விக்ரம் பிரபுவுக்காக மிஷ்கின் பாடிய பாடல்
தமிழ் சினிமாவின் நம்பிக் கைக்குரிய ஹீரோக்களில் ஒருவர் விக்ரம் பிரபு. ‘கும்கி’, ‘டாணாக்காரன்’, ‘இறுகப்பற்று’ ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் இவருடைய தனித்துவமான நடிப்பு பேசப்பட்டது.  தற்போது ‘லவ் மேரேஜ்’ செய்துள்ளார். அறிமுக இயக்குநர் சண்முக ப்ரியன் இயக்கியுள்ளார். ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் இயக்குநர். அவ்வளவு பரபரப்புக்கு நடுவே நம்மிடம் பேசினார்.  காதல் கதையில் புதுசா என்ன சொல்லப் போறீங்க?
இது ரொமான்ஸ் கலந்த காதல் ஃபேமிலி டிராமா. 30 வயசுக்குப் பிறகு பசங்களுக்குத் திருமணம் நடக்கவில்லைன்னாஅவர்களுக்குள் மன அழுத்தம் ஏற்படும். இது இயல்பாக எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கக்கூடியது. என்னுடைய ஹீரோ வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது. அதையெல்லாம் கடந்து ஹீரோவுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம்.
 அவுட்லைனைக் கேட்டதும் வழக்கமான கதை மாறி தெரிஞ்சாலும் என்னுடைய டீமுடன் சேர்ந்து விவாதிக்கும்போது பேமிலி டிராமாவுக்கான கன்டன்ட்டா பிரமாதமாக ஒர்க் அவுட்டாகும்னு தெரிஞ்சது. இந்த மாதிரி பிரச்சனைகள் பசங்க வாழ்க்கையில் நடந்திருக்கும் என்பதால் ஆடியன்ஸ் எளிதாக படத்தோட தங்களை கனெக்ட் பண்ணிக்க முடியும்.
நீங்க கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதாக இருந்தால், காதல் கதை என்று வரும்போது புதுசா என்ன சொல்லப்போறோம் என்ற எதிர்பார்ப்பு ஆடியன்ஸ் மனசுல இருக்கும். அதை இந்தப் படம் நிறைவேற்றும். அதுமட்டுல்ல, இதுல வர்ற நகைச்சுவைக் காட்சிகள் புதுசா இருக்கும். டிராக் மாதிரி நாலு காட்சிக்கு நடுவுல கொஞ்சம் நகைச்சுவை என்றில்லாமல் நகைச்சுவைக் காட்சிகள் கதையோடு கலந்திருக்கும்.
விக்ரம் பிரபு தேர்வு எப்படி நடந்துச்சு?
கதை எழுதி முடிச்சதும் விக்ரம் பிரபு பண்ணினால் எப்படியிருக்கும்ன்னு தோணுச்சு. ஏனெனில், இந்த மாதிரி கேரக்டர் அவர் பண்ணியதில்லை. அவருடைய பல படங்கள் ஆக்ஷன் படங்களாகவே வந்துள்ளது. இந்த மாதிரி கதை அவருக்கு ஃப்ரஷ் லுக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்துச்சு. ‘இறுகப்பற்று’ வெளிவந்தபோது அன்னை இல்லத்தில் சந்திச்சு கதை சொன்னேன். கதை சொல்லும்போது ஆர்வத்துடன் கேட்டார்.
கதை பிடிச்சதால பவுண்ட் ஸ்கிரிப்ட் கேட்டு வாங்கினார். ஒரே நாளில் மொத்த ஸ்கிரிப்ட்டையும் படிச்சுட்டு ஓ.கே.சொன்னார்.கதைப்படி அவர் மனவலிமை உள்ளவராக இருந்தாலும் உள்ளுக்குள் எதிர்காலத்துக்கான பாதுகாப்பு இல்லாதவராக ஃபீல் பண்ணக்கூடிய கேரக்டர். ஆனால், அதை வெளியே காண்பிக்காம இருக்கணும்.
நிஜ வாழ்க்கையில் இந்த மாதிரி மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுவதற்குக் குடும்பமும் காரணமாக இருக்கும். சராசரி இளைஞனுக்குள் இருக்கும் அந்த உணர்வுகளை மிக அழகாக பண்ணினார். படம் பார்க்கும் போது விக்ரம் பிரபு என்ற நடிகர் மறந்து ராமச்சந்திரன் என்ற கேரக்டர் மனசுல நிற்கும். அப்படியொரு அற்புதமான நடிப்பைக் கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட்டைப் பொறுத்தவரை உச்சக்கட்ட ஒத்துழைப்பு கொடுப்பார்.
டைமுக்கு ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். கன்டினியூட்டி விஷயத்தில் டைரக்ஷன் டீமைவிட அவரே கவனமாக இருப்பார். அந்த வகையில் அவரிடமிருந்து எங்களுக்கு மிகச் சிறந்த சப்போர்ட் கிடைச்சது. சொல்லப்போனால் பல இடங்களில் என்னுடைய வேலையை மிச்சப்படுத்தினார். மொத்தத்தில் தன்னை இயக்குநரின் நடிகராகவே வெளிப்படுத்தினார்.
ஹீரோயின் புதுமுகமா?
சுஷ்மிதா பட். சினிமா அனுபவம் உள்ளவர். கெளதம் மேனனின் ‘டோமினிக்’ படத்துல மம்மூட்டி சார் ஜோடியாகப் பண்ணியவர். அடிப்படையில் மாடல் என்பதால் புரஃபஷனல் ஆர்ட்டிஸ்ட் மாதிரி அவரிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைச்சது. கன்னடத்துல சில படங்கள் செய்துள்ளார். தமிழில் இதுதான் முதல் படம்.
அப்பா ஊர் சென்னை என்பதால் தமிழ் தெரியும். கதையில் அவருக்கான முக்கியத்துவம் நிறையவே இருக்கும். அம்பிகா என்ற கேரக்டர்ல வர்றார். இன்வால்வ்மென்ட்டுடன் பண்ணினார். அதைப் பார்க்கும்போது விக்ரம் பிரபுவுக்கு ஏத்த ஜோடின்னு சொல்லுவாங்க. அந்தளவுக்கு இருவருக்குமான கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட்டாச்சு. சத்யராஜ் சார் கேமியோ ரோல் செய்துள்ளார். ஆரம்பத்துல சின்ன கேரக்டர் பண்ணனும்மா என்று தயங்கினார். கேரக்டர் சொன்னதும் பிடிச்சுப்போய் உற்சாகமாக பண்ணிகொடுத்தார். இவர்களுடன் ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், ‘கோடாங்கி‘ வடிவேல் முருகன், முருகானந்தம் இருக்கிறார்கள். எல்லோரும் எல்லா காட்சியிலும் இருப்பாங்க.
பாடல்களுக்கு மில்லியன் கணக்கில் வியூஸ் கிடைத்துள்ளதே?
எங்கள் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சாருக்குதான் அந்த பெருமை சேரும். வழக்கமான காதல் கதைக்கான இசையாக இல்லாமல் புது ஸ்டைல் டிரை பண்ணினார். சமீப காலமாக கதையை மூவ் பண்றதுக்கு பாடல்கள் தேவையில்லை என்ற சூழல் உருவாகியிருக்கு. இதுல பாடல்களை வெச்சு கதையை மூவ் பண்ணலாம்ன்னு டிரை பண்ணினோம்.
அது நல்லாவே ஒர்க் அவுட்டாச்சு.ஷான் ரோல்டனுடன் நான் மட்டுமல்ல, எந்த இயக்குநரும் ஒர்க் பண்ண ஆர்வமாக இருப்பாங்க. எனக்கு ரொம்ப அறிமுகம் கிடையாது. சில சிச்சுவேஷன்ல மீட் பண்ணியிருக்கிறேன். படம் பண்றேன்னு சொன்னதும் அவரிடமிருந்து எதிர்பார்க்காதளவுக்கு சப்போர்ட் கிடைச்சது. 5 பாடல்கள். ஒவ்வொரு பாடலையும் வெரைட்டியாக கொடுத்தார். ‘எடுடா பாட்டில்’ என்ற பாடலை மிஷ்கின் சார் பாடியிருக்கிறார். இந்தப் பேட்டி வரும்போது அந்தப் பாடலும் ஹிட்டாகியிருக்கும். மிஷ்கின் சாருக்கு நான் ரசிகன். என்னுடைய படத்தில் எந்த இடத்திலாவது அவருடைய பங்களிப்பு இருக்கணும்னு நெனைச்சேன். அப்ரோச் பண்ணியதும் பிசி ஷெட்யூலுக்கு மத்தியிலும்பாடிக் கொடுத்தார். மோகன் ராஜன் எழுதியுள்ளார்.
மதன் கிறிஸ்டோபர் கேமரா ஹேண்டில் பண்றார். ஆர்.டி.ராஜசேகர் சாரின் உதவியாளர். உதவி இயக்குநர் காலத்திலிருந்து நாங்கள் நண்பர்கள். வழக்கமாக ஃபேமிலி என்டர்டெயினருக்கு என்று ஒரு கலர் மெயின்டெயின் பண்ணுவாங்க. அது இதுல இருக்காது. பாலிவுட் ஸ்டைலில் விஷுவல் இருக்கும். தயாரிப்பு ‘அஷ்யூர் பிலிம்ஸ்’ டாக்டர் ஸ்வேதா, ‘ரைஸ் ஈஸ்ட்’ நிதி சாகர்.
நீங்க யாரிடம் டைரக்ஷன் கத்துக்கிட்டீங்க?
அப்பா வக்கீல். சினிமா பேஷன். டிகிரி முடிச்சுட்டு என்ன வேணும்னா பண்ணிக்கன்னு வீட்ல சொல்லிட்டாங்க. ஆனந்த் சங்கர் சாரிடம் ‘நோட்டா’, ‘எனிமி’ படங்களிலும், ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் ரா.கார்த்திக் சாரிடமும் ஒர்க் பண்ணினேன். இவ்வளவு சீக்கிரத்துல படம் பண்ண காரணம் என்னுடைய இயக்குநர்கள்.
டைரக்ஷனுக்கு என்ன மாதிரி கதைகள் எளிதாக இருக்கும்?
எல்லா படங்களிலும் சவால் இருக்கும். ஆக்ஷன், லவ் என பல ஜானர்ல ஒர்க் பண்ணியிருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். சிலர் அனுபவம் இல்லாமலும் வெற்றி கொடுத்துள்ளார்கள்.
நான் உதவி இயக்குநராக சேர்ந்த காலகட்டத்தில் கார்த்திக் நரேன் சுயாதீன இயக்குநராக வெற்றி கொடுத்தார். ஆனாலும் நான் உதவி இயக்குநராக சேர்ந்து ஒர்க் பண்ணணும்னு நெனைச்சேன். சுயாதீன பட அனுபவம் வேறு. சில படங்களில் ஒர்க் பண்ணும்போது, எந்த மாதிரி கதைகளும் பண்ண முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும்.
எஸ்.ராஜா
|