தினமும் ரூ.5.9 கோடியைத் தானமாக வழங்கும் தொழிலதிபர்!



இதைப் படிச்சுட்டு பக்கம் 60,61க்கு செல்லுங்கள்

கடந்த 2024ம் நிதியாண்டில் அதிகமாக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல் வெளியானது. இதில் ‘ஹெச்சிஎல்’ நிறுவனத்தை உருவாக்கிய ஷிவ் நாடார் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
கடந்த ஐந்து வருடங்களில் மூன்று முறை முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஷிவ் நாடாரின் குடும்பம். 2024ம் நிதியண்டில் மட்டுமே 2,153 கோடி ரூபாயைத் தனது தொண்டு நிறுவனமான ‘ஷிவ் நாடார் பவுண்டேஷன்’ மூலம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார் ஷிவ் நாடார். 

அதாவது, தினமும் 5.9 கோடி ரூபாயை நன்கொடையாகத் தந்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவின் மிகவும் பெருந்தன்மையான கொடையாளர் என்ற சிறப்பையும் தன்வசமாக்கியுள்ளார்.
 
கடந்த 1994ம் வருடம் ஷிவ் நாடார் பவுண்டேஷனை உருவாக்கி, இந்தியா முழுவதும் கல்வி முன்னேற்றத்துக்கான சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தியா முழுவதும் நன்கொடையாளர்களுக்கு ஒரு ரோல் மாடலாகவும் திகழ்கிறார் ஷிவ் நாடார். 

ஷிவ் நாடாருக்குப் பிறகு, அதிக நன்கொடையை வழங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி. இவரது ‘ரிலையன்ஸ் பவுண்டேஷன்’ மூலம் 407 கோடி ரூபாயை நன்கொடையாகத் தந்திருக்கிறார். இந்த தொண்டு நிறுவனம் கல்வி, மருத்துவம், கிராம வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தில் ‘பஜாஜ்’ குடும்பத்தினர் இருக்கின்றனர். 2024ம் நிதியாண்டில் 352 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருக்கின்றனர் ‘பஜாஜ்’ குடும்பத்தினர். இது 2023ம் நிதியாண்டில் வழங்கிய நன்கொடையை விட, 33 சதவீதம் அதிகம். 

இவர்களது நன்கொடை கல்வி, ஹெல்த்கேர், கிராம வளர்ச்சி போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

‘ஆதித்ய பிர்லா குழுமத்’தின் சேர்மனான குமாரமங்கலம் பிர்லா 334 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி நான்காம் இடத்தில் இருக்கிறார். இவரது நன்கொடை ஹெல்த்கேர், கல்வி, உள்கட்டமைப்பு துறைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஐந்தாம் இடத்தில் ‘அதானி குழுமத்’தின் நிறுவனரான கௌதம் அதானி இருக்கிறார். 2024ம் நிதியாண்டில் 330 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் அதானி.
மட்டுமல்ல, ‘INDO -MIM’ நிறுவனத்தின் சேர்மனான கிருஷ்ண சிவுகுலா ஐஐடி மெட்ராஸுக்கு 228 கோடி ரூபாயை நன்கொடையாகத் தந்திருக்கிறார். இவர் ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வரலாற்றில் தனிப்பட்ட ஒரு கல்வி நிறுவனத்துக்கு, ஒரு தனி நபர் அதிகபட்சமாக கொடுத்த நன்கொடை இதுதான். இதன் மூலம் அதிகமாக நன்கொடைகளை அள்ளித்தரும் இந்தியர்களின் பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார் கிருஷ்ண சிவுகுலா. ஒரு வருடத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கிய இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2019ம் வருடம் ஒன்பதாக இருந்தது. இது 2024ம் நிதியாண்டில் 18 ஆக உயர்ந்திருக்கிறது!

த.சக்திவேல்