ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈஸி!



இந்தியாவில் எது கடினமான விஷயம் என மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். யோசிக்காமல் வரும் பதில், ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் புக் செய்வதுதான் என்பார்கள்.அந்தளவுக்கு ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது அவ்வளவு எளிதாக இல்லை. 
குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு பலருக்கும் பகல் கனவாக -  சாத்தியமே இல்லாத ஒன்றாக இருக்கிறது என்ற எதார்த்தம்தான். இனி இந்த விஷயம் எல்லாம் கடந்தகாலமாக மாறப்போகிறது.

ஆம். ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் விவகாரத்திலும், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் விவகாரத்திலும் இரண்டு நல்ல விஷயங்களை ரயில்வே செய்திருக்கிறது.
ஒன்று விரைவில் நடக்கப் போகிறது. 

இன்னொன்று ரிசர்வ் வங்கி அனுமதிக்காக காத்திருக்கிறது.இந்தியாவில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பலரும் டிரெய்னில் செல்லவே விரும்புகிறார்கள். ரயிலில் பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும். எந்த அலுப்பும் ஏற்படாது. வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைவரும் நீண்ட தூரப்பயணத்திற்கு ரயில்களைத்தான் தேர்வு செய்கிறார்கள்.

காரணம், ரயில்களில் கழிவறை வசதி, படுக்கை வசதி, ஏசி வசதி உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. ரயில்கள் இந்தியாவில் முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. ஆனால், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது மட்டும் அவ்வளவு எளிதாக இல்லாமல் இருக்கிறது. ஏனெனில் எப்போதுமே வெயிட்டிங் லிஸ்ட் போடும் அளவிற்கு மக்கள் கூட்டம் பல ரயில்களில் அலை மோதுகிறது.இதை பயன்படுத்திக் கொள்ள ஒரு கூட்டமே தயாராக இருக்கிறது. அதுதான் இடைத்தரகர்கள் என்ற நபர்கள்.

பொதுவாக ரயில்களில் பயணம் செய்ய வேண்டுமென்றால் ஐஆர்சிடிசி. மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதில் பொதுமக்கள் பணம் செலுத்தும்போது, பல்வேறு பேமெண்ட் இடைத்தரகர்கள் மூலம்தான் செலுத்தமுடியும் என்ற நிலை இருக்கிறது. 

இனி இது மாறப்போகிறது. யெஸ். போன் பே, பே-டிஎம் ஆகியவை மூலம் பணம் செலுத்த முடியும்.இதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. சுயபண பரிமாற்ற சேவையை வழங்குவதற்கு ஆர்பிஐயிடம் விண்ணப்பம் செய்துள்ளது. அதற்கு முன்னர் கடந்த 2023ம் ஆண்டு இதுபோன்று விண்ணப்பம்
செய்தபோது ரிசர்வ் வங்கி அதனை நிராகரித்துவிட்டது.

ஆனால், இந்த முறை அனுமதி உறுதியாக கிடைக்கும் என்று ஐஆர்சிடிசி. நம்பிக்கையுடன் உள்ளது. அதுவும் இன்னும் மூன்று மாதத்திற்குள் இதற்கு ஆரம்பகட்ட அனுமதி கிடைத்து
விடும் என்றும், உடனே சேவை தொடங்கப்படும் என்றும் ஐஆர்சிடிசி நம்புகிறது.இந்தச் சேவை தொடங்கிவிட்டால் பொதுமக்கள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். மற்ற பேமெண்ட் நுழைவாயில்களை நம்பி இருக்கத் தேவையில்லை. 

மேலும் டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால் பணம் திரும்பப் பெறுதலும் உடனடியாக நடக்கும் என்று ஐஆர்சிடிசி தரப்பு கூறுகிறது.இரண்டாவது நல்ல விஷயம் என்னவென்றால், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இனி இ-ஆதார் கட்டாயமாக உள்ளது.

தற்போதைய நிலையில் புரோக்கர்கள் ஆதிக்கம் காரணமாக தட்கல் டிக்கெட் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. புரோக்கர்கள், சில ரயில்வே பணியாளர்களுடன் கூட்டு சேர்ந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி குவித்து டிக்கெட், சாமானியர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வதாக பேச்சு அடிபடுகிறது.

இதற்கு வலுசேர்ப்பது போல் சரியாக 11 மணிக்கு, இருக்கும் டிக்கெட்டை எடுக்க முயற்சித்தால் தளம் 11.03 வரை சுற்றிக்கொண்டே இருக்கும்.

பேமெண்ட் ஆப்ஷனுக்குள் போகும்போது, வெயிட்டிங் லிஸ்ட் வந்துவிடும். இதற்கு புரோக்கர்களே காரணம் என்ற புகார்கள் உள்ளன. அது எப்படி தளம் சரியாக 11.01 முதல் 11.03 வரை மொத்தமாக முடங்கும் என்று கேள்வி எழுப்பும் மக்கள், ரயில்வே அதிகாரிகள் சிலரின் உதவியுடன் இப்படி டிக்கெட்டுகளை மொத்தமாக எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது.


இந்நிலையில் ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இனி இ-ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐஆர்சிடிசி தளத்தைப் போல், ரயில் நிலையத்தில் புக்கிங் செய்வோருக்கும் இ-ஆதாரை கட்டாயமாக்கினால்தான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நல்லதே நடக்கும் என நம்புவோம்.

ஜான்சி