AI துணையுடன் சீனா உருவாக்கிய பிரம்மாண்ட அணை!



பொதுவாக ஒரு அணையைக் கட்ட வேண்டுமென்றால் குறைந்தது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேவைப்படுவார்கள். இதில் பொறியியல், தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவலக நபர்களை நீக்கிவிட்டு, தொழிலாளர்கள் எனப் பார்த்தால்கூட ஆயிரம் பேர்கள் தேவை.ஆனால், எந்த மனித கைகளுமே இல்லாமல் ஒரு அணையை அட்டகாசமாகக் கட்டியெழுப்பி உள்ளது அண்டை தேசமான சீனா. உலகின் முதல் பொறியியல் சாதனை என வர்ணிக்கப்படும் இந்த அணையை ரோபோக்கள், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் 3டி பிரின்டிங் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டியிருக்கின்றனர்.

சீனாவின் திபெத்திய  பீடபூமியில் இருக்கிறது கிங்காய் மாகாணம். இங்கு மலைகளுக்கு நடுவே ஓடும் மஞ்சள் நதியின் மீதுதான் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யாங்க்யூ அணை கட்டப்பட்டுள்ளது.  இப்படியொரு பிரம்மாண்ட கட்டமைப்பு, மனிதர்கள் இல்லாமல் வெறும் தொழில்நுட்பத்தால் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அதுமட்டுமல்ல. உலகின் உயரமான 3டி பிரின்டட் கட்டமைப்பாகவும் மாறியுள்ளது இந்த யாங்க்யூ அணை. இது 180 மீட்டர் அதாவது சுமார் 590 அடி உயரம் கொண்டது. நீர்மின் நிலையம் அமைக்கவே இவ்வளவு பெரிய கட்டுமானத்தை மேற்கொண்டுள்ளனர்.   

இந்தக் கட்டுமானங்களை ஒவ்வொரு லேயராக 3டி பிரின்ட் ஆப்ஜெக்ட் போல் பார்த்து பார்த்து அமைத்துள்ளனர். புல்டோசர்கள், ரோலர்கள், டிரக் லாரிகள் என அனைத்தும் ஆளில்லாத வாகனங்கள் ஆகும். இவை அனைத்தும் ஏஐதொழில்நுட்பம் வழியே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள், ‘முதலில் இந்தக் கட்டுமானத் தளம் மிகப்பெரிய 3டி பிரின்ட்டராக மாற்றப்பட்டது. பிறகு தளத்தைச் சுற்றிப் பொருட்களை நகர்த்துவது முதல் அணையின் ஒவ்வொரு புதிய லேயரையும் அழுத்தி அதை வலுவானதாகவும் நிலையானதாகவும் மாற்றுவது வரை அனைத்தையும் ஏஐ சிஸ்டமே மையமாக இருந்து மேற்கொண்டது’ என்கின்றனர்.

அதாவது இதில் இயந்திரங்கள் தரும் தரவுகளைக் கொண்டு ஏஐ சிஸ்டம் முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக ஒரு லேயர் முடிந்ததும் ரோபோக்கள், ஏஐக்கு தகவல்களை அனுப்பிவிடும். பின்னர் ஏஐ அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்து கமெண்ட்கள் கொடுக்கும். இப்படியாக அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

அதுமட்டுமல்ல. ஏஐயும், ரோபோக்களும் பாரம்பரிய கட்டுமானத்தில் காணப்படும் பொதுவான பிழைகளையும் குறைத்துள்ளதாகச் சொல்கின்றனர் விஞ்ஞானிகள். உதாரணத்திற்கு லாரி ஓட்டுநர்கள் சில நேரங்களில் தவறான இடத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாய்ப்பு நிகழும். இதனால் நேரம் வீணாகும். இதேபோல ரோலர் ஆபரேட்டர்களும் தவறுதலாக வாகனத்தை இயக்கலாம்.

ஆனால், ஏஐ சிஸ்டம் இப்படியான தவறுகள் எதையும் செய்யவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். மேலும் கட்டுமானத் தளத்தில் மனிதர்கள் யாரும் தேவையில்லை என்பதால், தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய கவலையும் தங்களுக்கு இருக்கவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.

உண்மையில் இதில் துளியும் மனிதர்கள் பணியாற்றவில்லையா? எனக் கேட்கலாம். இருந்தனர்தான். ஆனால், அவர்களின் பணி என்பது அணை கட்டப் பயன்படுத்தப்படும் பொருட்களை வெட்டித் தருவது மட்டுமாக இருந்துள்ளது. மற்றபடி போக்குவரத்தில் தொடங்கி கட்டுமானம் வரை அனைத்தும் ஏஐ உதவியுடன் ஆட்டோமெட்டிக்காக நடந்துள்ளன.  
 
இதனால் ஓய்வில்லாமல் 24x7 என வேலை படுவேகமாக நடக்க, அணை கட்டுமானமும் இரண்டரை ஆண்டுகளில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த யாங்க்யூ அணையின் மூலம் சீனா தனது தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையைத் தீர்க்க ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளதாகப் பெருமைப்படுகின்றனர் நிபுணர்கள்.

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், இளம் தொழிலாளர்கள் குறைவாக இருப்பதாலும் தொழில்துறையை நடத்த இப்படியான ஆட்டோமேஷனைப் பயன்
படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு.தவிர, நீரிலிருந்து பெறப்படும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வடிவமாகும். 

கார்பன் உமிழ்வை குறைக்கும் பொருட்டும் இதுபோன்ற விஷயங்களில் சீனா கவனம் செலுத்துகிறது. தற்போது யாங்க்யூ அணை அதற்கு ஓர் உதாரணமாக இருக்கிறது.

இந்த அணை செயல்பாட்டுக்கு வந்ததும் இங்கிருந்து சுமார் 100 மில்லியன் மக்கள் வசிக்கும் ஹெனான் மாகாணத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 பில்லியன் கிலோவாட் சுத்தமான மின்சாரம் கிடைக்கும். இதில் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஆற்றலை அனுப்புவதற்காக மட்டுமே 1,500 கிலோமீட்டர் உயர் மின்னழுத்த பாதையையும் கட்டியுள்ளது சீனா.

அதுமட்டுமில்லாமல் இனி இந்த முறையை சாலைகள், பாலங்கள் போன்ற பலவகையான கட்டுமானங்களிலும் பயன்படுத்தலாம் என்றும், இது கட்டுமானத்தை வேகமாகவும், பாதுகாப்பானதாகவும், திறன் வாய்ந்ததாகவும் உருவாக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

பேராச்சி கண்ணன்