நீதிபதிகளை பாஜக மிரட்டுகிறது!



சொல்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்

இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (IAMC) என்ற நிறுவனத்தின் சார்பாக கடந்த ஜூன் 6 அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ‘இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியபோதுதான் பிரஷாந்த் பூஷண் இப்படி கூறியிருக்கிறார். 
அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), வருமான வரித்துறை (ஐடி), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் உள்ளூர் போலீஸ் துறை வரை அனைத்து அமைப்புகளையும் கொண்டும் முக்கிய நீதிபதிகளுக்கு, குறிப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வரக்கூடிய நீதிபதிகளுக்கு எதிராக ரகசிய ஆவணங்களை பாஜக அரசு உருவாக்கி வருவதாகவும்; இதில் நீதிபதிகளுக்கு எதிராக ஏதேனும் கண்டறியப்பட்டால் அதனை நீதிபதிகளை மிரட்டுவதற்கு பாஜக அரசு பயன்படுத்துகிறது எனவும் பிரஷாந்த் பூஷண் அம்பலப்படுத்தியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

‘நீங்கள் எங்கள் வழியில் செல்லவில்லை என்றால், நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம் அல்லது உங்கள் பிள்ளைகளை சிறையில் அடைப்போம்’ என்று நீதிபதிகளிடம் கூறப்பட்டதாகவும், ‘இது வதந்தி அல்ல, இதுதான் நடக்கிறது’ என்றும் பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். 

அத்துடன், பாஜக அரசாங்கம் நீதித்துறை நியமனங்கள் தொடர்பான சட்ட விதிமுறைகளை மீறும் அதேவேளையில், உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் பிரஷாந்த் பூஷண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“துரதிர்ஷ்டவசமாக, உச்சநீதிமன்றமும் அதன் நீதிபதிகளும் அவர்களின் அவமதிப்புக்கு எதிராக விசாரிக்கத் துணிவதில்லை. இதன் விளைவாக, நீதிமன்றத்தின் கொலீஜியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுயாதீன நீதிபதிகளின் தேர்வை அரசாங்கத்தால் தடுக்க முடிந்தது. குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த நீதிபதிகளின் தேர்வை தடுத்துள்ளது. 

கொலீஜியம் அவர்களின் பெயர்களை மீண்டும் வலியுறுத்திய போதும்கூட சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்’ என தன் உரையில் பிரஷாந்த் பூஷண் குறிப்பிட்டுள்ளார்.

‘நீதித்துறை மட்டுமின்றி கடந்த பத்து ஆண்டுகளில், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் ‘ஆம்-மேன்’ அமைப்பாக மாறிவிட்டது; தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அரசாங்கத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்வதை நிறுத்திவிட்டது, தணிக்கைகள் முன்பு இருந்ததை விட நான்கில் ஒரு பங்கிற்குக் குறைந்துவிட்டன; அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி, என்ஐஏ, போலீஸ் போன்ற அமைப்புகள் பாஜக அரசாங்கத்தின் கருவிகளாக மாறிவிட்டன...

பிரதான ஊடகங்கள் பெருமளவில் சமரசம் செய்து கொண்டவையே; பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவை எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிரானவை; அவர்கள் பாஜக-வில் இணைந்தால் அவர்களுக்கு எதிரான வழக்குகள் உடனடியாகக் கைவிடப்படும்...

தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில், பாஜக மட்டும் பாதிக்கும் மேற்பட்டவற்றை (8,000 கோடி ரூபாய்க்கு மேல்) பெற்றுள்ளது...’ என இந்தியாவின் அனைத்து அமைப்புகளின் அதிகாரங்களும் பறிக்கப்பட்டுவிட்டதை பிரஷாந்த் பூஷண் தனது உரையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

பிரஷாந்த் பூஷணின் இந்தப் பேச்சை பாஜக வட்டாரங்கள் மறுத்துள்ளன. என்றாலும் அமெரிக்காவில் அவர் நிகழ்த்தியுள்ள உரை பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது என்பது மட்டும் உண்மை.

கபிலன்