சென்னை IITயில் சேருகிறார் அரசு பழங்குடியினர் பள்ளி மாணவி!
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக ஜொலிக்கிறார் ராஜேஸ்வரி. அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ள முதல் மாணவி இவர்.  ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு ஜேஇஇ மெயின்ஸ் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடக்கும் தேர்வில் வெற்றி பெறவேண்டும். 
முதல்கட்டமான ஜேஇஇ மெயின்ஸை கிளியர் செய்தால்தான் இரண்டு கட்டமான அட்வான்ஸ்டுக்குத் தகுதி பெறமுடியும். இவை இரண்டிலும் தேர்ச்சி பெறுவது அவ்வளவு சுலபமானதும் அல்ல. ஜேஇஇ மெயின்ஸை கிளியர் செய்யும் சிலர், அட்வான்ஸ்டு தேர்வில் தோல்வியடைவதும் உண்டு.
ஆனால், இவை இரண்டையும் கிளியர் செய்து வெற்றி வாகை சூடியிருக்கிறார் ராஜேஸ்வரி. அதுமட்டுமல்ல. இதற்கு என்சிஇஆர்டி வெளியிடும் பாடப்புத்தகங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். இதனாலேயே பலரும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்காகத் தனியாக கோச்சிங் செல்வார்கள்.
இதில் ராஜேஸ்வரியோ தமிழக அரசின் பழங்குடி நலத்துறையினர் வழங்கிய ஆன்லைன் பயிற்சி வகுப்பின் மூலமே படித்து வெற்றியை தன்வசமாக்கி இருக்கிறார். இதற்கிடையே அவரின் தந்தை புற்றுநோயால் இறந்துவிட அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வந்து இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
இதனால்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ‘தந்தையை இழந்தாலும் அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் ராஜேஸ்வரியின் சாதனைக்கு சல்யூட்’ எனக் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார். அத்துடன் அவரின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் தமிழக அரசே ஏற்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். தற்போது செங்கல்பட்டு மாவட்டம் குமிழி கிராமத்தில் உள்ள அரசு பழங்குடி நலத்துறையினரின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை எடுத்து வருகிறார் ராஜேஸ்வரி. அவரிடம் பேசினோம். ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு ஆசிரியர்களும், என் குடும்பத்தினரும் தந்த ஊக்கமே காரணம். ஆசிரியர்கள் வழங்கிய பயிற்சியும் வழிகாட்டுதல்களும் சிறப்பானவை...’’ என அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் ராஜேஸ்வரி.
‘‘சொந்த ஊர் கருமந்துறை. சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் இருக்கும் கிராமம் இது. நான் 9 டூ 12 வகுப்பு வரை அங்குள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படிச்சேன்.அப்பா ஆண்டி, டெய்லராக இருந்தார். அம்மா கவிதா இப்ப கூலி வேலைக்குப் போறாங்க. என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். அக்கா ஜெகதீஸ்வரி பி.எஸ்சி வேதியியல் முடிச்சிட்டு சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்றாங்க.
இரண்டாவது அண்ணன் ஸ்ரீகணேஷ். அவர் பி.எஸ்சி கணிதம் முடிச்சிட்டு டெய்லரிங் வேலை செய்றார். அடுத்தது என் தங்கை பரமேஸ்வரி. அவங்க கருமந்துறைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறாங்க. அப்பா எட்டாம் வகுப்பு வரையே படிச்சிருந்தார்.
அவருக்கு நாங்க சிறப்பாகப் படிச்சு, நல்ல வேலைக்குப் போகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, அவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் இறந்திட்டார். அப்ப எல்லோருமே துவண்டு போயிட்டோம்.
பிறகு அம்மாவும், அண்ணனும் நல்லா படிக்கணும்னு ஊக்கப்படுத்தினாங்க. நான் மேல்நிலையில் மேத்ஸ், பயாலஜி எடுத்து படிச்சேன். 11ம் வகுப்பு சேர்ந்ததுமே எஞ்சினியரிங் எடுத்து படிச்சால் நல்லா இருக்கும்னு ஆசிரியர்கள் சொன்னாங்க.
அவங்க ஐஐடி மாதிரி பல உயர்கல்வி நிறுவனங்களைச் சுட்டிக்காட்டினாங்க. அப்படியாக எனக்கு ஐஐடியில் படிக்க ஆசை வந்தது. இதுக்காக பள்ளியில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். இது அரசின் பழங்குடி நலத்துறையினர் சார்பில் நடத்தப்படும் பயிற்சி.
11ம் வகுப்புல இருந்தே ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமாகிடும். பிளஸ் டூ பாடங்களுடன் ஆன்லைன் வகுப்புகளிலும் கவனமாக ஊன்றி படிக்கத் தொடங்கினேன். இந்த ஆன்லைன் வகுப்புகள் தினமும் காலை, மாலைனு ஒரு மணிநேரம் நடக்கும். தமிழ், ஆங்கிலம்னு ரெண்டிலும் சொல்லித் தருவாங்க.
சந்தேகம் வந்தால் எங்க பள்ளி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிஞ்சுப்போம். அதனால், படிப்பதற்கு எளிதாக இருந்தது. அப்படியாக தொடர்ந்து படிச்சு கடந்த ஜனவரி மாசம் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வை கிளியர் பண்ணினேன். மெயின்ஸிற்கு மாநில அரசு புத்தகங்களே போதுமானதாக இருந்தது.
அடுத்து அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தயாராகணும். இதுக்காக என்சிஇஆர்டி புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். ஆசிரியர்கள் தொடர்ந்து உதவினாங்க. இதுக்கிடையில் பிளஸ் டூ தேர்வில் 600க்கு 521 மார்க் வாங்கினேன்.பிறகு ஈரோடு பெருந்துறையில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளிக்குப் போய் அட்வான்ஸ்டு தேர்வுக்குப் பயிற்சி எடுத்தேன்.
இதில் கிளியர் செய்து அகில இந்திய அளவில் பழங்குடியினர் பிரிவில் 417 ரேங்க் வாங்கினேன். இப்ப சென்னை ஐஐடியில் படிக்க இடம் கிடைச்சிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அம்மா, அண்ணன், அக்கா, தங்கச்சினு எல்லோருமே ரொம்ப மகிழ்ச்சி. என்னுடைய மேற்படிப்பு செலவை அரசே ஏற்கும்னு முதல்வர் சொல்லியிருப்பது இன்னும் சந்தோஷமா இருக்கு. முதல்வருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
இப்ப குமிழி பள்ளியில் நான் திறன் மேம்பாட்டு பயிற்சியை எடுத்திட்டு இருக்கேன். அடுத்து சென்னை ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறை எடுத்து படிக்க ஆசைப்படுறேன்...’’ என நம்பிக்கையுடன் நெகிழ்வாகச் சொல்கிறார் ராஜேஸ்வரி.
இதுகுறித்து குமிழியிலுள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேஸ்வரனிடம் பேசினோம். ‘‘இங்க நீட், கிளாட், ஜேஇஇ, நிஃப்ட், ஐஎம்யூ, ஐசிஏஆர்னு பல உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருது. அரசின் பழங்குடி நலத்துறையின் சார்பாக இந்தப் பள்ளியிலிருந்து பயிற்சி அளிக்கிறோம். கடந்த மூன்று மாதங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து பழங்குடியின மாணவ - மாணவிகள் இங்கே பயிற்சி பெற்று வந்தாங்க. அப்படியாக ராஜேஸ்வரிக்கும் பயிற்சி அளிச்சோம். இப்ப அவங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறோம். இது எதுக்காகனா, காலேஜில் சேரும்போது சில பயங்கள், தயக்கங்கள் இருக்கும். குறிப்பாக ஆங்கிலத்தில் உரையாடவோ, மற்றவர்களிடம் தொடர்பு கொள்ளவோ தயக்கங்கள் வரலாம்.
இதற்காகவே இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி. இதன்வழியாக எப்படி நம்பிக்கையுடன் இருக்கணும், சவாலான சூழலை எப்படி எதிர்கொள்ளணும்னு சொல்லித் தர்றோம். இப்ப ராஜேஸ்வரியைத் தொடர்ந்து நிறைய மாணவ - மாணவிகள் இந்தாண்டு உயர்கல்வி நிறுவனத்தில் சேரப் போறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஏன்னா, முன்னாடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வது பழங்குடியின மாணவ - மாணவிகளுக்கு எட்டாக்கனியாக இருந்தது. இப்ப அரசின் முன்னெடுப்பால் அது மாறியிருக்கு. நிறைய பழங்குடியின மாணவ - மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பு அமைஞ்சிருக்கு. அதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் ராஜேஸ்வரி. இது சாதாரண விஷயமல்ல...’’ என முத்தாய்ப்பாக சொல்கிறார் தலைமையாசிரியர் வெங்கடேஸ்வரன்.
பேராச்சி கண்ணன்
|