இன்ஸ்ட்டா to மாடலிங் to சீரியல் to சினிமா!
சின்னத்திரை நேயர்களுக்கு பரிச்சயமான முகம் ரோஷிணி ஹரிப்ரியன். ‘கருடன்’ படத்தில் சினிமா என்ட்ரி கொடுத்த இவர் இப்போது ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தில் நடித்துள்ளார். படத்துக்கு வரவேற்பு கிடைத்த நிலையில் உற்சாகமாக இருக்கிறார்.
 சினிமா நடிகையாக வேண்டும் என்ற ஆசை எப்படி வந்துச்சு?
நான் எம்பிஏ பட்டதாரி. ஐடியில் கை நிறைய சம்பளம் கிடைத்தாலும், அந்த வேலை மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. சொந்தமாக பிசினஸ் பண்ணும் ஐடியாவில் ஜுவல்லரி மேக்கிங் பண்ண ஆரம்பிச்சேன்.  அப்படியே கவனம் மாடலிங் பக்கம் திரும்புச்சு.சொந்தப் பணத்தில் போட்டோ ஷூட் பண்ண ஆரம்பிச்சு அந்த போட்டோக்களை இன்ஸ்ட்டாவில் அப்லோட் பண்ணினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. மாடலிங் பண்ண கூப்பிட்டாங்க. அந்த வெளிச்சம் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துச்சு. தொடர்ந்து பிரபல சீரியல்களில் நடிக்க சான்ஸ் கிடைச்சது. அப்படியே சினிமாவுக்கான கதவுகளும் திறந்துச்சு.  நடிகையாகணும் என்று எந்த இன்டென்ஷனும் இல்லாமல்தான் இந்தத் துறைக்கு வந்தேன். வாய்ப்புகள் வந்தபோது, அதை சந்திக்கணும், புது அனுபவமாக இருக்கும் என்ற எண்ணம்தான் இருந்துச்சு.
 வீட்ல என்ன சொன்னாங்க?
அப்பா என்ஜினியர். அக்காவுக்கு ஐடியில் வேலை. நானும் நிரந்தர வருமானம் வர்ற வேலையில் இருக்கணும்னு விரும்பினாங்க. சினிமாவுல நடிக்கிறேன்னு சொன்னதும் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.
முதல் கேமரா அனுபவம் எப்படி இருந்துச்சு?
பல சீரியல், சினிமா பண்ணியிருந்தாலும் கேமரா முன் நிற்கப்போகிறோம் என்று நினைத்தால், தானாக நடுக்கம் வந்துவிடும். கேமரா முன் நின்ற பிறகு நடுக்கம் காணாமல் போய்விடும். இயக்குநர்கள் வேலை வாங்கும்விதம், சக நடிகர், நடிகைகளின் பெர்ஃபாமன்ஸ் உற்சாகத்தைக் கொடுக்கும். அவர்கள் மாதிரி எப்படி இயல்பாக நடிக்கணும், நடிப்பு தனியா தெரியக்கூடாது என்ற கவனம் இருக்கும்.
‘கருடன்’ல சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி போன்றவர்களிடம் என்ன கத்துக்கிட்டீங்க?
சூரி சாரின் டெடிகேஷன், அன்பு ஆச்சர்யத்தைக் கொடுத்துச்சு. சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு காட்டாம எல்லோரிடமும் சகஜமாக பழகுவார்.சசிகுமார் சார் பெர்ஃபாமன்ஸ்ல தூள் கிளப்புவார். எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் ஜஸ்ட் லைக் தட் எனுமளவுக்கு பிரமாதப்படுத்துவார்.
உன்னி முகுந்தன் சாருக்கு தமிழில் அதுதான் முதல் படம். அவருடைய மலையாளப் படங்களைப் பாத்திருக்கிறேன். சிறந்த நடிகர். மொழி அவருக்கு புதுசு என்பதால் இரண்டு மடங்கு உழைப்புடன் நடிப்பதைப் பார்க்க முடிஞ்சது. ‘மெட்ராஸ் மேட்னி’ பட வாய்ப்பு எப்படி கிடைச்சது?
அப்போது ‘கருடன்’ ரிலீஸ் ஆகவில்லை. புரொடக்ஷன் ஹவுஸில் நெக்ஸ்ட் டோர் கேர்ள் கேரக்டருக்கு ஆர்ட்டிஸ்ட் தேடுகிறார்கள் என்ற தகவலை கேமராமேன் ஆனந்த் சார் சொன்னார்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி சார் லுக் டெஸ்ட் எடுத்தார். முதல் மீட்டிங்லேயே செலக்ட் பண்ணினார்.படம் பார்த்தவர்கள் தீபிகா கேரக்டர் ரொம்ப யதார்த்தமாக இருந்துச்சுன்னு சொன்னார்கள்.
அதற்கு காரணம், அப்பா - மகள் உறவு என்பது வசதி வாய்ப்புகளைத் தாண்டி எமோஷன் என்று வரும்போது எல்லா குடும்பங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆடியன்ஸ் பலர் தங்கள் அப்பாக்களுடன் கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சதுன்னு சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்துச்சு. ஏனெனில், பிற்காலத்தில் என்னுடய ஃபேமிலியில் இந்த மாதிரி ஒரு படம் பண்ணியிருக்கிறேன்னு சொல்லுமளவுக்கு சிறந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.
கேரக்டருக்காக ஹோம் ஒர்க் செய்யும் பழக்கம் உண்டா?
இந்தக் கதையைப் பொறுத்தவரை அது தேவைப்படவில்லை. படப்பிடிப்புக்கு போகும்போது வெறுமையான பேப்பராகத்தான் போனேன். டைரக்டர் கார்த்திகேயன் சார் அப்படிதான் வழிநடத்தினார். காளிவெங்கட் சார் ஆக்டிங் ஸ்டைல் ரொம்ப இயல்பாக இருக்கும். அதை உள்வாங்கி நடிப்பது முக்கியமான விஷயமாக இருந்துச்சு. ஹோம் ஒர்க் பண்ணிட்டுப்போயிருந்தால் அது செயற்கையாக இருந்திருக்கும்.
சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்கும் என்ன வித்தியாசம்?
நிறையவே வித்தியாசம் உண்டு. சின்னத்திரையில் போதியளவுக்கு டைம் இருக்காது. ஒரு நாளில் ஒரு எபிசோட் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். சினிமாவில் ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகள் எடுக்கப் போகிறோம் என்று திட்டமிடல் இருப்பதால் டைம் கிடைக்கும்.
சீரியலில் அவசர கதியில் இயங்க வேண்டிய சூழ்நிலையைத் தவிர்க்க முடியாது. இதைதான் பெரிய வித்தியாசமாகப் பார்க்கிறேன். நடிப்பைப் பொறுத்தவரை சீரியலில் கொஞ்சம் கத்திப் பேசற மாதிரி நடிக்கணும். சினிமாவுல கேரக்டராகவே வாழணும்.
பெண்ணாக நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
ஐடியில் வேலை பார்க்கும்போது நைட் டூட்டி இருக்கும். அங்கு ஈக்குவாலிட்டி இருக்கும் என்பதால் பெண்களுக்கு எந்தச் சலுகையும் இருக்காது. சினிமாவைப் பொறுத்தவரை பாலின ரீதியாக எந்தச் சவாலும் இருந்ததில்லை. ஆர்ட்டிஸ்ட்டாக எனக்கான இடம் எந்தளவுக்கு இருக்கிறது என்ற கோணத்தில்தான் என்னுடைய கவனம் இருந்துள்ளது.
சினிமாவுல என்ன கத்துக்கிட்டீங்க?
எதுவும் நிரந்தரம் இல்லை. எது வேண்டுமானாலும் மாறும். ஒரு நாள் கீழே இருப்போம், ஒரு நாள் மேலே இருப்போம் என்பது முக்கியம் இல்லை. எப்படி பேலன்ஸ் பண்ணிக் கொண்டு போகிறோம் என்பது முக்கியம். இலக்கு முக்கியம் என்பதைவிட அந்த ஜர்னியை என்ஜாய் பண்ணணும்.
சமூக வலைத்தளம் வரமா, சாபமா?
இரண்டுமே. அந்த இடத்திலிருந்துதான் என்னுடைய ப்ரொஃபஷன் ஆரம்பிச்சது. நிறைய போட்டோஸ் அப்லோட் பண்ணியதால்தான் எனக்கு டிவி, சினிமா வாய்ப்பு கிடைச்சது. என்னைப்பொறுத்தவரை அது பெரிய பலம். அந்த மோகம் இப்போது அதுதான் வாழ்க்கை என்ற கட்டத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. நிறையப் பேருக்கு அதுதான் வேலையாகவே இருக்கிறது. அதுல சம்பாதிக்கவும் செய்கிறார்கள். அதுதான் யோசிக்கவும் வைக்கிறது.
ஒருவேளை அந்த தளங்கள் இல்லாமல் போனால் அவர்கள் வருமானம் பாதிக்கப்படும். அளவோடு இருந்தால் பிரச்னையில்லை. சில நேரங்களில் நானே இன்ஸ்ட்டா பக்கம் போகாமல் இருந்திருக்கிறேன். மோசமான விமர்சனங்களையும் சந்திக்க தயாராக இருக்கணும்.
மீண்டும் சின்னத்திரையில் நடிப்பீர்களா?
ஐடியில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். சத்யராஜ் சார், சூரி சார் என்று பிரபல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. இது எனக்கு பெரிய ஆச்சர்யம். அப்படி வாழ்க்கை எனக்கான ஆச்சர்யத்தை தொடர்ந்து கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எஸ்.ராஜா
|