பூமி மூழ்குகிறதா..?



ம்ஹும். இது ஹாலிவுட் படமல்ல. ஆங்கில வெகுஜன நாவலின் களமும் அல்ல. உலக மக்களை ஹார்ட் அட்டாக்கில் உறைய வைத்திருக்கும் நிஜம் இது.பனி உருகுவது தொடர்பாக நார்வே நாட்டின் ‘NORCE’ எனும் ஆராய்ச்சி அமைப்பு, பிரிட்டனின் ‘நார்தம்ப்ரியா’ பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் ‘போட்ஸ்டாம்’ பல்கலைக்கழகம் ஆகியவை தொடர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தன. இந்த ஆய்வில்தான் உலகம் ஆபத்தில் இருக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது.

அண்டார்டிகா பகுதியில் பனி உருகி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதற்கு ஓர் அளவு இருக்கிறது. அதைத் தாண்டினால், மீண்டும் என்ன செய்தாலும் பனி பழைய நிலைமைக்கு வராது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. 
அப்படி மட்டும் நடந்தால் பூமியை காப்பாற்றவே முடியாது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மட்டுமல்லாது இந்த லிமிட்டுக்கு மிக நெருக்கமாக நாம் வந்துவிட்டோம் என்றும் அவர்கள் ரெட் அலர்ட் அலாரத்தை ஒலிக்கவிட்டிருக்கிறார்கள்.

பூமி வெப்பமடைகிறது. காரணம் கார்பன் வெளியேற்றம்தான். பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களை அதிக அளவு பயன்படுத்துவதால்தான் கார்பன் அதிக அளவில் வெளியேறுகிறது. மட்டுமல்லாது தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகையும் இதற்கு முக்கியமான காரணம்.இதனால் பூமியின் வெப்பநிலை இயல்பான அளவிலிருந்து அதிகரித்திருக்கிறது. வெப்பம், துருவப் பகுதியில் உள்ள பனிப் பாறைகளை உருக்கி வருகிறது.

இவையெல்லாம் ஏற்கனவே பல அறிஞர்களும் விஞ்ஞானிகளும் கூறி வரும் விஷயங்கள். மட்டுமல்ல, இப்படியே நடந்தால் சென்னை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விஜயவாடா, மும்பை, கொல்கத்தா என கடலோரப் பகுதிகள் மூழ்கிவிடும் என்றெல்லாம் சில காலமாகவே விஞ்ஞானிகள் சொல்லி வருகிறார்கள்.இதனை சரி செய்ய, வெப்பநிலையை கன்ட்ரோல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மீண்டும் பூமி இயல்பான வெப்பநிலைக்குத் திரும்பி, பனியும் மீண்டும் உருவாகும்.

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பனி உருகுவதை ஓரளவுக்கு மட்டுமே அனுமதிக்க முடியும். இதற்கும் ஓர் எல்லைக் கோடு இருக்கிறது. இதனைத் தாண்டிவிட்டால் நாம் எவ்வளவு முயன்றாலும் பனி மீண்டும் உருவாகாது. 

இப்போது... இந்த நொடியில்... இக்கணத்தில் நாம் இந்த எல்லைக்கு மிக மிக அருகில் இருக்கிறோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.எல்லையைத் தாண்டினால் பிரச்னைதான். உதாரணத்திற்கு ஆய்வாளர்கள் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அதாவது, அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறையில் ஒரு சிறிய பகுதி உருகுகிறது என்றால் என்ன நடக்கும் தெரியுமா?

அது உலகம் முழுவதும் சுமார் 4மீ உயரத்திற்கு கடல் மட்டத்தை அதிகரிக்கும். சென்னையில் இப்படி நடந்தால் மெரினா பீச் என ஒன்று இருக்காது. நீலாங்கரை, அடையாரும் கடலில் மூழகும். சென்னையின் வடிகால் அமைப்புகள் மூலமாக, ஊருக்குள் கடல்நீர் புகும். 

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழியும்.இப்படியெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், உடனடியாக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும். இச்சூழலில் முக்கியமான ஒரு விஷயத்தை அறிவது நல்லது.

அது, கார்பன் வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் எவை என்பதுதான்.சீனா - 30%, அமெரிக்கா - 14%, இந்தியா - 7%, ஐரோப்பிய யூனியன் - 6%, ரஷ்யா - 5%
அதாவது இந்த நாடுகள் மட்டும் சுமார் 62% அளவுக்கு கார்பனை உலகளவில் வெளியேற்றுகின்றன. எனவே உடனடியாக இதை கட்டுப்படுத்த வேண்டும். 

அப்படித்தான் மனித குலத்தைக் காப்பாற்ற முடியும் என்கிறது நார்வே நாட்டின் ‘NORCE’ ஆராய்ச்சி அமைப்பு, பிரிட்டனின்  ‘நார்தம்ப்ரியா’ பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் ‘போட்ஸ்டாம்’  பல்கலைக்கழகம் இணைந்து நடத்தி வரும் ஆய்வுகள்.

என்.ஆனந்தி