நேற்று போலீஸ் ஸ்டேஷன்... இன்று கஃபே..!
சிரபுஞ்சி என்றதும் மழைதான் நம் எல்லோர் மனங்களிலும் நிழலாடும். ஏனெனில், இந்தியாவில் அதிக மழை பெய்யும் ஊர் அது. ஆனால், இப்போது ஒரு உணவகத்தால் சிரபுஞ்சி கவனம் பெற்றுள்ளது.ஆம். அதன்பெயர், ‘சொஹ்ரா 1885’. ‘சொஹ்ரா’ என்பது சிரபுஞ்சியின் தற்போதைய அதிகாரபூர்வ பெயர்.  2007ம் ஆண்டு இந்தப் பெயர் மாற்றம் நடந்தது. அது தனிக்கதை. சரி, அதென்ன 1885? இதுதான் இந்தக் கஃபேயின் வரலாற்றைச் சொல்லும் முக்கியமான அம்சம். இந்தக் கஃபே இருக்கும் கட்டடம் 1885ம் ஆண்டு நிறுவப்பட்டது.  அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான இந்தக் கட்டடம் ஒரு பயங்கரமான தடுப்புக் காவல் மையமாக செயல்பட்டுள்ளது. இங்கே குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டு கடுமையாக நடத்தப்பட்டுள்ளனர்.
பின்னர் இந்தக் கட்டடம் போலீஸ் ஸ்டேஷனாக மாறியது. இப்போது கஃபேயாக காட்சியளிக்கிறது. 140 ஆண்டுகள்பழமை வாய்ந்த இந்தக் கட்டடம் மேகாலயா மாநிலத்திலேயே மிகவும் பழமையான ஒன்று. இந்தக் கஃபே, சிறைச்சாலைக்குள் சாப்பிடும் அனுபவத்தைத் தருவதாகச் சொல்கின்றனர் சொஹ்ரா மக்கள்.
ஆனால், பரிமாறப்படும் உணவுகள் சிறைச்சாலையில் தரப்படும் உணவைப் போலல்ல என வேடிக்கையாகக் குறிப்பிடுகின்றனர்! இந்தப் பழமையான கட்டடத்தை ஒரு கஃபேயாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது மாவட்ட காவல்துறைதான். அங்குள்ள கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருக்கும் விவேக் சைம் என்பவர்தான் இதற்கான முதல் விதையைத் தூவியவர்.
அவரே பழமையான கட்டடத்தை அப்படியே விட்டுவிடாமல் அதில் கஃபே கொண்டு வரும் கருத்தை முன்மொழிந்தவர். அவர் இந்தப் பகுதியில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய போதே இந்த யோசனையை முன்வைத்துள்ளார். அப்போது மேகாலயா மாநில அரசு புதிய காவல் நிலையத்தை கட்ட முடிவு செய்தது.
இந்நிலையில்தான் இந்தப் பழமையான கட்டடத்தை உணவகமாக மாற்றும் கருத்தை அவர் கூறியுள்ளார். ‘‘இதுபோன்ற பழமையான வரலாற்றைக் கொண்ட கட்டடங்கள் மேகாலயா மாநிலத்தில் அதிகளவில் இல்லை. அதனால், இந்தப் பாரம்பரிய காவல்நிலையத்தில் ஏதாவது செய்ய விரும்பினேன். அது உணவகமாக மாற்றும் எண்ணத்தை உருவாக்கியது...’’ என்கிறார் விவேக் சைம். இந்த கஃபேயில் இருந்து கிடைக்கும் லாபம் காவல்துறை நலனுக்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது இந்தக் கஃபேயை இளம் தொழில்முனைவோரான நஃபி நோங்ரம் என்பவர் ஏற்று நடத்துகிறார். இவர் பழைய காவல் நிலையத்திலிருந்து கிடைத்த பல அரிய பிரிட்டிஷ் கால கலைப்பொருட்களைக் கொண்டு இந்தக் கஃபேயை மறுசீரமைப்பு செய்துள்ளார்.
தவிர காவல் நிலையத்தின் சுவர்களும், தரைகளும் நல்ல நிலையில் இருந்ததால் அப்படியே விட்டுவிட்டு மற்றவற்றை பாதுகாப்புக் கருதி மேம்படுத்தியுள்ளார். தொடர்ந்து இந்த உணவகத்திற்கு ‘சொஹ்ரா 1885’ எனப் பொருத்தமான பெயரையும் இட்டுள்ளார்.முன்பு லாக்அப்பாக இருந்த இடம் இப்போது சாப்பாட்டுக் கூடமாக இருப்பதைக் கண்டு வாடிக்கையாளர்கள் பலரும் ஆச்சரியம் பொங்க ரசிக்கின்றனர்.
சுமார் நூறு பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் வடிவமைக்கபட்டுள்ள இந்த, ‘சொஹ்ரா 1885’ உணவகத்தில் பலவகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன.இதன் மெனுவில் பீட்சா, பாஸ்தா, பர்கர்கள், சாண்ட்விச்கள், மோமோஸ், மெக்சிகன் வெரைட்டிகளுடன், இந்தோ - சீன, தென்னிந்திய, வடஇந்திய உணவு வகைகளும் ருசிக்க வைக்கின்றன. இப்போது உணவுப் பிரியர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு ருசிகரமான உணவகமாக மாறியுள்ளது சிரபுஞ்சியின், ‘சொஹ்ரா 1885’.
ஹரிகுகன்
|