கல்வியறிவில் இந்தியா முன்னேறுகிறது... ஆனால், ஆண் / பெண் விகிதாசாரத்தில் சறுக்குகிறது!



இரண்டு வருடங்களில் - 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 80.9 சதவீதம் என்ற அண்மைய புள்ளிவிபரம் இந்தியர்கள் எல்லோரையும் பெருமை கொள்ள வைத்திருக்கிறது. ஆனால், ஆண் / பெண், நகரம் / கிராமம், மாநிலங்கள் என்று கணக்கிட்டால் பெரிய பாதாளமே தெரிவதாக புள்ளிவிபரத்தை ஆராய்பவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இது இந்தியாவின் கல்விக்கான திட்டமிடலில் பெரிய தோல்வியை எடுத்துக் காண்பிக்கிறது என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.ஒன்றிய அரசின் தேசிய மாதிரி சர்வே அலுவலகம் வருடந்தோறும் இந்தியா குறித்து பல்வேறு சர்வேக்களை செய்து பொதுவெளியில் வெளியிடுகிறது.

அண்மையில் இந்த அலுவலகம் பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே எனும் தலைப்பில் ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டது. அதில்தான் மேலே கண்ட புள்ளிவிபரம் வெளியாகியிருக்கிறது.
ஆனால், பிரதேசம், பாலினம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே இந்தக் கணக்கீட்டை பிரித்து மேய்ந்தால் இந்தியாவின் கல்வித் தரத்தில் ஒரு சமமின்மையைப் பார்க்கமுடியும் என்று சொல்கிறது அந்த அறிக்கை. 

இந்தியாவின் கல்வியறிவு (லிட்டரசி) 80.9 சதவீதம் என்றாலும் மிசோரம்தான் இதில் டாப் ஒன்னாக இருக்கிறது. அங்கே இது 98.2 சதவிகிதம். இரண்டாம் இடம் லட்சத்தீவு. அங்கே 97.3 சதவிகிதம். கேரளாவில் 95.3 சதவிகிதம்.

இத்தோடு இந்தியாவில் 5 பேரில் 4 பேர் கல்வியறிவு உள்ளவர்கள். அதாவது எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். ஆனால், இந்திய அளவில் ஆண், பெண் என எடுத்துக்கொண்டால் 100 ஆண்கள் கல்வியறிவு உள்ளவர்கள் என்றால் பெண்கள் வெறும் 87 பேர்தான்.

சரி... இது மாநில அளவில் எப்படி மோசமாக இருக்கிறது?

ராஜஸ்தானில் கல்வியறிவு உடைய ஆண்கள் 83.6 சதவிகிதம் என்றால் பெண்கள் 61.8 சதவிகிதம்தான். இதிலும் மத்தியப் பிரதேசத்தில் பெண்கள் கல்வியறிவு வெறும் 62.6 சதவிகிதம்தான்.

அதேபோல் இந்திய அளவில் நகரத்தில் 88.9 சதவிகிதம், கிராமத்தில் 77.5 சதவிகிதம் என வித்தியாசமிருக்கிறது. மாநில அளவில் மத்தியப் பிரதேசத்தில் நகரம் 85.7 சதவிகிதம், கிராமம் 71.6 சதவிகிதம்; பீகாரில் நகரம் 83.2 சதவிகிதம், கிராமம் 72.1 சதவிகிதம் என ஆண் - பெண் கல்வியறிவில் வித்தியாசமிருக்கிறது.

மோசமான பள்ளிக் கட்டடம், ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிகளுக்கான அரசுகளின் குறைந்த முதலீடு, அத்தோடு வயதுக்கு வந்த பெண்களை திருமணம் செய்து வைத்தல்... உள்ளிட்டவை எல்லாம் பெண் கல்வியில் வடமாநிலங்களில் மண்ணை அள்ளிப் போட்டு வருகின்றன. எல்லா நாடுகளிலுமே கல்வி என்பது அடிப்படை உரிமையாக பார்க்கப்படுகிறது. 

அதற்கேற்ப அரசுகளும் திட்டங்கள் தீட்டுகின்றன. ஆனால், இந்தியாவில்தான் இதுபோன்ற பலவித பிரிவினைகளால் கல்வி பலதரப்புக்கும் போய்ச் சேராமல் இருக்கிறது. கல்வி இல்லா நாடு பாழ் என்பதை வடநாட்டுக் கல்வியாளர்கள் உணரும் காலம் விரைவில் வரும் என்று நம்புவோம்.

டி.ரஞ்சித்