார்கள் என்றே தெரியாமல் உறங்கியவர்களை எழுப்பினான் சுள்ளென்ற தன் கதிர்களால் பகலவன்.

நாசியில் ஏறியது கும்மென்ற அந்த வாசம். என்னவென்று எட்டிப் பார்த்தவளுக்கு குளியலறையைக் காண்பித்தாள் சுஷ்மா. பூரியும் கிழங்குமாக மணத்தது காலைச் சிற்றூண்டி.
அடுத்தடுத்து வந்த நாட்களில் உடன்பிறப்பு போலவே ஆகி விட்டார்கள் நான்கு நாட்களில் சுஷ்மாவும், சந்தீப்பும். 

அதுதான் அந்த ஓட்டுநர் பெயர்.அதற்கப்புறம் எந்தப் பிரச்னையும் வரவில்லை. கலவரக்கார்களும் அடங்கி விட்டனர். காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தனர்.

மொழி தெரியாமல் சைகை மொழியில் பேசினாலும், ராஜீவ், ராகவ் இருவரும், ‘‘ஆண்ட்டி... ஆண்ட்டி...’’ என்று கொள்ளைப் பிரியம் ஆகிவிட்டார்கள் சுஷ்மாவிடம். அவர் சொல்வது அத்தனையும் அத்துபடியாகிவிட்டது இருவருக்கும். முன்புறம் விளையாட இடமும் இருக்கவே நான்கு நாட்கள் பறந்ததே தெரியவில்லை.

கலவரம் அடங்கிவிடவே ஊருக்குப் புறப்பட்டபோது மஞ்சு, சுஷ்மா கண்களில் மட்டும் அல்ல; ரகு ,சந்தீப் கண்களிலும் நீர் ததும்பியது. பிள்ளைகள் இருவரும் சுஷ்மாவைக் கட்டிப் பிடித்து விசும்பவே ஆரம்பித்து விட்டார்கள்.

விமான நிலையத்தில் இறங்கியவுடன் மனம் நிறைய நன்றி சொல்லிவிட்டு, சந்தீப் கையில் பணத்தை வைத்தார் ரகுநந்தன்.

வைத்த பணத்தை அப்படியே எடுத்து, ராஜீவ், ராகவ் கையில் கொடுத்து கண்ணீர் மல்க கன்னங்களில் முத்தமிட்டு விடைபெற்றார் சந்தீப்.‘‘புது வெள்ளை மழை பொழிகின்றது...’’ இனிய ராகத்துடன் அலைபேசி அழைக்கவே, ‘‘அம்மா... மாமா...’’ என்றபடி ஆர்வமாக இந்தியில் பேச ஆரம்பித்தான் ராகவ். 

அவன் பேசப் பேசவே பிடுங்கிப் பேச ஆரம்பித்தான் ராஜீவ்.
ஆமாம். இப்போது பள்ளியில் விருப்பப் பாடமாக இந்தியை எடுத்துப் படித்து அழகாக, அவர்களுடைய மொழியிலேயே சந்தீப் மாமாவுடனும், அத்தையிடமும் பேசுகிறார்கள் இருவரும். மஞ்சுவும் இந்தி வகுப்புக்குச் சென்று தன் தோழியான சுஷ்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

இப்போது அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்குமே உறவு போலவே ஆகிவிட்டார்கள். அது மட்டுமா; சந்தீப், சுஷ்மா இருவருமே கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசுகிறார்கள்.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவர்களை இணைத்ததும், ஆபத்து நேரத்தில் உதவி புரிய வைத்ததும் மனிதம் அன்றி வேறென்ன? புரிந்தவர்களின் மொழி ஒன்றே ஒன்றுதான். அது எப்போதும் ‘அன்பாலான’ மொழி மட்டுமே...சொல்லி முடித்தாள் மஞ்சு.கேட்டுக் கொண்டிருந்த என் கண்களில் நீர் திரண்டு வழியத் தொடங்கியது.

- விஜி முருகநாதன்