மாஸ் கிளாஸ் ஹிஸ்டரி இது கிராண்ட் பவனிசம்!



மாஸ், கிளாஸ், பிரம்மாண்டம்... இத்துடன் ஆந்திரஅரசியல் புயல் பவன் கல்யாண்!ஆந்திராவில் பவன் கல்யாண் திரைப்படம் வெளியாகிறது என்றாலே அது ஆந்திர மக்களுக்கு திருவிழா போல். பவனிசம் என கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். 
அப்படியிருக்க அவர் நடித்திருப்பது வரலாற்று திரைப்படமெனில் கேட்கவா வேண்டும்!‘‘பவன் சாருடைய மாஸ் இமேஜ்  ஒருபக்கம்... உண்மையான வரலாறு ஒருபக்கம்... நிஜமாகவே கொஞ்சம் பொறுப்பு அதிகமா இருந்துச்சு...’’ பரபரப்பும், படபடப்பும் ஒருசேர பேசுகிறார் இயக்குநர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா.

காரணம், பவன் கல்யாண் இப்பொழுது நடிகர் மட்டுமல்ல... ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும் கூட. அதனால்தான் இவரது இயக்கத்தில் பவன் நடித்திருக்கும் ‘ஹரிஹர வீர
மல்லு’ ரிலீஸ் குறித்த பரபரப்பிலும் பபடபடப்பிலும் இருக்கிறார்.

துணை முதல்வரை இயக்கிய இயக்குநர்... எப்படி இருக்கு இந்தத் தருணம்?

ஏகப்பட்ட அழுத்தம், நிறைய பொறுப்புகள். அத்தனையும் ஒருசேரதான் இந்தப் படத்தை ஆரம்பிக்கவே செய்தாங்க. இடையில் நிறைய இடைவேளை, காத்திருப்பு. இப்படி படத்தின் முதல் இயக்குநர் மற்றும் கதையாசிரியர் கிரிஷ் ஜகர்லமுடி இடையில் அவருடைய வேலை, அடுத்தடுத்த படங்கள் என அவர் பிஸியாகிட்டார். 
இந்த நிலையில்தான் என்கிட்ட டைரக்‌ஷன் பொறுப்பு வந்துச்சு. என்னால என்ன பெஸ்ட் கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்திருக்கேன். மேலும் சார் கூட ‘குஷி’க்கு பிறகு என் அப்பா ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ‘பங்காரம்’ படம் செய்திருக்கார் பவன் சார்.

அதனால் முன்பிருந்தே அவர் கூட நல்ல நட்பு இருக்கு. அதேபோல் சார் கூட நடிக்கிற அத்தனை காட்சிகளும் ஏற்கனவே ரிகர்சல் பார்த்து வச்சிடுவோம். காரணம், அவருடைய ஆக்டிங் ஸ்கில்ஸ் அவ்வளவு அபாரமானது. அப்படிப்பட்ட ஒரு மனுஷனுடைய நேரத்தை நாம வீணாக்க முடியாது இல்லையா!அதனால் எல்லாமே திட்டமிட்டு அவர் கொடுக்கும் நேரத்தில் செய்து முடித்தோம். அவருடைய ஆபீஸுக்கு எதிரிலேயே ஷூட்டிங் ஸ்பாட் உருவாக்கினோம்.

ஹீரோயிசம் + ஹிஸ்டரி ஒருசேர கலக்கணும்... எப்படி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கீங்க ?

நமக்கெல்லாம் குருநாதர் தலைவர் எம்ஜிஆர்தான். அவருடைய படங்களைப் பார்த்தாலே ஹீரோயிசமும் இருக்கும் வரலாற்றுப் பின்னணியும் இருக்கும். அந்த மாதிரியான ஒரு கமர்சியல் வரலாற்று ஹீரோ படமாக இந்த படம் வந்திருக்கு. அதேபோல் பவன் கல்யாண் சாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் நடிகராக மட்டும்தான் இருப்பார். இத்தனைக்கும் அவரைச் சுற்றி அவ்வளவு அழுத்தம். எப்போதும் துப்பாக்கியுடன் செக்யூரிட்டி வேறு கூடவே இருப்பாங்க.

ஆனால், எதையும் காண்பித்துக் கொள்ளாமல் அவ்வளவு கூலாக நடித்துக் கொடுத்தார். அதிலும் நாம விட்டலாச்சாரியார் படங்கள், ஹாலிவுட்டில் ‘பிரேவ் ஹார்ட்’ போன்ற போர் படங்கள் எல்லாம் பார்த்திருக்கோம். அந்த மாதிரிதான் இந்தப் படத்தை நான் கையாண்டிருக்கேன்.

ஆஸ்கர் புகழ் கீரவாணி இசை... அவருக்கும் உங்களுக்குமான கெமிஸ்ட்ரி பற்றி சொல்லுங்க?

ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். இதற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் சார் கூட நான் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் வேலை செய்திருக்கேன். இப்போ கீரவாணி சார். ரெண்டு ஆஸ்கர் இசையமைப்பாளர்கள் கூட வேலை செய்த ஒரே இயக்குநர் நான்தான். அதை பெருமையா சொல்றேன். ஆரம்பத்தில் எங்க இருவருக்கும் நிறைய விவாதங்கள் நடந்துச்சு. ஆனால், அத்தனையும் படத்துக்கான அக்கறையான பேச்சுவார்த்தைகளா இருந்துச்சு.

பிறகு ரெண்டு பேரும் ஒரே மன நிலைக்கு செட் ஆனதும்... சொன்னால் நம்ப மாட்டீங்க... 48 மணி நேரத்தில் மொத்த படத்துக்கான பாடல்களையும் முடிச்சிட்டோம்.மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு விஷுவல் ட்ரீட் கொடுக்கும். 

100 படங்களுக்கு மேல எடிட் செய்த பிரவீன் கே எல் இந்தப் படத்துக்கு எடிட்டிங் செய்து கொடுத்திருக்கார். காஸ்டியூம் ஐஸ்வர்யா. பத்து நாள் ஷூட்டிங்கிற்கே ரெண்டு மாதங்கள் வேலை செய்யணும். அவ்வளவு வார் உடைகள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ் உடைகள், நகைகள்... பெரிய பொறுப்பு அவங்களுக்கு.

பவன் சார் ஒரு காஸ்ட்யூம் மெயிண்டெயின் செய்வார். அதையும் வரலாற்று ஒரிஜினல் ஸ்டைலையும் மிக்ஸ் செய்தப்போ இன்னும் ஸ்டைலா ஓர் உடை கிடைச்சது. தோட்டா தரணி சார் செட்... மிரட்டிட்டார். இந்த வயதிலும் எப்படியொரு சுறுசுறுப்பான மனிதர்!

தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர்... எது ரொம்ப சுலபமான வேலை?

தயாரிப்பாளர்தான். எந்தப் பொறுப்பும் கிடையாது. பணத்தை மட்டும் கொடுத்துட்டு மேற்பார்வையாளராக இருந்துக்கலாம். அதேபோல் தயாரிப்பாளராக இருந்த காரணம்தான் ஒரு நடிகராகவும் சரி இயக்குநராகவும் சரி பட்ஜெட் பேலன்ஸிங் செய்ய முடிஞ்சது. நாமளே எதை எப்படி செய்தால் எவ்வளவு செலவை குறைக்கலாம்... 

இப்படியான திட்டங்களும் சேர்த்துதான் செய்வேன். அதனால்தான் இவ்வளவு பெரிய படத்தைக் கூட சொன்ன பட்ஜெட்டை விட்டு தாண்டாமல் எடுக்க முடிந்தது. அதிலும் இந்தப் படத்தைப் பொறுத்தவரை அப்பா ஏ.எம்.ரத்னம்தான் தயாரிப்பாளர். மத்த இயக்குநராக இருந்தால் அதிகபட்சம் திட்டுவார். எனக்கெல்லாம் அடியே விழுந்தாலும் ஆச்சரியமில்ல!

நிதி அகர்வால் நாயகி... மற்ற நடிகர்கள்..?

அவங்களுக்கு நான் முதல்ல தேங்க்ஸ் சொல்லணும். இந்தப் படத்தின் வெளியீட்டுக்காகவே வேற எந்தப் படத்திலும் அவங்க ஒப்பந்தமாகாம காத்திருந்தாங்க. அவங்களுக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட கம்பேக் மாதிரிதான். வேற எந்த சின்ன பட்ஜெட் படமும் இல்லாம சின்ன நடிகர்கள் கூட நடிக்காமல் இந்தப் படத்தின் வருகைக்காக அவங்களும் காத்திருக்காங்க. ரொம்ப நல்ல நடிகை. இந்தப் படம் வெளியானா அவங்களுக்கும் மிகப்பெரிய ஸ்கோப் இருக்கு.

பாபி தியோல் வில்லனாக நடிச்சிருக்காரு. சத்யராஜ் சார், நாசர் சார் ரெண்டு பேருக்கும் மிகப்பெரிய ஃபேன் பேஸ் இருக்கு. அவங்க ரோல்கள் பேசப்படும்.

நர்கிஸ் ஃபக்ரி, நோராஃபதேகி, அனுபம் கேர்... இப்படி படத்துல முக்கியமான கதாபாத்திரத்தில் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. 

நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் இருக்காங்க. பெரிய கிரவுட், பிரம்மாண்டமான படமா வந்திருக்கு.இலியானா, தமன்னா, ஸ்ரேயா... இப்படி நீங்கள் அறிமுகப்படுத்திய நடிகைகள்தான் இன்றும் சினிமா துறையை ஆட்சி செய்கிறார்கள். ஏன் சமீபத்தில் புதிய நடிகைகள் யாரும் இப்படி நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை?

யாருக்கும் முதலில் நேரமில்லை. கொடுத்த நேரத்தில் கொடுத்த பட்ஜெட்டில் படத்தை முடிச்சாகணும். எங்களுக்கு அவ்வளவு பிரஷர் அப்போது கிடையாது. மேலும் பான் இந்தியா மார்க்கெட், பிரபலமான முகங்களை மட்டும்தான் ஏத்துக்குது. இதற்கிடையிலே புதிதாக ஒரு நபரை தேர்வு செய்து அவர்களுக்கு ஆடிஷன், லுக் டெஸ்ட் இதெல்லாம் முடித்து ரிஸ்க் எடுக்க யாரும் தயாராக இல்லை.

அதனால்தான் இப்போ எல்லாமே இன்ஸ்டன்ட். யாரோ ஒருத்தர் தனக்கான மார்க்கெட்டை செட் செய்திருப்பார். அந்த மார்க்கெட்டையும் படத்தின் மார்க்கெட்டையும் ஒன்னா சேர்த்து எப்படி புரமோட் செய்யலாம்னுதான் யோசிக்கிறாங்க. 

அதுதான் இப்போதைய நிலை. இதற்கிடையிலேயே நிரந்தரமா ஓர் இடம் கிடைக்கணும்னா கடினமா உழைக்கணும். அப்படி உழைச்ச காரணம்தான் இன்னைக்கும் த்ரிஷா, தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்ட சீனியர்கள் தங்களுக்கான இடத்தைத் தக்க வச்சிருக்காங்க.
ஹரிஹர வீர மல்லு’..?

17ம் நூற்றாண்டில் வாழ்ந்த முகலாய மன்னர்களை எதிர்த்து நின்ற இந்திய வீரமல்லுவுடைய கதை. வீரமல்லு கதாபாத்திரத்தில்தான் பவன் கல்யாண் சார் நடிச்சிருக்கார். அவருடைய ரசிகர்களுக்கு ஏத்தமாதிரி நிறைய மாஸ் விஷயங்கள் படத்தில் இருக்கு. அதே சமயம் வரலாற்றுக் கதையையும் இடையூறு செய்யாமல் பேலன்ஸ் செய்து படத்தை உருவாக்கி இருக்கோம். பார்த்துட்டு சொல்லுங்க.

ஷாலினி நியூட்டன்